சனி, 25 மே, 2013

 
|| | | ||||
 
வெற்றிக் கதைகள் :: தொழில் முனைவோர்கள் - 2012
 
    
 
 


நேந்திரன் சிப்ஸ் தயாரிப்பில் கலக்கும் தம்பதி !
25.1.12
நேரடியாக விற்பனை செய்வது; மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது... இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்பது... பல கால பாலபாடம். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே... 'விவசாயத் தொழிலதிபர்கள்' தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்திருப்பது சந்தோஷ சங்கதி! கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த, சுந்தரம், 'விவசாயத் தொழிலதிபர்' என தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறார்! இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இந்த சுந்தரம், தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து, தனது தோட்டத்து வாழை மூலமாகவே சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து, அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.

வழிகாட்டிய நண்பர்!
தோட்டத்துப் பண்ணை வீட்டில், சிப்ஸ் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த, சுந்தரம்-புனிதவதி தம்பதியைச் சந்தித்தபோது... ''அன்னூர்தான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்தோட களிமண் கலந்த நிலம் என்பதால், 24 வருடமாக வாழை வெள்ளாமைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன். மூன்று ஏக்கர் நிலத்தை இரண்டு பகுதியாக பிரித்து, சுழற்சி முறையில் வெள்ளாமை பண்றேன். அதனால் எப்பவும் வாழை இருந்துட்டே இருக்கும். ஆறு வருடத்திற்க்கு முன் நண்பர் ஒருத்தர் மூலமாக பஞ்சகவ்யா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். வாழைக்கு அதை உபயோகப்படுத்தினப்போது, நல்ல பலன் கிடைத்ததால், இயற்கை வழி விவசாயத்திற்க்கு மாற ஆரம்பிச்சேன்.

செலவைக் குறைத்த இயற்கை!
அந்த சமயத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துக்குறதுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதுக்கப்பறம் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு வருடத்தில் அருமையான மாற்றம் தெரிந்தது. மண் நல்ல வளமாயிடுச்சு. வாழையில் நோய்த் தாக்குதலே இல்லாமல்... காயெல்லாம் திரட்சியாக காய்ச்சுது. ரசாயனம் போட்டப்போது... பத்து டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனால், இயற்கைக்கு மாறின பிறகு... பதினைந்து டன் மகசூல் கிடைத்தது. செலவு குறைஞ்சதோட, மகசூலும் அதிகமாக கிடைக்கவே... சந்தோஷமாக நகர ஆரம்பித்தது வாழ்க்கை.

மதிப்புக்கூட்டல்!
என் தோட்டத்துல விளையும் வாழையில் குறிப்பிட்ட அளவை, இயற்கை விளைபொருள் விற்பனை பண்ற ஒருத்தர்தான் வாங்கிக்கறார். மீதியை வெளிமார்க்கெட்டுலதான் கொடுத்தேன். ஆனால், அவர் கூடுதலாக கொடுத்த விலை மாதிரி மத்தவங்க விலை கொடுக்கல. இதைப் பத்தி பேசினப்பதான், 'சிப்ஸ்’ தயாரிக்கற யோசனையை, அந்த வியாபாரியே சொன்னார். 'நேந்திரன்’ ரகத்தை சாகுபடி செய்ததால்... உடனடியாக, சிப்ஸ் தயாரிப்பில் இறங்கிட்டோம்'' என்ற சுந்தரத்தைத் தொடர்ந்தார் புனிதவதி.

கூடுதல் சுவை!
''ஆரம்பத்தில் இவருக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. நான்தான் தைரியம் கொடுத்து, தொழிலைக் கத்துக்கிட்டு வரச்சொன்னேன். நாலு நாள் கத்துக்கிட்டவர், தொழில் தெரிஞ்ச ஆள் ஒருத்தரையும் கூட்டிட்டு வந்துட்டாரு. 'ஆர்கானிக் சிப்ஸ்தான் தயாரிக்கணும்’னு முடிவு பண்ணினோம். அதனால், தேங்காய் எண்ணெயில் இருந்து, தேவையான மத்த சாமான்கள் அத்தனையையும் இயற்கை விளைபொருளாக பார்த்து வாங்கித்தான் தயாரிக்க ஆரம்பிச்சோம். நல்ல திரட்சியான வாழைத் தாரை வெட்டி, சிப்ஸ் போட்டோம். இயற்கையில் விளைஞ்சதால் சுவையும் நல்லா இருந்துச்சு'' என்று புனிதவதி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்.

தினமும் 50 கிலோ சிப்ஸ்!
''தயாரான சிப்ஸை கோயம்புத்தூர்ல இருக்கற நிறைய கடைகளுக்குக் கொண்டு போய் சாம்பிளா கொடுத்தேன். 'இது, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருட்களை வெச்சு தயாரிச்ச சிப்ஸ்'ங்கற விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில கடைகளில் ஆர்டரும் கொடுத்தாங்க. அடுத்த வாரத்தில் நான் திரும்பவும் சாம்பிள் கொடுத்த கடைகளைப் போய்ப் பாத்தேன். 'சிப்ஸ் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாவே இருக்குது’னு சொல்லி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியைக் கூட்டி இப்போ தினம் அம்பது கிலோ உற்பத்தி பண்றோம்.

ஏக்கருக்கு 1 லட்சம் கூடுதல் லாபம்!
15 கிலோ அளவுள்ள வாழைத்தார், குறைஞ்சது 150 ரூபாய் வரைக்கு விலை போகும். அந்தளவுள்ள தாரில் இருந்து, 3 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு கிலோ சிப்ஸுக்கு 150 ரூபாய் விலை கிடைக்கும். 3 கிலோவுக்கு 450 ரூபாய். சிப்ஸ் தயாரிப்பு, போக்குவரத்துச் செலவெல்லாம் போக, 250 ரூபாய் லாபமா கிடைக்கும். வாழையைத் தாரா விற்பனை பண்றதவிட, 100 ரூபாய் கூடுதலா... கிடைக்குது. என் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 1,000 வாழை மரம் இருக்கு. அதை கணக்கு பண்றப்போ... 1 லட்ச ரூபாய் அளவுக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது. கொஞ்சம் மெனக்கெட்டா... நல்ல லாபம் பாக்க முடியும்ங்கறதுக்கு நானே உதாரணம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு : கே.ஆர். சுந்தரம்,
செல்போன்: 96009-16166.

ஆண்டு முழுவதும் பொங்கல் !அசத்தும் சுங்கான்கடை!
25.1.12
பாட் பிரியாணி... ப்ளீஸ்!', 'பாட் ரைஸ் ப்ளீஸ்!', 'பாட் வத்தக் குழம்பு வேணுமா?' - இதுபோன்றக் குரல்களை, ஐந்து நட்சத்திர உணவகங்களில் இப்போது அதிகமாகவே கேட்க முடிகிறது! ஆங்கிலத்தில் 'பாட்' என்றழைக்கப்படும், நம்முடைய பாரம்பரிய மண்பானைகளுக்கு, இப்போது மரியாதை கூடி வருகிறது!ஆம்... இரும்பு, பித்தளை, அலுமினியம், குக்கர், நான்ஸ்டிக், காப்பர் பாட்டம்... இவை எதுவுமே மண்பானைச் சமையலுக்கு ஈடு இணையாகாது! மண்பானைச் சாப்பாட்டை ருசித்தவர்களுக்குத்தான் அந்த உண்மை தெரியும்!
பல்லாயிரம் ஆண்டுகளாக, சமையல் உள்ளிட்ட பலவேறு தேவைகளுக்கும் தமிழர்கள் பயன்படுத்தி வந்த இந்தப் பானைகள்... இந்தப் பதினைந்து, இருபது ஆண்டுகளாகத்தான் திடீர் என காணமால் போக ஆரம்பித்தன. 'மண் பானையில் சமைப்பது கௌரவக் குறைச்சல்' என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்மவர்கள் அதைக் கைவிட ஆரம்பித்தனர். என்றாலும், ஆண்டுக்கு ஒரு தடவை, தைப் பொங்கல் திருநாளன்று மண்பானையில் பொங்கல் வைப்பது மட்டும் பெரும்பாலானவர்களால் கைவிடப்படவில்லை. அத்தோடு, கோயில்களில் பொங்கல் வைப்பது, புதுக் கல்யாணத் தம்பதிகளுக்கு பானை தருவது, கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்குக் கலசம் வைப்பது என்பது போன்ற ஒன்றிரண்டு சம்பிரதாயங்களின் புண்ணியத்தால்...இன்றளவும் மண்பானையும் வாழ்கிறது!

தமிழகம் முழுவதுமே பானை செய்யும் தொழில் நடைபெற்றாலும்... சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி கிராமங்கள்... கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை கிராமம்... என மண்பானைக்கெனவே பிரத்யேக ஊர்கள் பல இருக்கின்றன! பொங்கலுக்காக நாம் பயணித்தது... நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் சுங்கான்கடை கிராமத்துக்குத்தான்!திரும்பியப் பக்கமெல்லாம் மண்பானைகள்தான் குவித்து வைக்கப்பட்டுள்ளன. புகைந்து கொண்டிருக்கும் சூளைகள்... பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் மண்குவியல்கள்... பானை உற்பத்தி என... காலைவேளையிலேயே, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த கிராமம்.
மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருக்கும் விஸ்வத்திடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... ''தாழக்குடி, தளக்குலம், தேரேகால்புதூர்னு ஏகப்பட்ட கிராமங்கள்ல மண்பாண்டம் செய்யுற தொழிலாளர்கள் ஒரு காலத்துல நிறைஞ்சிருந்தாங்க. மண் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லாததால, வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க. எங்க கிராமத்துல மட்டும் இன்னமும் அந்தத்தொழில் நடந்துக்கிட்டிருக்கு. இதை நம்பி, நூத்துக்கணக்கானக் குடும்பங்க இருக்குது.

இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவுல பானைகள் போகுது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்கல், சக்களத்துக்காவு பகவதி அம்மன் கோவில் பொங்கல்னு கேரளா கோவில்கள்ல வருஷம் முழுக்கவே பொங்கல் வைக்கிற விழா நடந்துக்கிட்டே இருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைப்பாங்க. அதனால, வருஷம் முழுக்கவே நாங்க பானைகளை உற்பத்தி பண்ணிக்கிட்டே இருக்கோம். தைப் பொங்கல் வந்துட்டா... தமிழ்நாட்டுல சுங்கான்கடை பானைக்கு மவுசு வந்துடும்.தோவாளை பெரியகுளத்தில் இருந்து களிமண் எடுத்துட்டு வந்துதான் பானை செய்றோம். அந்த மண்ல செஞ்சா... பானை நல்லா உறுதியா இருக்கறதால நல்ல விலையும் கிடைக்குது. கால் கிலோ அளவான பொங்கல் பானை, சாதாரணமா 10 ரூபாய்க்கு விக்கும். பொங்கல் சமயத்துல 14 ரூபாய் வரை விக்கும். ஒரு கிலோ பானை... சாதாரண நேரங்கள்ல 25 ரூபாய்க்கும், பொங்கல் நேரத்துல 30 ரூபாய்க்கும் வித்துக்கிட்டிருக்கு.
இதுபோக மீன் சட்டி, பூந்தொட்டி, தண்ணீர்ப் பானை, கலைப் பொருட்கள்னு நிறைய தயார் பண்றோம். முன்ன, மாட்டு வண்டிச் சக்கரத்தை சுத்தி செய்வோம். இப்போ எல்லாரும் மோட்டாருக்கு மாறிட்டோம். அதனால குறைவான நேரத்துல அதிகமா உற்பத்தி பண்ண முடியுது'' என்று சொன்னார்.     

அடுத்து நம்மிடம் பேசிய வேணு, ''படிக்க வசதியில்லாம, சின்ன வயசுலயே பானை செய்ற வேலைக்கு வந்துட்டேன். இன்னிக்கு என் குடும்ப பாரத்தையே இந்தப் பானைதான் சுமக்குது. எங்க கூட்டுறவுச் சங்கத்து மூலமா, மாசத்துக்கு 50 லாரி லோடு அளவுக்கு பானைகளை அனுப்பிட்டு இருக்கோம்'' என்றபடியே சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தில் வண்டல் மண், களிமண் சேர்ந்தக் கலவையை வைத்து லாவகமாக கைகளை மேலும் கீழுமாக மாற்றி மாற்றி பிடிக்க... சில வினாடிகளில் உருவாகி நின்றது அழகியப் பானையன்று!
இப்படி உருவாகும் பானைகளை, நான்கு மணி நேரம் வெயிலில் காயவைத்து 'காவி’ அடித்து, மீண்டும் மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கிறார்கள். 35 நாட்கள் கழித்து மொத்தப் பானைகளையும் நான்கு மணி நேரம் சூளையில் வைத்து எடுத்தால்... திடமானப் பானைகள் தயார். 

'பொன்மலை திருமலை மண்பாண்ட கூட்டுறவுச் சங்கம்’ சங்கத்தின் உதவிச் செயலாளர் கிரீனா ராணி, ''82-ம் வருஷம் ஆரம்பிச்சது இந்தச் சங்கம். இப்ப 155 உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த ஊர்ல சில்லறையாவும் நிறைய பேர் பானை விற்பனை பண்றாங்க. கூட்டுறவுச் சங்கம் மூலமா கொள்முதல் பண்ணியும் விற்பனை பண்றோம். சங்கத்துல உறுப்பினரா இருக்கறவங்களுக்கு விற்பனை வாய்பு உறுதியா இருக்கு. அதனால, எல்லா பகுதிகள்லயும் இதுமாதிரி சங்கம் ஆரம்பிச்சா... இந்தத் தொழில்ல இருக்குறவங்க, பொருளாதார ரீதியா முன்னுக்கு வர்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்று சொன்னார்.
தொடர்புக்கு
விஸ்வம், செல்போன்: 90471-92757
 
  
  
 
 
  
  
 
 
 
 
  
வல்லுனரை கேளுங்கள்
 
   
 
|| | | ||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக