சனி, 25 மே, 2013

 
|| | | ||||
 
வெற்றிக் கதைகள் :: தொழில் முனைவோர்கள் - 2012
 
    
 
 


நேந்திரன் சிப்ஸ் தயாரிப்பில் கலக்கும் தம்பதி !
25.1.12
நேரடியாக விற்பனை செய்வது; மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது... இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்பது... பல கால பாலபாடம். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே... 'விவசாயத் தொழிலதிபர்கள்' தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்திருப்பது சந்தோஷ சங்கதி! கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த, சுந்தரம், 'விவசாயத் தொழிலதிபர்' என தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறார்! இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இந்த சுந்தரம், தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து, தனது தோட்டத்து வாழை மூலமாகவே சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து, அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.

வழிகாட்டிய நண்பர்!
தோட்டத்துப் பண்ணை வீட்டில், சிப்ஸ் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த, சுந்தரம்-புனிதவதி தம்பதியைச் சந்தித்தபோது... ''அன்னூர்தான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்தோட களிமண் கலந்த நிலம் என்பதால், 24 வருடமாக வாழை வெள்ளாமைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன். மூன்று ஏக்கர் நிலத்தை இரண்டு பகுதியாக பிரித்து, சுழற்சி முறையில் வெள்ளாமை பண்றேன். அதனால் எப்பவும் வாழை இருந்துட்டே இருக்கும். ஆறு வருடத்திற்க்கு முன் நண்பர் ஒருத்தர் மூலமாக பஞ்சகவ்யா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். வாழைக்கு அதை உபயோகப்படுத்தினப்போது, நல்ல பலன் கிடைத்ததால், இயற்கை வழி விவசாயத்திற்க்கு மாற ஆரம்பிச்சேன்.

செலவைக் குறைத்த இயற்கை!
அந்த சமயத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துக்குறதுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதுக்கப்பறம் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு வருடத்தில் அருமையான மாற்றம் தெரிந்தது. மண் நல்ல வளமாயிடுச்சு. வாழையில் நோய்த் தாக்குதலே இல்லாமல்... காயெல்லாம் திரட்சியாக காய்ச்சுது. ரசாயனம் போட்டப்போது... பத்து டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனால், இயற்கைக்கு மாறின பிறகு... பதினைந்து டன் மகசூல் கிடைத்தது. செலவு குறைஞ்சதோட, மகசூலும் அதிகமாக கிடைக்கவே... சந்தோஷமாக நகர ஆரம்பித்தது வாழ்க்கை.

மதிப்புக்கூட்டல்!
என் தோட்டத்துல விளையும் வாழையில் குறிப்பிட்ட அளவை, இயற்கை விளைபொருள் விற்பனை பண்ற ஒருத்தர்தான் வாங்கிக்கறார். மீதியை வெளிமார்க்கெட்டுலதான் கொடுத்தேன். ஆனால், அவர் கூடுதலாக கொடுத்த விலை மாதிரி மத்தவங்க விலை கொடுக்கல. இதைப் பத்தி பேசினப்பதான், 'சிப்ஸ்’ தயாரிக்கற யோசனையை, அந்த வியாபாரியே சொன்னார். 'நேந்திரன்’ ரகத்தை சாகுபடி செய்ததால்... உடனடியாக, சிப்ஸ் தயாரிப்பில் இறங்கிட்டோம்'' என்ற சுந்தரத்தைத் தொடர்ந்தார் புனிதவதி.

கூடுதல் சுவை!
''ஆரம்பத்தில் இவருக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. நான்தான் தைரியம் கொடுத்து, தொழிலைக் கத்துக்கிட்டு வரச்சொன்னேன். நாலு நாள் கத்துக்கிட்டவர், தொழில் தெரிஞ்ச ஆள் ஒருத்தரையும் கூட்டிட்டு வந்துட்டாரு. 'ஆர்கானிக் சிப்ஸ்தான் தயாரிக்கணும்’னு முடிவு பண்ணினோம். அதனால், தேங்காய் எண்ணெயில் இருந்து, தேவையான மத்த சாமான்கள் அத்தனையையும் இயற்கை விளைபொருளாக பார்த்து வாங்கித்தான் தயாரிக்க ஆரம்பிச்சோம். நல்ல திரட்சியான வாழைத் தாரை வெட்டி, சிப்ஸ் போட்டோம். இயற்கையில் விளைஞ்சதால் சுவையும் நல்லா இருந்துச்சு'' என்று புனிதவதி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்.

தினமும் 50 கிலோ சிப்ஸ்!
''தயாரான சிப்ஸை கோயம்புத்தூர்ல இருக்கற நிறைய கடைகளுக்குக் கொண்டு போய் சாம்பிளா கொடுத்தேன். 'இது, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருட்களை வெச்சு தயாரிச்ச சிப்ஸ்'ங்கற விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில கடைகளில் ஆர்டரும் கொடுத்தாங்க. அடுத்த வாரத்தில் நான் திரும்பவும் சாம்பிள் கொடுத்த கடைகளைப் போய்ப் பாத்தேன். 'சிப்ஸ் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாவே இருக்குது’னு சொல்லி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியைக் கூட்டி இப்போ தினம் அம்பது கிலோ உற்பத்தி பண்றோம்.

ஏக்கருக்கு 1 லட்சம் கூடுதல் லாபம்!
15 கிலோ அளவுள்ள வாழைத்தார், குறைஞ்சது 150 ரூபாய் வரைக்கு விலை போகும். அந்தளவுள்ள தாரில் இருந்து, 3 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு கிலோ சிப்ஸுக்கு 150 ரூபாய் விலை கிடைக்கும். 3 கிலோவுக்கு 450 ரூபாய். சிப்ஸ் தயாரிப்பு, போக்குவரத்துச் செலவெல்லாம் போக, 250 ரூபாய் லாபமா கிடைக்கும். வாழையைத் தாரா விற்பனை பண்றதவிட, 100 ரூபாய் கூடுதலா... கிடைக்குது. என் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 1,000 வாழை மரம் இருக்கு. அதை கணக்கு பண்றப்போ... 1 லட்ச ரூபாய் அளவுக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது. கொஞ்சம் மெனக்கெட்டா... நல்ல லாபம் பாக்க முடியும்ங்கறதுக்கு நானே உதாரணம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு : கே.ஆர். சுந்தரம்,
செல்போன்: 96009-16166.

ஆண்டு முழுவதும் பொங்கல் !அசத்தும் சுங்கான்கடை!
25.1.12
பாட் பிரியாணி... ப்ளீஸ்!', 'பாட் ரைஸ் ப்ளீஸ்!', 'பாட் வத்தக் குழம்பு வேணுமா?' - இதுபோன்றக் குரல்களை, ஐந்து நட்சத்திர உணவகங்களில் இப்போது அதிகமாகவே கேட்க முடிகிறது! ஆங்கிலத்தில் 'பாட்' என்றழைக்கப்படும், நம்முடைய பாரம்பரிய மண்பானைகளுக்கு, இப்போது மரியாதை கூடி வருகிறது!ஆம்... இரும்பு, பித்தளை, அலுமினியம், குக்கர், நான்ஸ்டிக், காப்பர் பாட்டம்... இவை எதுவுமே மண்பானைச் சமையலுக்கு ஈடு இணையாகாது! மண்பானைச் சாப்பாட்டை ருசித்தவர்களுக்குத்தான் அந்த உண்மை தெரியும்!
பல்லாயிரம் ஆண்டுகளாக, சமையல் உள்ளிட்ட பலவேறு தேவைகளுக்கும் தமிழர்கள் பயன்படுத்தி வந்த இந்தப் பானைகள்... இந்தப் பதினைந்து, இருபது ஆண்டுகளாகத்தான் திடீர் என காணமால் போக ஆரம்பித்தன. 'மண் பானையில் சமைப்பது கௌரவக் குறைச்சல்' என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்மவர்கள் அதைக் கைவிட ஆரம்பித்தனர். என்றாலும், ஆண்டுக்கு ஒரு தடவை, தைப் பொங்கல் திருநாளன்று மண்பானையில் பொங்கல் வைப்பது மட்டும் பெரும்பாலானவர்களால் கைவிடப்படவில்லை. அத்தோடு, கோயில்களில் பொங்கல் வைப்பது, புதுக் கல்யாணத் தம்பதிகளுக்கு பானை தருவது, கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்குக் கலசம் வைப்பது என்பது போன்ற ஒன்றிரண்டு சம்பிரதாயங்களின் புண்ணியத்தால்...இன்றளவும் மண்பானையும் வாழ்கிறது!

தமிழகம் முழுவதுமே பானை செய்யும் தொழில் நடைபெற்றாலும்... சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி கிராமங்கள்... கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை கிராமம்... என மண்பானைக்கெனவே பிரத்யேக ஊர்கள் பல இருக்கின்றன! பொங்கலுக்காக நாம் பயணித்தது... நாகர்கோவிலுக்கு அருகே இருக்கும் சுங்கான்கடை கிராமத்துக்குத்தான்!திரும்பியப் பக்கமெல்லாம் மண்பானைகள்தான் குவித்து வைக்கப்பட்டுள்ளன. புகைந்து கொண்டிருக்கும் சூளைகள்... பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் மண்குவியல்கள்... பானை உற்பத்தி என... காலைவேளையிலேயே, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த கிராமம்.
மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருக்கும் விஸ்வத்திடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... ''தாழக்குடி, தளக்குலம், தேரேகால்புதூர்னு ஏகப்பட்ட கிராமங்கள்ல மண்பாண்டம் செய்யுற தொழிலாளர்கள் ஒரு காலத்துல நிறைஞ்சிருந்தாங்க. மண் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லாததால, வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க. எங்க கிராமத்துல மட்டும் இன்னமும் அந்தத்தொழில் நடந்துக்கிட்டிருக்கு. இதை நம்பி, நூத்துக்கணக்கானக் குடும்பங்க இருக்குது.

இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவுல பானைகள் போகுது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பொங்கல், சக்களத்துக்காவு பகவதி அம்மன் கோவில் பொங்கல்னு கேரளா கோவில்கள்ல வருஷம் முழுக்கவே பொங்கல் வைக்கிற விழா நடந்துக்கிட்டே இருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைப்பாங்க. அதனால, வருஷம் முழுக்கவே நாங்க பானைகளை உற்பத்தி பண்ணிக்கிட்டே இருக்கோம். தைப் பொங்கல் வந்துட்டா... தமிழ்நாட்டுல சுங்கான்கடை பானைக்கு மவுசு வந்துடும்.தோவாளை பெரியகுளத்தில் இருந்து களிமண் எடுத்துட்டு வந்துதான் பானை செய்றோம். அந்த மண்ல செஞ்சா... பானை நல்லா உறுதியா இருக்கறதால நல்ல விலையும் கிடைக்குது. கால் கிலோ அளவான பொங்கல் பானை, சாதாரணமா 10 ரூபாய்க்கு விக்கும். பொங்கல் சமயத்துல 14 ரூபாய் வரை விக்கும். ஒரு கிலோ பானை... சாதாரண நேரங்கள்ல 25 ரூபாய்க்கும், பொங்கல் நேரத்துல 30 ரூபாய்க்கும் வித்துக்கிட்டிருக்கு.
இதுபோக மீன் சட்டி, பூந்தொட்டி, தண்ணீர்ப் பானை, கலைப் பொருட்கள்னு நிறைய தயார் பண்றோம். முன்ன, மாட்டு வண்டிச் சக்கரத்தை சுத்தி செய்வோம். இப்போ எல்லாரும் மோட்டாருக்கு மாறிட்டோம். அதனால குறைவான நேரத்துல அதிகமா உற்பத்தி பண்ண முடியுது'' என்று சொன்னார்.     

அடுத்து நம்மிடம் பேசிய வேணு, ''படிக்க வசதியில்லாம, சின்ன வயசுலயே பானை செய்ற வேலைக்கு வந்துட்டேன். இன்னிக்கு என் குடும்ப பாரத்தையே இந்தப் பானைதான் சுமக்குது. எங்க கூட்டுறவுச் சங்கத்து மூலமா, மாசத்துக்கு 50 லாரி லோடு அளவுக்கு பானைகளை அனுப்பிட்டு இருக்கோம்'' என்றபடியே சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தில் வண்டல் மண், களிமண் சேர்ந்தக் கலவையை வைத்து லாவகமாக கைகளை மேலும் கீழுமாக மாற்றி மாற்றி பிடிக்க... சில வினாடிகளில் உருவாகி நின்றது அழகியப் பானையன்று!
இப்படி உருவாகும் பானைகளை, நான்கு மணி நேரம் வெயிலில் காயவைத்து 'காவி’ அடித்து, மீண்டும் மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கிறார்கள். 35 நாட்கள் கழித்து மொத்தப் பானைகளையும் நான்கு மணி நேரம் சூளையில் வைத்து எடுத்தால்... திடமானப் பானைகள் தயார். 

'பொன்மலை திருமலை மண்பாண்ட கூட்டுறவுச் சங்கம்’ சங்கத்தின் உதவிச் செயலாளர் கிரீனா ராணி, ''82-ம் வருஷம் ஆரம்பிச்சது இந்தச் சங்கம். இப்ப 155 உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த ஊர்ல சில்லறையாவும் நிறைய பேர் பானை விற்பனை பண்றாங்க. கூட்டுறவுச் சங்கம் மூலமா கொள்முதல் பண்ணியும் விற்பனை பண்றோம். சங்கத்துல உறுப்பினரா இருக்கறவங்களுக்கு விற்பனை வாய்பு உறுதியா இருக்கு. அதனால, எல்லா பகுதிகள்லயும் இதுமாதிரி சங்கம் ஆரம்பிச்சா... இந்தத் தொழில்ல இருக்குறவங்க, பொருளாதார ரீதியா முன்னுக்கு வர்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்று சொன்னார்.
தொடர்புக்கு
விஸ்வம், செல்போன்: 90471-92757
 
  
  
 
 
  
  
 
 
 
 
  
வல்லுனரை கேளுங்கள்
 
   
 
|| | | ||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

வெற்றிக் கதைகள்



மகத்தான மகசூல் கொடுக்கும் ‘மருந்து வெங்காயம்’

25.12.12

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்த ‘பெல்லாரி’ வெங்காயத்தைத் தொடர்நது தற்போது வேகமாக பரவி வருகிறது ‘மருந்து வெங்காயம்’ எனப்படும் ‘ரோஸ் வெங்காயம்’ கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் இந்த வகை வெங்காயம், முழுக்க முழுக்க ஏற்றுமதிக்காக மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் ‘மருந்து வெங்காயம்’ என்ற பெயரில் இது பிரபலமாகிவிட்டது. தற்பொழுது ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இது அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மருந்து வெங்காயத்தை ஆறரை ஏக்கரில் சாகுபடி செய்து, மூன்று மாதங்களில் 18 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டியிருக்கிறார், முனிராஜ் எனும் விவசாயி. ஒசூர் ராயக்கோட்டை சாலையில் பதினான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது பீர்ஜே பள்ளி கிராமம். இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, முனிராஜின் தோட்டம். தென்னை, பீன்ஸ், வெங்காயம் என பசுமை காட்டி நிற்க இன்னொரு புறம் மருந்து வெங்காய அறுவடை மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இவர் எப்பொழுதும் தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோசு, காலிஃபிளவர், கொத்தமல்லி என்று மூன்று மாத பயிர்களைத்தான் சாகுபடி செய்துவந்துள்ளார். எந்தப் பயிராக இருந்தாலும் தண்ணீர் பராமரிப்பு என்று கவனமாக இருப்பதாக கூறுகிறார். அதனால் மற்றவர்களைவிட அதிக விளைச்சல் மற்றும் காய்கறிகளும் நன்றாக இருப்பதாக கூறுகிறார்.
ஜெகநாதன் வாத்தியார் கர்நாடகாவில் விளைகிற மருந்து வெங்காயத்தைப் பற்றி ஒரு நாள் கூறியுள்ளார். அதைகேட்ட முனிராஜ் இதுவும் மூன்று மாதப் பயிர்தானே என்று ஆறரை ஏக்கரில் பயிரிட்டு நல்ல விளைச்சல் கிடைத்ததோடு வருமானமும் கிடைத்ததால் அதையே தொடர்ந்து பயிரிட ஆரம்பித்ததாக கூறுகிறார் முனிராஜ்.
மலை அடிவாரப் பகுதிகள் ஏற்றவை
இதை திருவண்ணாமலை பகுதியில் சாகுபடி செய்து பார்த்தார்கள். ஆனால் சரியாக வரவில்லை. ஆனால் மலை பிரதேசங்கள் ஒட்டிய பகுதிகளில் இது நன்றாக விளைச்சல் தருகிறது.
குறிப்பாக திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் முயற்சி செய்து பார்க்கலாம். முதல் முறை என்பதால் இரசாயன உரங்களைக் கொண்டுதான் விளைய வைத்துள்ளார். இனிமேல்தான் இயற்கை உரங்கள் மூலமாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றார். எப்படிப் பார்த்தாலும் ஒரு மூட்டை வெங்காயம், 500 ரூபாய்க்கு கீழ் குறைய வாய்பில்லை. அதனால் நஷ்டம் வரவே வராது என்று உறுதியாகச் சொன்ன முனிராஜ், ஒரு ஏக்கர் நிலத்தில் மருந்து வெங்காயத்தை சாகுபடி செய்யும் விதத்தை சொல்ல ஆரம்பித்தார்.
ஏக்கருக்கு 12 கிலோ விதை
            மருந்து வெங்காயம் மூன்று மாதப் பயிர். நிலத்தை உழுது, வெயிலில் நன்றாக காயவிட்டு ஓர் உழவு செய்து, அடியுரத்துடன் வெங்காய விதையையும் கலந்து தூவி விடவேண்டும். ஏக்கருக்கு 12 கிலோ விதை தேவைப்படும். பிறகு, 5 கலப்பையால் கரைகளை அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வசதியாக பாத்திகளை அமைத்து. பாசனம் செய்ய வேண்டும். 8 முதல் 10 நாட்களுக்குள் விதை முளைத்துவிடும்.  20-ம் நாள் ஏக்கருக்கு 25 கிலோ யூரியாவைத் தூவ வேண்டும். 25-ம் நாளுக்குப் பிறகு 100 கிலோ பாக்டாம்பாஸ் உரத்தைக் கொடுக்க வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை களைகளை முழுவதுமாக எடுத்து வர வேண்டும்.
            அப்பொழுதுதான் பயிர் நன்றாக வளரும். விதைத்து 45 நாட்கள் வரை 4 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். பிறகு, அறுவடை வரை 2  நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. 60-ம் நாளில், ஏக்கருக்கு 100 கிலோ கலப்பு உரம் வைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 65-ம் நாளுக்கு மேல் பயிரின் வளர்ச்சியைக் கணக்கிட்டு, தேவைப்பட்டால் யூரியா இட வேண்டும். 90 நாட்களுக்கு மேல், காய் திரண்டிருப்பதை வைத்து, அறுவடையைத் தொடங்கலாம். அறுவடை செய்த வெங்காயத்தை, வயலில் 5 நாட்கள் காயப் போட்டு, காய்ந்த சருகுபளை நீக்கி, மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்து வைக்க வேண்டும். பிறகு, மூட்டைப் பிடித்து விற்பனை செய்யலாம்.
            ஆரம்பத்தில் இவர் இரண்டரை ஏக்கரில் போட்டுள்ளார். அது நல்ல செம்மண் பூமி. அதோட நட்ட சமயத்தில் மெல் மழையும் கிடைத்துள்ளது. 650 மூட்டை (50 கிலோ மூட்டை) மகசூல் கிடைத்தது. கிலோ 30 ரூபாய் என்று ஒரு மூட்டை 1,500 ரூபாய்க்கு விலை போனது. 650 மூட்டைக்கு 9 லட்சத்து 75 அயிரம் ரூபாய் கிடைத்தது. அடுத்த படியாக, மீதி இருக்கிற நான்கு ஏக்கரிலும் இதையே பயிர் செய்துள்ளார். ஆளால், மொத்தமே 550 மூட்டைதான் கிடைத்துள்ளது. இது சுண்ணாம்பு கலந்த மண், அதோட மழையும் சரியாக கிடைக்கவில்லை. அதனால்தான் மகசூல் குறைவு. இதில் 300 மூட்டையை ஒரு மூட்டை 1,800 ரூபாய்க்கு விற்றதில் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், 250 மூட்டையை ஒரு மூட்டை 1,500 ரூபாய் என்றும் விற்றதில் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.  ஆகமொத்தம் ஆறரை ஏக்கரில் இருந்து 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய். ஒரு ஏக்கருக்கு 31 அயிரத்து 640 ரூபாய் செலவு. மொத்த செலவு 2 லட்சத்து 5 அயிரத்து 660 ரூபாய். செலவு போக மொத்தம் ஆறரை ஏக்கரில் இருந்து 16 லட்சத்து 84 ஆயிரத்து 340 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று மகிழ்ச்சியாக கூறினார்.
தொடர்புக்கு
முனிராஜ்
செல்போன் : 90953-50311
சுப்ரமணியம் – 99425-96971
பாலு – 98947-24236
தலைவர் மற்றும் பேராசிரியர்
காய்கறிப் பயரிகள் துறை, தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தொலைபேசி – 0422-6611283
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.12.12 www.vikatan.com
சம்பங்கி + விரிச்சிப் பூ... லாபக் கூட்டணி

25.11.12

பெரும்பாலான இயற்கை விவசாயிகள், தங்கள் விளைநிலங்களையே ஆராய்ச்சிக் களங்கள் என மாற்றி, பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு.. தங்களுக்கான தொழில்நுட்பங்களையும், புதிய யுக்திகளையும் கண்டுபிடிப்பது வழக்கம். திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், அத்தகையோரில் ஒருவர்.
இவர், விரிச்சிப் பூ செடிகளுக்கிடையே, சோதனை முயற்சியாக சம்பங்கியை ஊடுபயிராக சாகுபடி செய்து, வெற்றிகரமாக மகசூல் எடுத்திருக்கிறார். சுந்தர்ராஜை சந்தித்தபோது.. மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண்ணும் மணலும் கலந்த பூமி. ஒன்றரை ஏக்கரில் சம்பங்கி, 40 சென்ட்டில் செண்டுமல்லி என்று சாகுபடி செய்கிறேன். மீதி இருக்கும் 60 சென்ட்டில்தான் விரிச்சியும் அதில் ஊடுபயிராக சம்பங்கியும் போட்டிருக்கிறேன்.
எனக்கு தெரிந்த வரைக்கும் விரிச்சியில், யாரும் சம்பங்கியை ஊடுபயிராக போட்டதில்லை. மூன்று வருடத்திற்கு முன் சோதனை முயற்சியாக... 20 சென்ட்டில் மட்டும் இரண்டையும் பயிர் செய்தேன். அதில் இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் நல்ல மகசூல் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பங்கியிலேயே வருமானம். இப்போது விரிச்சியில் தினமும் பத்து கிலோ அளவிற்கு பூ கிடைக்கிறது. அது மூலமாக தினமும் 750 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த இரண்டு பயிரும் ஒன்றுக்கொன்று துணையாக அமைந்து நல்ல மகசூல் கிடைப்பதால்.... அடுத்த 40 சென்ட்டிலும்  இந்த இரண்டையுமே போட்டிருக்கிறேன்.
களைகளைக் கட்டுப்படுத்த பாலிதீன்!
சாகுபடி நிலத்தில் 4 சால் உழவு ஓட்டி, 40 சென்ட் நிலத்திற்கு 10 டன் மாட்டு எரு என்ற கணக்கில் போட்டு, மீண்டும் 2 சால் உழவு ஓட்ட வேண்டும். இரண்டே முக்கால் அடி அகலம்,  முக்கால் அடி உயரம் என முக்கால் அடி இடைவெளியில், பார்களை அமைக்க வேண்டும். பாரின் மீது 3 அடி அகலம் கொண்ட பாலிதீன் விரிப்புகளை விரித்து... அதன் மேல் 20 அடி இடைவெளிக்கு ஒரு சுழலும் திறப்பான் உள்ளவாறு தெளிப்பு நிர்ப் பாசனம் அமைக்க வேண்டும். நடவு மற்றும் விதைப்பு செய்ய வேண்டிய இடங்களில் மட்டும் 3 இஞ்ச் குழாய் ஒன்றைப் பயன்படுத்தி பாலிதீன் விரிப்பில் துளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதனால், களைகள் வளர்வதேயில்லை.
பாரின் நடுவில் 8 அடி இடைவெளியில் விரிச்சி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். பாரின் இரு ஓரங்களிலும் ஒன்றரையடி இடைவெளியில்  சம்பங்கிக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப பாசனம் செய்தால் போதுமானது. விதைத்த 15-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலலை வடிகட்டி தெளிப்பு நீர் வழியாகத் தர வேண்டும்.
30-ம் நாள் தலா ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை 50 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். 40 –ம் நாள் ஒரு கிலோ ட்ரைக்கோ டெர்மாவிரிடியை 50 கிலோ மாட்டு எருவில் கலந்து, செடிகளைச் சுற்றிலும் தூவ வேண்டும். 50-ம் நாள் அரை லிட்டர் தேங்காய் பாலில் 3 லிட்டர் மோர், ஒரு கிலோ வெல்லம் கலந்து இரண்டு நாட்கள் வைத்திருந்து... அதோடு ஒரு கிலோ சூடோமோனஸ், 50 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், செடியின் வளர்ச்சி வேகமெடுப்பதோடு, பூஞ்சணத் தாக்குதலும் கட்டுப்படும்.
65-ம் நாளில் இருந்து இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை தெளித்து வர வேண்டும். சம்பங்கயில் 65-ம் நாளில் பூ பூக்கத் தொடங்கும். 100 –ம் நாள், 200 கிலோ மண்புழு உரத்தை செடிகளின் தூரில் தூவ வேண்டும். 120-ம் நாள் 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 30 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து தூவ வேண்டும். 130-ம் நாளில் இருந்து மாதம் ஒரு முறை ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும்.
10 வருடம் வரை விரிச்சி!
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு கால் கிலோ அளவிற்க்குத்தான் சம்பங்கி பூ கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரித்து 90-ம் நாளுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வரைக்கும் பூ கிடைக்க ஆரம்பிக்கும். இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் மகசூல் பார்க்கலாம். அதற்குப் பிறகு விரிச்சிச் செடிகள் நாலரையடி உயரத்திற்கு வளர்ந்து படர ஆரம்பிக்கும். அப்போது நிழல் கட்டிடுவதால் சம்பங்கியில் மகசூல் நின்றுவிடும். அப்போது சம்பங்கிச் செடியை அடிக்கிழங்கோடு பிடுங்கி, இலை, குச்சிகளை வெட்டிவிட்டு விதைக்கிழங்காக விற்றுவிடலாம். விரிச்சி மூலமாக 10 வருடம் வரைக்கும் வருமானம் கிடைக்கும் என்றார்.
தொடர்புக்கு
சுந்தர்ராஜ், செல்போன்: 98432-47106
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.11.12 www.vikatan.com
முருங்கை + மல்லிகை + வெண்தேக்கு

10.11.12

மணக்கிறது மகா கூட்டணி...
ஒரே பயிரை நம்பி உழுதால்.. உலை வைக்க முடியாது... இது கிராமத்தில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் சொலவடை அந்தளவிற்கு ஊடுபயிர் விவசாயம் நம் முன்னோர்களுக்குள் ஊறிப்போன ஒன்று. பசுமைப் புரட்சி என்ற மாயையால் காணாமல் போனது, இந்த கலப்புப் பயிர் விவசாயம். ஆனாலும், வழக்கத்தை விடாத விவசாயிகள் சிலர், இன்றும் ஊடுபயிர் சாகுபடியை விடாமல் செய்து வருகிறார்கள். இந்த ராஜேந்திரனைப் போல.
தேனி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரான ராஜேந்திரன், கொஞ்சமாகக் கிடைக்கும் கிணற்று நீரை வைத்தே மல்லிகைப் பூ விவசாயத்தை முதலில் துவங்கி, பிறகு படிப்படியாக முருங்கை, வெண்தேக்கு என அதற்குள்ளேயே நடவு செய்து, நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.
தோட்டத்தில் தனது செல்ல நாய்களை மட்டும்  துணைக்கு வைத்துக் கொண்டு தனி ஆளாக, முருங்கைக்கு இடையில் களை எடுத்துக் கொண்டிருந்த ராஜேந்திரனை சந்தித்தபோது, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
இந்த இரண்டரை ஏக்கர்தான் என்னுடைய பூர்வீகச் சொத்து, கண்டமனூருக்குத் அருகில் வைகை ஓடினாலும், மழைக் காலத்தில்கூட கிணற்றில் கொஞ்சமாகத்தான் தண்ணீர் ஊறும். அதில் அரைக்குழிக்குத்தான் (30 சென்ட் நிலம்) பாயும்... அந்தளவிற்குத் தண்ணீர்க்குத் தட்டுப்பாடான பகுதி. கிணற்றை உற்று உற்றுப் பார்த்துகொண்டே.. பெய்யும் மழையை வைத்து கம்பு, பருத்தி என்று போட்டுக் கொண்டிருந்தேன். இருக்கும் தண்ணீரை வைத்து அரைக்குழியில் 300 மல்லிகை நாற்றை நட்டேன். நானும் என் மனைவியுமாகத்தான் எல்லா வேலையையும் செய்வோம். பூச்செடிக்கு இடையில் 10 அடி இடைவெளி விட்டிருந்தேன்.
அதில், ஆறு வருடத்திற்கு முன் 300 முருங்கையை நட்டேன். அது காய்ப்பிற்கு வந்த சமயத்தில் நல்ல விலை கிடைத்தது. அதனால், அதில் 350 போத்து வெட்டி, மீதி இருந்த இரண்டு ஏக்கரிலும் நட்டு விட்டுட்டேன். அந்த நேரம் நல்ல மழையும் கிடைத்ததால், நல்ல காய்ப்ப, ஒரே வருடத்தில் இரண்டே கால் லட்ச ரூபாய் அளவிற்கு காய் ஓடித்தோம். கூலிக்கு ஆள் கூப்பிடாமல், நாங்களாகவே எல்லா வேலையையும் பார்த்ததால் பணமும் மீதமானது. அதில்தான் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்து வைத்தேன்.
அடுத்த வருடமும் முருங்கையில் நல்ல காய்ப்பு. அதற்கேற்ற மாதிரி விலையும் கிடைத்தது. அதை, எனக்கு யோகம் என்று தான் சொல்ல வேண்டும். அதில் கிடைத்த பணத்தை வைத்து. ஆயிரம் அடிக்கு போர் போட்டதில் தண்ணீர் கிடைத்தது. இப்போது போர் தண்ணீரை கிணற்றில் விட்டு, பயிருக்கு பாய்ச்சுகிறேன். அந்த சமயத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சர் கூடல்சாமி என்னிடம், அரசாங்கத்தில் இலவசமாக மரக்கன்னும், வளர்ப்பதற்கு பணமும் தர்றாங்க என்று சொன்னார். அதனுடன் தோட்டத்திற்கு வந்து பார்த்துவிட்டு, முருங்கைக்கும் மல்லிக்கும் இடையிலேயே அழகா வெண்தேக்கு (குமிழ்) மரத்தை நடலாம். முருங்கைக்கு கொடுக்கும் உரம், தண்ணீரே போதும். தனியாக இதற்கு என்று எதையும் செலவழிக்க வேண்டியதில்லை. 18 வருடத்தில் புதையல் எடுத்த மாதிரி பணம் கிடைக்கும் என்று ஆலோசனையும் சொன்னார்.
16 அடிக்கு ஒரு மரம் என்று கணக்குப்போட்டு, இருந்த இடைவெளியில் 800 வெண்தேக்குக் கன்றுகளை வைத்துவிட்டேன். நடவுச் செலவிற்கு 2 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து, கன்னுகளையும் கொடுத்தாங்க. ஒரு வருடம் கழித்து, கன்னுகள் நன்றாக வளர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, மறுபடியும் 1,500 ரூபாய் கொடுத்தாங்க. நான்கு வருடத்தில் மரம் ஒவ்வொன்றும்  தொடை அளவிற்க்கு பெருத்திருக்கிறது என்றார்.
முருங்கைக்கு ரசாயன உரம் கொடுத்து கட்டுபடியாகவில்லை. அதனால் இப்போது தொழுவுரத்தையும், கடைகளில் கிடைக்கும் இயற்கை உரத்தையும்தான் கொடுக்கிறேன். ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லி அடித்தால்தான் முருங்கையில் புழுவை ஒழிக்க முடிகிறது. இப்படி முப்பதாயிரம் ரூபாய் அளவிற்கு செலவு போக, முருங்கையில் வருடத்திற்கு மூன்று லட்சம் லாபமாக கைக்கு கிடைக்கிறது. மல்லி மூலமாக வருடத்திற்கு நாப்பதாயிரம் ரூபாய் கிடைக்கிறது.
இப்போது, கட்டாப்புல (வேலி) இருந்த வேலிக்கருவேலைப் பிடுங்கிவிட்டு அதில் செவ்வரளியை வைத்திருக்கிறேன். அதிலும் கைசெலவிற்கு ஆகும் மாதிரி வருமானம் கிடைக்கிறது. தண்ணீரும் கிடைத்து, சளைக்காமல் பாடுபடுவதற்கும் மனிதன் துணிந்தால் விளையாத பூமியும் விளையுமைய்யா. சம்சாரி கணக்க பார்த்தால் சாட்டைக்குச்சிகூட மிஞ்சாது என்று சொல்வாங்க. அது ஏதோ ஒரு கெட்ட நேரத்தில் சொன்னதாக இருக்கும். இதையே வருடம் முழுவதும் சொல்லிக்கொண்டு இருப்பது நியாயம் கிடையாது என்று தெம்பாகச் சொன்னார் ராஜேந்திரன்.
இஞ்சி – பூண்டு கரைசல்!
முருங்கையில் வரும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை, இயற்கை வழியிலேயே தடுக்கலாம்.. என்று சொல்லும் சின்னதாராபுரம் மணி, தன்னுடைய அனுபவத்திலிருந்து இதற்குச் சொல்லும் வைத்தியம்.
இஞ்சி, பூண்டு, புகையிலைத்தூள் ஆகிய மூன்றையும் தலா 500 கிராம் அளவிற்கு எடுத்து, அரைத்து மண்பானையில் போட்டு. அவை  மூழ்கும் அளவிற்கு மாட்டின் சிறுநீர் ஊற்றி, இரண்டு நாட்கள் அப்படியே ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி என்கிற அளவில் இதைக் கலந்து தெளித்தால்... பூச்சி, நோய் எட்டிக்கூட பார்க்காது.
தொடர்புக்கு
ராஜேந்திரன், செல்போன் : 97151 – 30253
மணி, செல்போன் : 94436 -22812 .
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
ஏற்றம் தரும் எலுமிச்சை.. வாரிக் கொடுக்கும் வாழை!

10.11.12

ஏற்றம் தரும் எலுமிச்சை.. வாரிக் கொடுக்கும் வாழை!
சுவைமிகு கூட்டணி..
வேலையாட்கள் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, தண்ணீர் தட்டுப்பாடு.. என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.
குடை பிடித்துக் கொண்டிருந்த எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்திலிருந்த சந்திரசேகரன் “பத்தாவது வரைக்கும்தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கப் பிடிக்காததால், தேங்காய் மண்டியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதுவும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால், அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது, கரும்பு சாகுபடி செய்து கொண்டிருந்தோம். நாங்களே வெல்லமாக காய்ச்சி விற்றுவிடுவோம். ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், போகப்போக மகசூலும் குறைந்துவிட்டது. வெல்லத்தோட விலையும் குறைந்தது. வேறு சாகுபடிக்கு மாறலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தப் போதுதான், ஒரு நண்பர் எலுமிச்சை  போடுவதற்கு யோசனை சொன்னார். அவரும் எலுமிச்சை போட்டிருந்ததால் அவருடைய தோட்டத்திற்குப் போய் நேரடியாக பார்த்து விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு.. இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை சாகுபடியை ஆரம்பித்தேன். இப்போது பன்னிரண்டு வருடமாகிறது. முதல் மகசூல் கிடைக்க ஆரம்பித்தப்போது, கொஞ்சம் விற்பனைக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு ஏக்கர் வெகுமதி கொடுத்த எலுமிச்சை!
மூன்று வருடம் வரைக்கும் எலுமிச்சைக்கு இடையில் ஊடுயிராக வாழையையும் போட்டிருந்தேன். ஆரம்பத்தில் இது மூன்றிலும் கிடைத்த லாபத்தை வைத்து, ஒரு வீட்டு மனை, இரண்டு ஏக்கர் நிலம் என்று வாங்கிப்போட்டிருக்கிறேன். இப்போது மொத்தம் கையில் 13 ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டரை ஏக்கரில் தென்னை, 7 ஏக்கரில் மா, எலுமிச்சை, வாழை இருக்கு. ஒரு ஏக்கரை நெல் சாகுபடிக்காக தயார் செய்து வைத்திருக்கிறேன். மீதி இரண்டரை ஏக்கரில் 250 எலுமிச்சை மரங்களும் அதில் ஊடுபயிராக ஆயிரம் கற்பூரவல்லி வாழை மரங்களும் இருக்கிறது என்ற சந்திரசேகரன், எலுமிச்சை மற்றும் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
வடிகால் வசதி அவசியம்!
எலுமிச்சை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்வகைகளும் ஏற்றவை. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலம், நடவுக்கேற்றப் பருவம். இந்தப் பருவத்தில் நடவு செய்யும் போது, நாற்றுகள் பழுதில்லாமல் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் எலுமிச்சை பதியன் செடிகளை வாங்கி நடவு செய்து கொள்ளலாம்.
20 அடி இடைவெளி!
20 அடிக்கு 20 அடி இடைவெளியில், 2 கன அடி அளவிற்க்குக் குழிகள் எடுத்து ஒரு வாரம் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை, குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி, அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.
வாரம் ஒரு பாசனம்!
நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது. 3 ஆண்டுகள் வரையில்  எலுமிச்சைச் செடிகளுக்கு இடையில் கனகாம்பரம் போல் ஏதாவது ஒரு பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். 4 –ம் ஆண்டில் எலுமிச்சைக்கு இடையில் வாழையை நடவு செய்யலாம். வாழைக்கு, ஆறரை அடி இடைவெளி விட வேண்டும். 7 அண்டுகளில் எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து பரவி விடும். அதனால், அதற்குப் பிறகு இடைவெளி உள்ள இடங்களில் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏலக்கி, பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி போன்ற ரகங்கள் ஏற்றவை. வாழையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழித்துவிட்டு, புதிய கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா!
எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து, ஒரு அடி இடைவெளிவிட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து உரம் வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாத்தியில் உரம் வைப்பதால், மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும். அதாவது, ஒவ்வொரு வட்டப்பாத்தியிலும் ஒரு  கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம்... யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.
வாழை மரங்களுக்கு 3-ம் மாதத்தில்... ஒரு மரத்திற்கு ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்தில் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால்கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா, ஜிப்சம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மரத்தில் இருந்து அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 80 லிட்டர் தண்ணீருக்கு.. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து ‘ராக்கர்’ தெளிப்பான் மூலம் தேவையான அளவிற்க்கு தெளிக்க வேண்டும். கொசு மற்றும் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் பூச்சிக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.
மரத்திற்க்கு 1,500 பழங்கள்!
எலுமிச்சை மரம் மூன்றாம் ஆண்டில் பூவெடுத்து, காய்க்கத் தொடங்கும். அந்த ஆண்டில் சுமார் 100 முதல் 200 காய்கள் அளவிற்க்குக் காய்க்கும். 5 – ம் ஆண்டில் இருந்து மரத்திற்க்கு 800 முதல் 1,500 காய்கள் வரை கிடைக்கும். ஆண்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டும்தான் காய்ப்பில்லாமல் இருக்கும். மற்ற நேரங்களில் தொடர்ச்சியாகக் காய்த்துக் கொண்டே இருக்கும். கற்பூரவல்லி வாழை, நடவு செய்த 8-ம் மாதத்தில் தார் விட ஆரம்பித்து... 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும். ஒவ்வொரு தாரிலும் 12 மதல் 15 சீப்புகளும், சீப்புக்கு 15 முதல் 30 காய்களும் இருக்கும்.
இரண்டரை ஏக்கருக்க... ஆறு லட்சம்!
இரண்டரை ஏக்கரில் மொத்தம் 250 எலுமிச்சை மரங்கள் இருக்கு. ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 1,000 பழங்கள் வீதம் 250 மரங்களுக்கும் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்திற்கு சராசரி விலையாக 1 ரூபாய் 50 காசு என்று வைத்துக் கொண்டாலே 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இரண்டரை ஏக்கரிலும் சேர்த்து மொத்தம் 1,000 கற்பூரவல்லி வாழை மரங்கள் இருக்கு. ஒரு வாழைத்தார் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு தார் சராசரியாக 250 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே 1,000 தாரை விற்பது மூலமாக, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
எல்லாம் சேர்த்து இரண்டரை ஏக்கர் நிலத்திலிருந்து, 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், இரண்டு லட்ச ரூபாய் செலவு என்று வைத்துக் கொண்டாலும், வருடத்திற்கு 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லாபம்.
இதுவரைக்கும் இயற்கை உரங்களையும் ரசாயன உரங்களையும் கலந்துதான் விவசாயம் செய்து கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் 250 ரூபாய்க்கு வாங்கிட்டிருந்த யூரியா இப்போது 500 ரூபாய். 550 ரூபாயாக இருந்த டி.ஏ.பி. இப்போது 1,100 ரூபாய் ஆகிப்போச்சு. அதனால், இவ்வளவு விலை கொடுத்து ரசாயன உரத்தை வாங்கிப்போட வேண்டாம் என்று முடிவு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் முழு இயற்கை விவசாயத்திற்கு மாறிவிடுவேன் என்றார்.
இயற்கை இருக்க.. ரசாயனம் எதற்கு?
சந்திரசேகரன் பயன்படுத்தும் ரசாயன உரங்களுக்கு மாற்றாக, இயற்கை முறை சாகுபடித் தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு விளக்குகிறார், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திற்கு அருகே இருக்கும் பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ். இவர் குடும்பத்தினர் 53 ஆண்டுகாளக எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
100 கிலோ மண்புழு உரம் அல்லது 100 கிலோ எருவுடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மரத்திற்கு 5 கிலோ வீதம் வைக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல் விட்டு வந்தால் போதும். வெள்ளை ஈ மற்றும் கொசுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த ... பஞ்சகாவ்யா மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை 15 நாட்கள் இடைவெளியில் மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும். துருநோய் தாக்குதலுக்கு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம். இவற்றைக் கடைபிடித்து வந்தாலே.. எலுமிச்சை மற்றும் வாழை சாகுபடியில், இயற்கை முறையில் நல்ல லாபம் பார்க்கலாம் என்றார்.
தொடர்புக்கு
சந்திரசேகரன், செல்போன் : 84893 – 07569
தேவராஜ், செல்போன் : 98658 – 34536.
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
கோகோ பாக்கு வாழை திப்பிலி மிளகு..

10.11.12

கோகோ பாக்கு வாழை திப்பிலி மிளகு..
தென்னைக்கு நடுவே லாப அணிவகுப்பு!
பருவநிலை மாற்றங்கள், கட்டுப்படியான விலையின்மை, தண்ணீர் பற்றாக்குறை.. என விவசாயத்திற்குப் பல்வேறு இடையூறுகள் இருக்கும் நிலையில் .. பிரதான பயிரோடு, ஊடுபயிர்களையும் கூட்டணி சேர்த்தால். பிரதான பயிர் கைவிட்டாலும், ஊடுபயிர் மூலமாக வருமானத்தைப் பார்த்த விட முடியும்.
பலகாலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த சூட்சமத்தை.. இயற்கை விவசாய வல்லுநர்களும், விவசாய விற்பன்னர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இதை வரிபிறழாமல் கடைபிடிப்பதன் மூலமாக, குறிப்பிடத்தக்க அளவிலான லாபத்தை ஈட்டிவரும் விவசாயிகளில் ஒருவர்... கன்னியாகுமரி மாவட்டம், வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமணி.
நாகர்கோவிலில் இருந்து குருந்தன் கோடு செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வேம்பனூர். அங்கு முழுக்க இயற்கை வழியில் நெல், தென்னை.. ஊடுபயிராக கோகோ, வாழை, பாக்கு, திப்பிலி, மிளகு என கலப்புப்பயிர்களை சாகுபடி செய்த அசத்தி வருகிறார், சிறுமணி. மாவட்ட கோகோ விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர், விளைவீடு வட்டார நெல் விவசாயிகள் குழுத் தலைவர், பெரும்செல்வவிளை பகுதி பாசனசபை செயலாளர்.. என பல பொறுப்புகளிலும் இருக்கும் சிறுமணி, தன் தோட்டப் பராமரிப்புப் பணிகளில் தீவிரமாக இருக்க.. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேசத்துவங்கினார்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே மண் வெட்டியைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். தினமும் காலையில் ஏதாவது தோட்ட வேலையயைச் செய்துவிட்டுதான் பள்ளிக் கூடத்திற்கு போவேன். படிப்பு முடிந்ததும் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வேலை கிடைத்தது. ஆனாலும், விவசாயத்தை விடலை. ரிட்டையர்டு ஆனதுக்கு பிறகு முழு நேர விவசாயியாக மாறிவிட்டேன். ஆரம்பத்தில் இருந்தே இயற்கை விவசாயம்தான் செய்திட்டிருந்தேன். இடையில் ரசாயனத்திற்கு மாறினேன். அப்போதுதான் அதனால் விளையும் தீமைகளை நேரடியாக தெரிந்து கொண்டேன். குறிப்பாக, பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதிகமாக நோய்கள் தாக்க ஆரம்பித்தது. உரத்தோட சேர்த்து, மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. அதன்பிறகு திரும்பவும் இயற்கைக்கு மாறிவிட்டேன். இப்போது எட்டு வருடமாக, என்னுடை எட்டு ஏக்கர் முழுக்க இயற்கை விவசாயம் தான். ஒரு ஏக்கரில் அம்பை பதினாறு ரக நெல் இருக்கு. ஆறு ஏக்கரில் தென்னை இருக்கு. தென்னைக்கு ஊடுபயிராக மிளகு போட்டிருக்கிறேன். தனியாக இரண்டு ஏக்கரில் தென்னை, வாழை, கோகோ, பாக்கு, திப்பிலி என்று ஊடுபயிர் போட்டிருக்கிறேன் என்று முன்னுரை கொடுத்த சிறுமணி, ஊடுபயிர் சாகுபடி பற்றிய தொழில்நுட்பங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
இயற்கை முறையில் நோய் தாக்காது!
30 அடி இடைவெளி விட்டு நடவு செய்தால், ஏக்கருக்கு 75 தென்னை மரங்கள் வரை நடலாம். இந்த இடைவெளியில் ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். எட்டு அடி இடைவெளியில் கோகோவை நடவு செய்ய வேண்டும். அதற்கு இடையில் உள்ள இடைவெளியில் நாட்டு ரக வாழையை நடவு செய்ய வேண்டும். தோப்பு ஓரங்களில் நான்கு அடி இடைவெளியில் பாக்க மரங்களை நடவு செய்யலாம். அனைத்துப் பயிர்களுக்கும் சேர்த்து வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு தென்னை மரத்தைச் சுற்றிலும் மூன்று அடி அகலம், அரை அடி ஆழத்திற்கு குழிபறித்து அதனுள் மட்கிய இலைதழைகள், கோகோ கழிவுகள், தென்னைக் கழிவுகள்  மற்றும் வாழைக் கழிவுகளை இட்டு 75 கிலோ அளவிற்கு கழிவுகளை  தொழுவுரம் போட்டு, மண்ணால் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
இயற்கை வழி வோள்ணமையில் நோய் தாக்குதல் குறைவாகத்தான் இருக்கும். எப்போதாவது இலை கருகல் நோய் தாக்கினால்.. மரத்தின் தூரில் இருந்து மூன்று அடி தள்ளி, அரை அடி ஆழத்தில் குழி பறித்து, அதில் வேம்பு, நொச்சி, எருக்கு, ஆடாதொடை ஆகிய தாவரங்களின் இலைகளோடு, தொழுவுரத்தைக் கலந்து போட்டு, மண்ணைப் போட்டு மூடி விட்டால் நோய் கட்டுப்படும்.
கூன்வண்டிற்கு வேப்பங்கொட்டைப் பொடி!
இளம் தென்னைகளை காண்டாமிருக வண்டுகள் தாக்க வாய்ப்புகள் உண்டு. இவ்வண்டுகள் குருத்தைத் துளைத்து சாப்பிட்டு விடும். வண்டு துளைத்த பகுதிகளில் சிவப்பு கூன்வண்டு, முட்டை போட்டு குஞ்சு பொரித்த தங்கிவிடும். கூன்வண்டு தாக்கிய மூன்றே மாதங்களில் மரம் பட்டுப் போய் விடும். வேப்பங்கொட்டையைப் பொடி செய்து, இரண்டு கையளவு தூவி விட்டால், இவ்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
கோகோ.. அறுவடைக்குப் பிறகு கவனம்!
கோகோவிற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 கிலோ தொழுவுரம் இட்டு வரவேண்டும். இது, நடவு செய்த 3-ம் ஆண்டில் அறுவடைக்கு வரும். பலன் தர ஆரம்பித்த பிறகு, மாதம் ஒரு முறை கவாத்து செய்து அந்த இலைகளையே கோகோ பயிர்களுக்கு மூடாக்காகப் போடலாம். இப்பயிரைப் பெரும்பாலும் எந்த நோயும் தாக்குவதில்லை. பத்து நாளுக்கு ஒரு முறை கோகோ பழங்களைப் பறிக்கலாம். பறித்தவற்றை பத்து நாட்கள் வரை தனியாக ஒரு இடத்தில் குவித்து வைக்க வேண்டும்.
இப்படிச் செய்தால், பழம் நன்கு பழுத்துவிடும். பிறகு ஒவ்வொரு பழத்தையும் குச்சியால் அடித்து உடைத்து, உள்ளிருக்கும் விதைகளைச் சேகரித்து, மூங்கில் கூடையில் ஆறு நாட்கள் வரை வைக்க வேண்டும். 3 மற்றும் 5-ம் நாட்களில் இதைக் கிளறி விட வேண்டும். 7 –ம் நாளுக்கு மேல் இந்த விதைகளை வெயிலில் காயப்போட வேண்டும். 5 நாட்கள் காய்ந்த பிறகு விற்பனை செய்யலாம்.
நாட்டு வாழைக்குச் சுண்ணாம்பு!
நாட்டு வாழை நடவு செய்த 2-ம் மாதத்தில் வாழையின் அடிப்பகுதியைச் சுற்றி, பத்து கிலோ தொழுவுரம் இட்டு மண்ணால் மூட வேண்டும். 4-ம் மாதத்தில் வேம்பு, நொச்சி, எருக்கு ஆகிய இலைகளோடு... பத்து கிலோ தொழுவுரம், 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு. 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சேர்த்து இடவேண்டும்.
6-ம் மாதத்தில் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றபை் பொடித்து அதனுடன் 10 கிலோ தொழுவுரத்தையும் போட்டு மண் அணைக்க வேண்டும். சராசரியாக, ஒரு வாழை மரத்திற்கு உரச் செலவு 60 ரூபாய் வரை ஆகும். வாழை  7-ம் மாதத்தில் குலை தள்ளும். 12-ம் மாதத்தில் அறுவடை செய்யலாம்.
வாழையை இலைக்கருகல் நோய் தாக்கினால்.. வேம்பு, நொச்சி, எருக்கு ஆகிய இலைகளை இடித்து, சாறு எடுத்துக் கொண்டு 100 மில்லி சாறுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து மரத்தின் இலைகளில் தெளித்தால், நோய் கட்டுப்படும். கூன் வண்டு தாக்கினால், மொத்தத் தண்டிலும் ஒரு கையளவு சுண்ணாம்புத்தூளைத் தூவி விட வேண்டும். வண்டுத் தாக்குதல் தென்படா விட்டாலும், வாரத்திற்கு ஒரு முறை தண்டில் சுண்ணாம்புத் தூளைத் தூவி வந்தால், கூன் வண்டு எட்டிக் கூடப் பார்க்காது.
பாடில்லாத பாக்கு!
பாக்கு மரத்திற்கு தனியாக மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. இவற்றிற்கு நோய் எதிர்ப்பு இவற்றிற்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தையும் சுற்றி இரண்டு அடி அகலம், அரை அடி ஆழத்திற்கு குழி பறித்து 5 கிலோ அளவிற்கு தொழுவுரம் போட்டு வந்தாலே போதுமானது. நடவு செய்த 5-ம் வருடத்திலிருந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பாக்கு அறுவடை செய்யலாம்.
செழிக்க வைத்த ஊடுபயிர்கள்!
சாகுபடித் தொழில்நுட்பங்களைச் சொல்லி முடித்த சிறுமணி தொடர்ந்தார்.”தோட்டத்தில் மிச்ச மீதி இருக்கும் இடங்களில் எல்லாம் மிளகையும், திப்பிலியையும் விதைத்து விட்டிருக்கிறேன். அதெல்லாம் இப்போதுதான் மகசூலுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. தேங்காய் விலை அதல பாதாளத்தில் இருக்கும் இந்தச் சூழலிலும் என்னால் இவ்வளவு செழிப்பாக இருக்க முடிகிறது என்றால் அதற்க்கு காரணம், இந்த ஊடுபயிர்கள்தான்.
ஆரம்பத்தில், ஊடுபயிர் வெள்ளாமை செய்தால், தென்னையில் மகசூல், குறையும் என்று எல்லாரும் சொன்னாங்க, அதனால்தான் இரண்டு ஏக்கரில் மட்டும் ஊடுபயிர் போட்டேன். ஆனால், இப்போது தனியாக இருக்கும் மரங்களைவிட ஊடுபயிர் சாகுபடி செய்யும் மரங்களில்தான் அதிக விளைச்சல் இருக்கு.
இரண்டு ஏக்கரில் 150 தென்னை மரங்கள் நிற்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை காய்பறிப்போம். ஒரு பறிப்பிற்கு குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 காய்க்குக் குறையாமல் கிடைக்கும். வருடத்திற்கு மொத்தம் 15 ஆயிரம் காய்கள் கிடைத்துவிடும். இப்போது காய்க்கு சராசரியாக 5 ரூபாய் அளவிற்குத்தான் விலை கிடைக்கிறது. தென்னை மூலமாக, வருடத்திற்கு 70 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கும்.
மொத்தம் 450 கோகோ இருக்கு. பத்து நாளைக்கு ஒரு முறை 25 கிலோ அளவிற்கு, கோகோ விதை கிடைக்கும். கேட்பரீஸ் சாக்லேட் கம்பெனிக்காரர்கள் தோட்டத்திற்கே வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. ஒரு கிலோவிற்கு 130 ரூபாய் விலை கொடுக்கிறாங்க. சீசன் நேரத்தில் கூடுதல் விலையும் கிடைக்கும். இதன் மூலமாக, வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
மொத்தம் 100 வாழை இருக்கு. ஒரு குலை 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரைக்கும் விலை போகும். நாகர் கோவில் அப்டா சந்தையில் இருக்கும் வியாபாரிகள் நேரடியாகவே வந்து வாங்கிக்கிறாங்க. 100 வாழை மூலமாக சராசரியாக வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மொத்தம் 100 பாக்கு மரங்கள் இருக்கு. குமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து, மார்ச் மாதம் வரைக்கும் பாக்கில் நல்ல மகசூல் கிடைக்கும். 15 நாளைக்கு ஒரு முறை 600 பாக்கிலிருந்து, 800 பாக்கு கிடைக்கும். உள்ளூர் கடைகளிலேயே ஒரு பாக்கு 50 காசு என்று விலை வைத்து கொடுக்கிறேன்.
எப்படிப் பார்த்தாலும் எல்லாவற்றையும் சேர்த்து இரண்டு ஏக்கரிலிருந்தே வருடத்திற்கு குறைந்தது 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துவிடும். செலவு ஐம்பதாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம். கண்டிப்பாக தென்னை மட்டும் வைத்திருந்தால் இந்த லாபம் கிடைக்காது என்றார் உறுதியாக.
தொடர்புக்கு
சிறுமணி, செல்போன்:94425-30483
சுப்ரமணியன்,செல்போன்:97509 – 66448
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
8 ஏக்கரில் ரூ.4 லட்சம்... ஏற்றம் தந்த ஏழு ரக வாழை..!

10.11.12

அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி...
ஊடுபயிர் என்றைக்குமே  விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை என்று அடித்தச் சொல்கிறார். சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்து முடித்து கையோடு, விவசாயத்திற்கு வந்துவிட்டேன். இப்போது 30 வருடமாகிறது. தென்னைக்கு இடையில் 18 வருடமாக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்துக் கொண்டிருக்கிறேன். கோடைக் காலங்களில் கிணற்றுப் பாசனம், மழைக் காலங்களில் ஏரிப்பாசனம். ஆரம்பத்தில் நானும் ரசாயன விவசாயம் தான். சம்பாதிப்பதில் முக்கால் வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்தது. அதில்லாமல் கட்டுபடியான விலையும் கிடைக்கவில்லை.
உற்பத்திச் செலவை எப்படிக் குறைப்பது என்பதை  யோசனை செய்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாற்று வழியைக் காட்டியது ‘பசுமை விகடன்’தான். அதில் வெளியான இயற்கை விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தது. தொடர்ந்து, பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புகள், ‘இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு.. இயற்கை வேளாண்மை பற்றிய விஷயங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டேன். அதன் பிறகு  முழு இயற்கை விவசாயியாக மாறினேன். இப்போது மூன்று வருடமாக ஜீரோ பட்ஜெட் முறையில்தான் விவசாயம் செய்கிறேன். 10 ஏக்கர் தென்னந்தோப்பில் 8 ஏக்கரில் மட்டும் ஏழு ரக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் உற்பத்திச் செலவு வெகுவாக குறைந்திருக்கிறது.
வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும் ஊடுபயிர்!
தோப்பில் 27 அடி இடைவெளியில் மொத்தம் 700 நாட்டு தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே, 30 வயது முதல் 40 வயது வரைக்கும் உள்ள மரங்கள், தோப்பிற்குள்ளே ஏகத்திற்கும் சூரிய வெளிச்சம் கிடைத்ததால் ஊடுபயிராக வாழை போட்டிருக்கிறேன். தனிப்பயிராக வாழையை நட்டால், ஏக்கருக்கு 1,000 மரங்கள் முதல் 1,200 மரம் வரைக்கும் பிடிக்கும். ஆனால், ஊடுபயிராக செய்யும்போது அதில் பாதிதான் நடமுடியும். வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் நடவு செய்ய வேண்டும். இரண்டு தென்னைக்கு இடையில் ஒரு வாழை என்று நட்டிருக்கிறேன்.
பூவன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், ஜி – 9 என்று ஏழு ரகங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 800 வாழைகள் இருக்கு (பூவன் -1,000 செவ்வாழை-500. தேன்வாழை-1,000, ரஸ்தாளி-500, நேந்திரன் – 500, ஜி -9 -800, மொந்தன்-500). மூன்று வருடமாக தோப்பில் உழவே செய்யவில்லை. தட்டைப்பயிரை ஏகத்திற்கும் விதைத்து விடுவதால் களைகள் கட்டுப்படுவதோடு, தழைச்சத்தும் கிடைக்கிறது. அங்கங்கே செண்டு மல்லிச் செடிகள் இருப்பதால் நூற்புழுத் தொந்தரவும் இல்லை. தொடர்ந்து பாசனத்தோடு ஜீவாமிர்தத்தைக் கொடுக்கிறேன். இயற்கை முறை என்பதால் நோய்களே வருவதில்லை.
வாழையில் இது மூன்றாவது தழைவு. தாய் வாழையைச் சுற்றி நிறைய பக்கக் கன்றுகள் வளரும். இரண்டு மாதம் வளர்ந்த பிறகு, அதில் ஒன்றை மட்டும் விட்டுட்டு, மற்றக் கன்றுகளை அப்புறப்படுத்திவிடவேண்டும். இந்த இரண்டு மாதத்திற்குள் பக்கக் கன்றுகள் கிடைக்கும் இலைகளை அறுத்து விற்கலாம். பக்கக் கன்று வளர வளர, அறுவடை செய்த தாய் வாழை வாடி, பழுத்து தானா கீழே சாய்ந்துவிடும். அப்போது அதை வெட்டி, தோட்டத்தில் பரப்பிட்டால் உரமாகிவிடும்.
ஒரு தார் குறைந்தபட்சமாக 100 ரூபாய்க்கு விற்கும். அந்தக் கணக்கில் 4 ஆயிரத்து 800 தார் மூலமாக வருடத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இலை மூலமாக 48 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இடுபொருள் தயாரிக்க, பயிருக்கு கொடுப்பதற்கு என்று ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான கூலி, வருடத்திற்கு 75 ஆயிரம் ரூபாய். ஆரம்பத்தில் நடும்போது உழவு, குழி என்று ஒரு கன்னுக்கு 15 ரூபாய் செலவாகிறது. வியாபாரிகளே அறுவடை செய்து கொள்வதால் அறுவடைச் செலவு கிடையாது. எப்படியும் தென்னை வருமானம் இல்லாமல், ஊடுபயிர் மூலமாகவே எட்டு ஏக்கரிலிருந்து வருடத்திற்கு நான்கு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.
ஜீரோ பட்ஜெட் பக்கம் வந்த பிறகுதான் விவசாயத்தின்மேல் எனக்கு பிடிப்பு வந்திருக்கு. ஓரளவு கட்டுபடியாகும் விலையும் கிடைக்கிறது. மகசூல் கூடியிருக்கு. இந்த வாழைப்பழங்களோட சுவையும் அருமையாக இருப்பதோடு, பழங்களும் சீக்கிரமாக கெட்டுப் போவதில்லை. அதனால் எனக்குக் கூடுதல் விலை கிடைக்கிறது என்றார்.
தொடர்புக்கு
தெய்வம் வரதராஜன், செல்போன்: 97875-41748.
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
மாடித் தோட்டத்தில் ஒரு மகத்தான மகசூல்!

10.11.12

ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை, வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும் கூட சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.
நான் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப் போது.. இந்த ஏரியாவே.. செடி, கொடி, இல்லாமல் பாலைவனம் மாதிரி இருந்தது. மொத்த ஏரியாவை மாற்ற முடியாட்டியும்.. நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம் என்று நினைத்துதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன் என்றார்.
மொட்டை மாடியில் தட்டுகளில் மண்தொட்டிகளை வைத்து.. அதில் செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் செய்கிறேன். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக் கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழை என்று அத்தனையையும் வளர்க்கிறேன். சின்னச் செடிகளை தொட்டியிலும், வாழை மாதிரியான பயிர்களை செம்மண் நிரப்பிய சாக்குப் பையிலும் வளர்க்கிறேன். இந்த ஆயிரம் சதுரயில் மட்டும் பூக்கள், காய்கள், கீரைகள் என்று 50 வகையான தாவரங்கள் இருக்கு.
பொதுவாக, காய்கறிச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதுவே அளவிற்க்கு மீறி இருந்தால் ஆபத்தாகிவிடும். அதனால், வெளிச்சத்தைப் பாதியாக குறைப்பதற்காக பசுமைக் குடில் அமைத்திருக்கிறேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணையைத் தண்ணீரில் கலந்து தெளிப்பேன். காலையிலும், மாலையிலும் தண்ணீர் ஊற்றுவேன். தொட்டியில் வழிந்து வரும் தண்ணீர், தொட்டிக்கு கீழ் இருக்கும் தட்டிலேயே தங்கிவிடும். அதனால் அதைத் திரும்பவும் பயன்படுத்த முடியும். அதோடு, காங்கிரீட்டுக்கும் பாதிப்பு இருக்காது.
கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிக்கும் கலனை வீட்டில் அமைத்திருக்கிறேன். கழிவுகளை அரைத்து அதில் ஊத்திட்டால் வீட்டிற்குத் தேவையான எரிவாயு கிடைத்துவிடுகிறது.  ஆரம்பக்கட்டத்தில் ஆகும் செலவு மட்டும்தான். வேற செலவு கிடையாது. இந்தக் கலனிலிருந்து வெளியாகும் கழிவு நீர்.. நல்ல உரம்.
இதைத்தான் செடிகளுக்கு ஊட்டசத்தாகக் கொடுக்கிறேன். அதனால், ஒரு சொட்டு ரசாயனத்தைக் கூட பயன்படுத்துவதில்லை. ஒரு வருடமாக.. எங்க வீட்டில் விளையும் காய்களைத்தான் நாங்க சாப்பிடுகிறோம். தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை விற்றுவிடுகிறோம் என்றார்.
வயதான காலத்தில் சந்தோஷம், மனநிம்மதி, ஆரோக்கியம், பணம் என்று எல்லாம் கொடுக்கும் இந்த இயற்கைக்கு, நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை என்றார் நெகிழ்ச்சியாக.
தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,செல்போன்: 98410 -23448.
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
காவளிக் கிழங்கு.. உருளைக் கிழங்கிற்கு மாற்றாக ஒரு பாரம்பரிய ஊடுபயிர்!

10.11.12

காவளிக் கிழங்கு.. வாயுத் தொல்லைக்குப் பயந்து, கிழங்கு என்றாலே, காத தூரம் ஓடும் பலருக்கும் வரப்பிரசாதம்! ஏனெனில்,  இது மண்ணிற்குக் கீழே காய்ப்பதில்லை. இத்தகைய பாரம்பரியப் பெருமை மிக்க இக்கிழங்கை. விவசாயிகள் பலருமே மறந்து போய்விட்ட சூழலில்.... இயற்கை விவசாயிகள் சிலர் இன்னமும் சாகுபடி செய்து பாதுகாத்து வருகிறார்கள். அப்படி பாதுகாத்து வரும் சீர்காழி அருகே உள்ள தாண்டவன் குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி புலவர். ராசாராமன், காவளிக் கிழங்கு பெருமை பேசுகிறார் இங்கே...
உருளைக் கிழங்கு மாற்று!
நம் முன்னோர்கள் இப்படிப் பட்ட உணவுப் பொருட்களைத்தான் பயிர் செய்து வந்தார்கள். ஆண்டு முழுவதுக்குமான அவர்களின் உணவுத் தேவையை வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து கிடைப்பவற்றை வைத்தே பூர்த்தி செய்து விடுவார்கள். புடலை, அவரை, வெண்டி, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகல், கொத்தவரை, துவரை, கடலை... என அனைத்தையும் வீட்டைச் சுற்றியே சாகுபடி செய்து விடுவார்கள். அந்த வகையில், மலைப் பிரதேசங்களில் விளையும் உருளைக் கிழங்கிற்கு மாற்றாக சமவெளிப் பகுதிகளில் விளைய வைத்து வந்த கிழங்குதான் இந்த காவளிக் கிழங்கு என்றார் ராசாராமன்.
இந்தக் கிழங்கை உணவிற்குப் பயன்படுத்தியது போக மீதியை அப்படியே வைத்திருந்து விதைக்கிழங்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். விதைக்காக தனியாக எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. இது வாயுத் தொந்தரவு, சர்க்கரைப் பிரச்னை... என எதையும் உண்டு பண்ணாது. மார்கழி கடைசி அறுவடைக்கு வரும் காவளிக் கிழங்கை, அப்படியே பறித்துப் போட்டு வைத்து விட்டால், அடுத்த ஆடி மாதம் வரை அப்படியே இருக்கும். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாத்தாலே போதுமானது. உருளைக் கிழங்கில் என்னென்ன கறி சமைக்கிறோமோ... அத்தனையையும் இதில் செய்யலாம். அதே சுவை இருக்கும்.
ஒரு கொடியில் 50 கிழங்குகள்!
உண்மையிலேயே இதை தான் ஜீரோபட்ஜெட் என்று சொல்ல வேண்டும். இதற்காக எந்தச் செலவும் தேவையில்லை. ஒரே ஒரு கிழங்கை மட்டும் வாங்கி, மண்ணில் புதைத்து வைத்தால், அது முளைத்து கொடியாகி, அதில் ஐம்பது கிழங்குகள் வரையிலும் காய்க்கும். முதலில் காய்க்கும் காய் ஒரு கிலோ அளவிற்கு எடை வரும். அடுத்து வரும் காய்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைந்து கொண்டே வரும். கடைசியாக காய்க்கும் காய் வெறும் ஒரு கிராம், இரண்டு கிராம்  எடையில்தான் இருக்கும். ஆடி மாதத்தில் இவை முளைக்கத் தகுந்த தட்பவெப்பம் நிலவுவதால், தானாகவே முளைத்து குருத்து வந்துவிடும். அந்தப் பருவத்தில் மரப்பயிர்களின் அருகில், இந்தக் கிழங்குகளை விதைத்துவிட வேண்டும். இதில் பூ பூப்பதில்லை. நேரடியாகக் காய் காய்த்துவிடும். ஐம்பது நாளில் முதல் காய் கிடைக்கும்.
இதில், ஆட்டுக் கொம்புக் காவளி என்று ஒரு ரகம் இருக்கிறது. இது 100 கிராம் அளவிற்குத்தான் காய்க்கும். இக்கிழங்கில் ஒரு சிறியக் கொம்பு இருப்பதால்தான் இந்தப் பெயர். இதையும் உணவாகப் பயன்படுத்தலாம்.
பெருவள்ளிக்கிழங்கு என்று ஒன்று உள்ளது. இது கொடி வகையாக இருந்தாலும், மற்ற கிழங்குகள் போல் மண்ணிற்கு அடியில், காய்க்கக்கூடியது. ஒரு கிழங்கு பத்து கிலோ வரையிலும் கூட இருக்கும். ஓராண்டு வரை, தோண்டாமல் விட்டுவிட்டால், இருபது கிலோ வரை கூட இருக்கும். இதையும் ஒரு வருடம் வரை வைத்திருந்து உருளைக் கிழங்கிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். வேறு எந்தக் கிழங்குகளையுமே விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
செலவில்லாத உணவு!
இந்த அனைத்துக் கிழங்குகளுக்கும் விதைப்பதைத் தவிர வேறு செலவுகளே இல்லை. கிழங்கு முளைத்து, கொடி வெளியில் வந்ததும் அருகில் உள்ள மரத்தில் ஏற்றி விட்டால் போதும். பூச்சித் தாக்குதல் கிடையாது. மரத்தோடு சேர்ந்து, தன் உணவை, தானே தயாரித்துக் கொள்ளும். அதனால் உரச் செலவும் கிடையாது. ஆடு, மாடுகளும் சாப்பிடுவதில்லை.
மொத்தத்தில் செலவில்லாமல் ஒரு வருட உணவுத் தேவையை சமாளிக்கும் கிழங்கு வகைகள் இவை. இதன் அருமை உணர்ந்துதான் எங்கள் தாத்தா. அப்பாவிற்கு பிறகு நானும் தொடா்ந்து பயிரிட்டு வருகிறேன். என்னிடமிருந்து கிழங்கு வாங்கிச் சென்று நிறையபேர் தற்போது உற்பத்தி செய்து வருகிறார்கள்.
ஆடியில் நடவு... மார்கழியில் அறுவடை!
மூன்றடி அகலம், ஓரடி ஆழம் கொண்ட குழியில்... அரை அடி ஆழத்திற்கு மட்கிய எரு, வேப்பம் பிண்ணாக்கு, அல்லது வேப்ப இலை ஆகியவற்றைப் போட்டு நிரப்பி, முளை வந்த காவளிக் கிழங்கை அதில் வைத்து மண்ணை நிரப்ப வேண்டும். முளைக்குருத்து மேல் நோக்கி மண்ணை விட்டு வெளியே தெரியும்படி இருக்க வேண்டும்.
குருத்து வளர, வளர அதை அருகில் உள்ள மரத்தின் மீது ஏற்றி விட்டு விட வேண்டும். வேம்பு, பூவரசு, கிளுவை, முருங்கை போன்ற மரங்களாக இருப்பது நல்லது. மரங்கள் இல்லாத நிலையில், முதலில் முருங்கை நட்டு, அது வளர்ந்தவுடன் இதை நடலாம். அதிக வெயில் இருந்தால், கிழங்கு காய்க்காது. அதனால் தான் இலைகள் அதிகம் உள்ள மரங்களில் ஏற்றி விட வேண்டும். ஆடி மாதத்தில் கிழங்கு நட்டால்... மார்கழி கடைசியில் பறித்து விடலாம். இடையில் எந்தச் செலவும் கிடையாது. பராமரிப்பு வேலையும் கிடையாது என்றார்.

மரங்கள் பெரும்பாலும் பத்தடி இடைவெளியில் நடவு செய்யப்படுவதால், அவற்றிற்கு இடையே மற்றப் பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது, இந்தக் கிழங்கையும் சேர்த்து சாகுபடி செய்யலாம். அதனால், ஒரே நேரத்தில் மரம், செடி, கொடி மூன்று விதமான பயிரையும் நம்மால் சாகுபடி செய்ய முடியும் என்றார்.
திசு வளர்ப்பிற்கு முன்னோடி..
காவளிக் கிழங்குதான் திசு வளர்ப்பிற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று தனது அனுபவம் மூலம் சொல்கறார், ராசாராமன்.
என்வீட்டில் போட்டு வைத்திருந்த கிழங்குகளில் ஒரு கிழங்கை 90 சதவிகித அளவிற்கு எலி சுத்தமாக கடித்து குதறிவிட்டது. மீதம் உள்ள பத்து சதவிகிதம் மட்டும் தோலோடு அப்படியே கிடந்தது. எல்லா கிழங்குகளும் முளைத்து வந்தபோது... எலி கடித்த அந்தக் கிழங்கும் தோலிருந்த பகுதியில் இருந்து முளைத்து வந்தது. அதைப் பதித்து வைத்தபோது மற்ற கொடிகளில் காய்த்தது போலவே அதுவும் காய்த்தது. இதை மற்றொரு முறையும் உறுதிப் படுத்திக் கொண்டேன்.
பெருவள்ளிக் கிழங்கைப் புதைக்கும் போது யாரை அருகில் வைத்துக் கொண்டு புதைக்கிறோமோ அவர்களது உருவத்திலேயே அந்தக கிழங்கு விளைந்து வரும் என்பது ஐதீகம். அது உண்மையும்கூட. அதனால், பெரும்பாலும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டுதான் இக்கிழங்கைப் புதைப்பார்கள் என்கிற அதிசயத் தகவலையும் சொன்னார்.
கொழுப்பைக் குறைக்கும் காவளி
காவளி கிழங்கின் மருத்துவப் பயன்கள் குறித்துப் பேசும் கன்னியாகுமரி, அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் ஼ராம், காவளிக் கிழங்கின், அறிவியல் பெயர் ‘டையோஸ்கோரியா பல்பிஃபெரா’ தமிழில் வெற்றிலை வள்ளிக் கிழங்கு என்றும் ஆங்கிலத்தில் ஏர் பொட்டடோ என்றும், மலையாளத்தில் ‘காஞ்சல்’ என்றும் இதற்குப் பெயர். இக்கிழங்கின் சிறப்புகளைப் பற்றி திருக்குறள், கலித்தொகை போன்ற இலக்கியங்களில் சொல்லி இருக்கின்றனர். ஆரம்பக் காலங்களில், ‘ஸ்டீராய்டு’ ஹார்மோன்கள் தயாரிப்பதற்கும், குடும்பக் கட்டுப்பாட்டிற்க்குப் பயன்படுத்தப்படும் ‘டையோஸ்ஜெனின் என்ற மாத்திரை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. நம்முடைய முன்னோர்கள் பசியை அடக்க, இக்கிழங்கை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை உள்ள பெண்களும், உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், காவளிக் கிழங்கை சமைத்து உண்டு வந்தால்... சரியாகிவிடும் என்று சொல்கிறார்.
தொடர்புக்கு
புலவர் ராசாராமன், செல்போன்: 96556 – 50125
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
மஞ்சள் + வெங்காயம்+ மிளகாய்+ சேனை

10.11.12

உற்பத்திச் செலவை ஈடுகட்டும் உற்சாகக் கூட்டணி!
ஆண்டுப் பயிரான மஞ்சள் விதைக்கும் விவசாயிகள், அதன் அறுவடைக் காலத்திற்குள், குறுகிய காலப் பயிர்களான வெங்காயம், மிளகாய், துவரை... போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்து, கூடுதல் வருமானம் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் நாட்டு மஞ்சளுக்கு இடையில் வெங்காயம், மிளகாய், சேனைக் கிழங்கு மூன்றையும் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள கும்பிக்கருக்கு கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பாலசுந்தரம்!
அளவெடுத்து அமைக்கப்பட்ட பாத்திகளுக்குள் அணிவகுத்து நிற்கும் மஞ்சள் செடிகள், அதனூடே பச்சைக் குடைகள் பிடித்தது போல் சேனைச் செடிகள், வெள்ளை மூக்குத்திகளாய் பூவெடுத்து நிற்கும் மிளகாய் செடிகள், பயிர்களுக்குப் பதமாகப் பாசனம் செய்யும் சொட்டுநீர்க் கருவிகள்.. இத்தகைய கண்கொள்ளாக் காட்சிகளுக்கு நடுவே, பராமரிப்பப் பணியில் மூழ்கியிருந்தார் பாலசுந்தரம்.
என்னோட விவசாயம், இயற்கை பாதி, செயற்கை பாதி என்று சொல்லலாம். அதாவது இயற்கை உரம்தான், மண்ணிற்கும் பயிருக்கும் நல்லது. பூச்சிக் கொல்லி மட்டும் ரசாயனத்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறேன். பல வருடமாக இந்தப் பகுதியில் மஞ்சள் விவசாயம்தான் பிரதானம். இந்த மண்ணிற்கும், தண்ணீருக்கும் மஞ்சள் வெள்ளாமை நல்லா வரும். வழக்கமாக மஞ்சள் போட்டால், அதற்குள் ஊடுபயிர் வெள்ளாமையும் செய்வோம். நான், ஒரே கல்லில் நான்கு மாங்காய் என்கிற மாதிரி மஞ்சளிற்குள்ளேயே வெங்காயம், சேனை, மிளகாய் என்று மூன்று ஊடுபயிரை விதைத்தேன்.
சித்தரையில் இரண்டு முறை கோடை உழவு செய்து, ஒரு ஏக்கருக்கு 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்துவிட வேண்டும். மறுபடியும் இரண்டு உழவு செய்து மண்ணை பொலபொலப்பாக்கி, தேவையான அளவுகளில் பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளுக்குள் ஓர் அடி இடைவெளியில் பார்களை அமைத்து, பாரின் மத்தியில்... ஒன்றரை அடி இடைவெளியில் , நேர்த்தி செய்யப்பட்ட விதை மஞ்சளை நட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு டன் விதை மஞ்சள் தேவைப்படும்.
70 நாளில் வெங்காயம்!
மஞ்சள் நடவின்போதே... வரப்பு, வாய்க்கால் கரைகளின் ஓரங்களில் ஓரடி இடைவெளியில் விதை வெங்காயத்தை நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 70 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். மஞ்சளுக்குக் கொடுக்கும் உரமே இதற்கும் போதுமானது. 60 முதல் 70 நாட்களுக்குள் இதை அறுவடை செய்த விடலாம். ஊடுபயிரில் சராசரியாக 600 கிலோ வெங்காயம் மகசூலாகக் கிடைக்கும்.
150 நாட்களில் மிளகாய்!
மஞ்சள் நடவு செய்யும் போதே, தேனிசம்பா மிளகாய் நாற்றுகளை 5 அடிக்கு ஒன்று வீதம் வரப்புகளில் நடவேண்டும். 60-ம் நாளில் மகசூல் கொடுக்கத் தொடங்கி. அடுத்த 90 நாட்களுக்குத் தொடர்ந்து மகசூல் கிடைக்கும். பரவலாக நடவு செய்வதால், 750 முதல் 1,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
270 நாளில் சேனை!
மஞ்சள் நடவு செய்த ஒரு வார இடைவெளியில் ஊடுபயிராக சேனைக் கிழங்கை 10 அடிக்கு ஒன்று என்ற கணக்கில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிலோ விதைக் கிழங்கு தேவைப்படும். 5 கிலோ வரை எடையுள்ள பெரிய கிழங்குகளை நான்காக வெட்டி, சிறிதாக்கி தனித்தனியே நடவு செய்யலாம். சிறிய கிழங்காக இருந்தால், அதை அப்படியே நடவு செய்யலாம். விதைக் கிழங்குகளை நடவு செய்யாமல்.... வரப்புகளில் மண்வெட்டி கொண்டு குழி எடுத்து, நடவு செய்து மண்ணால் மூட வேண்டும். சொட்டுநீர் மூலம் சூழலை அனுசரித்துத் தேவையான அளவிற்கு பாசனம் செய்து வர வேண்டும்.
நடவு செய்த 25-ம் நாளில் களை எடுத்து, இயற்கை உரமாக 100 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரத்தை ஒவ்வொரு செடிக்கும் வைத்து பாசனம் செய்ய வேண்டும். இரண்டு மாத இடைவெளியில் தலா 200 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரத்தைச் செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். சேனைக் கிழங்குக்குத் தனியாக உரமிடத் தேவையில்லை. மஞ்சளுக்குக் கொடுக்கும் உரமே போதுமானது. பயிர்கள் நன்றாக வேர் பிடித்து வளரவும். இலைகள் விரிந்து செழிப்பு அடையவும் இந்த உரம் துணை புரிகிறது. தொடா்ந்து 9-ம் மாதம் 200 கிலோ பொட்டாஷ் உரத்தை சரி சமமாகப் பிரித்து, செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். கிழங்குகள் ஊக்கமுடன் விரைவாக வளரவும், மஞ்சள் மற்றும் சேனைக் கிழங்குகள் நிறம் பெறவும், பொட்டாஷ் உதவுகிறது.
வேரழுகலுக்கு வேப்பம் பிண்ணாக்கு!
இலைப்பேன், இலைப்புள்ளி நோய், வேரழுகல் ஆகிய மூன்று நோய்கள்தான் கிழங்கு வகைப் பயிர்களை சேதப்படுத்தி அழிக்கும் முக்கிய நோய்களாகும். இவற்றைக் கட்டுப்படுத்த ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் கலந்து 30, 60 மற்றும் 90-ம் நாட்களில் விசைத்தெளிப்பான் மூலமாக காலை வேளைகளில் புகை போல் படரும்படி தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வேம்புக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால், இலைப்புள்ளி நோய் கட்டுப்படும். வளர்பருவத்தில் செடிக்கு 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை தகுந்த கால இடைவெளியில் கொடுத்து நீர்ப் பாசனம் செய்தால், வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்திவிடலாம்.
ஏக்கருக்கு 1,000 கிலோ சேனை!
மஞ்சள் செடிகளும் அதற்கிடையில் சேனைச் செடிகளும் போட்டி போட்டு வளர்ந்து, பச்சைக்கட்டி வரும். 9-ம் மாதத்தில் சேனைக் கிழங்குகள், உருண்டு திரண்டு வளர்ந்து வரும் சமயத்தில், அவற்றின் இலைகள் வெளிறிப் போய் காணப்படும். அந்த சமயத்தில் ஒரு செடியைப் பறித்து கிழங்கின் வளர்ச்சியை சோதிக்க வேண்டும். முழுமையாக வளர்ந்து விட்டது உறுதியானால்.. அறுவடையைத தொடங்கலாம். ஈரப்பதமுள்ள மண்ணில் விளைந்திருக்கும் செடிகளைத் தண்டோடு பிடுங்கி களத்தில் குவித்து.... பிறகு, தண்டுகளை வெட்டி கிழங்குகளை மட்டும் சேகரித்து, தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்த வேண்டும். ஈரம் காய்ந்த பிறகு விற்பனை செய்யலாம். சராசரியாக ஏக்கருக்கு 1,000 கிலோ சேனை மகசூலாகக் கிடைக்கும்.
தனிப்பயிராக இருந்தால், 8 டன் வரை மகசூல் கிடைக்கும். ஊடுபயிர் அறுவடை எல்லாம் முடிந்த பிறகு, 10-ம் மாதம் மஞ்சளை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் மஞ்சள் கிடைக்கும்.
600 கிலோ வெங்காயம், 1000 கிலோ மிளகாய், 1000 கிலோ சேனை மூன்றையும் சராசரியாக கிலோ 10 ரூபாய் என்று விற்கலாம். அதன் மூலமாக 26 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 குவிண்டால் மஞ்சள் மூலமாக ஒரு லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு மஞ்சளுக்கு முட்டுவளிச் செலவு 25 ஆயிரம் ரூபாய். இந்தச்செலவை ஊடுபியர்கள் மூலமாகவே எடுத்துவிடுவதால்.. மஞ்சள் மூலமாக கிடைக்கும் மொத்தப் பணமும் லாபம் என்றார்.
ஊடுபியர் வெள்ளாமை விவசாயிகளை எப்பவும் நஷ்டத்திலிருந்து காப்பற்றக் கூடியது. ஒன்று விலை குறைந்தாலும்... இன்னொன்று சரி செய்துவிடும். அதுபோக...ஊடுபயிர்மூலமாகவே முக்கிய பயிர்களுக்குத் தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைத்துவிடும் என்பதையும் மறந்துவிடக்கூடாது என்றார்.
இயற்கை முறையில் மகசூலைக் கூட்டலாம்!
விவசாயி பாலசுந்தரம், முழுமையாக இயற்கை வழி வேளாண்மைக்கு மாறவில்லை. இயற்கை மற்றும் ரசாயனத்தைக் கலந்து கலந்துதான் செய்து வருகிறார். இங்கே மஞ்சள் மற்றும் ஊடுபயிர்களுக்கான இயற்கை முறை பயிர் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூறுகிறார் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியும், மஞ்சள் விவசாயியுமான ஈரோடு, விஜயமங்கலம், சாமிநாதன்.
இயற்கை முறை மஞ்சள் விவசாயத்தை சிறப்பாக செய்துவரும் பலநூறு விவசாயிகளில் நானும் ஒரவன். இலைப்பேன், இலைப்புள்ளி நொய், கரும்பேன் தாக்குதல், வேர் மற்றும் கிழங்கு அழுகல் நோய்கள்தான் மஞ்சளைத் தாக்கும் முக்கிய நோய்கள். இவற்றைக் கட்டுப்படுத்திட, வேம்பு எண்ணெய், புங்கன் எண்ணெய் இரண்டையும் தலா 45 மில்லி எடுத்துக் கொண்டு, இவற்றுடன் 10 மில்லி சோப்புக் கரைசலைச் சேர்த்து, பத்து லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். இக்கரைசலை மஞ்சள் நடவு செய்த 25-ம் நாள் தொடங்கி, 9-ம் மாதம் வரை வாரம் ஒரு முறை விசைத் தெளிப்பான் கொண்டு காலை வேளைகளில் செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். ஊடுபயிரான சேனைக் கிழங்கையும் இதே வகை நோய்கள் தாக்குவதால், அதற்கான பயிர் பாதுகாப்பும் கிடைத்துவிடும்.
மாதம் ஒருமுறை வளர்ச்சி ஊக்கியாக ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் வேப்பம் பிண்ணாக்கு 50 கிராம் வைக்க வேண்டும். இதை 75-ம் நாள், 150-ம் நாள், 200-ம் நாள் என்ற வரிசையில் வைத்து, பாசனம் செய்ய வேண்டும். இது, வேர் சம்பந்தமான நோய்களை விரட்டும், இதையெல்லாம் செய்தால்... மகசூலும் கூடும் என்கிறார் சாமிநாதன்.
தொடர்புக்கு
ஏ.எஸ்.பாலசுந்தரம், செல்போன்:99526 – 70584
சாமிநாதன், செல்போன்: 93630-42178
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
தென்னைக்கு நடுவே, தேக்கு... சரியா.. தவறா!

10.11.12

அனுபவ விவசாயிகளின் அற்புத அலசல்!
தென்னைக்கு நடுவே பலவிதமான ஊடுபயிர்களைச் செய்யலாம். ஆனால், மரங்களை வளர்க்கும் போது எலித்தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் எனது தோப்பில் அதிகளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதை மற்ற விவசாயிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இப்படியொரு வேண்டுகோளுடன் நம்மைத் தொடர்பு கொண்டார், தேனி மாவட்டம், உத்தமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பேராசரியர் ரமணன். இவர் உத்தமபாளையம்,’ஹாஜி ஹெதியா கருத்த ராவுத்தர் கல்லூரியின் பொருளாதாரத் துறை தலைவர் மற்றும் பேராசிரியர். கூடவே... விவசாயததை, விடாமல் செய்து வருகிறார்.
அம்மாப்பட்டியில் இருக்கிறது ரமணனின் தென்னந்தோப்பு. தோப்பில் ஓரமாக இருந்த தென்னை மரங்களுக்கு அருகே அதிகளவில் குரும்பைகள் கொட்டிக் கிடந்ததைச் சுட்டிக்காட்டியவராகப் பேச்சை ஆரம்பித்தவர், மொத்தம் 15 ஏக்கர் பூமி. இதில் இருக்கும் தென்னை மரங்களுக்கு 30 வயதாகிறது. மரத்திற்கு மரம் 25 அடி இடைவெளி இருக்கு. முழுக்க சொட்டுநீர்ப் பாசனம்தான். பக்கத்திலும் தென்னந்தோப்புதான் இருக்கு. அந்தத் தோப்பு ஓரத்தில் இருக்கும் தென்னைக்கும், எங்க தோப்பில் ஓரமாக இருக்கும் தென்னைக்கும் இடையில் 30 அடி இடைவெளி இருக்கு. நடுவில் வரப்பும் இருக்கு. அந்த வரப்பில் 15 வருடத்திற்கு முன் எங்கப்பா தேக்கு மரங்களை நட்டு வைத்தார். அதுவும் நன்றாக ஊக்கமாக வளர்ந்தது. தேக்கு மரங்களோட கிளைகள் தென்னை மட்டையொட உரசும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.
இந்த நிலையில், தேக்கை ஒட்டியிருந்த தென்னை மரங்களிலிருந்து அதிகமாக குரும்பை கொட்ட ஆரம்பித்தது. அதனால் சரியான விளைச்சலும் இல்லை. பக்கத்து தோப்பில் வரப்போறமாக இருந்த தென்னை மரங்களுக்கும் இதே பிரச்னை. அதேசமயம்.. தோப்பிற்குள் இருக்கும் மற்ற மரங்களில் இந்த அளவிற்கு குரும்பை கொட்டவில்லை. மகசூலும் நன்றாக இருந்தது. நண்பர் ஒருத்தரை அழைத்து வந்து காட்டி, காரணம் கேட்டேன். அவர்தான், இது முழுக்க முழுக்க எலியோட வேலை. தென்னையில் எலி கஷ்டப்பட்டுத்தான் ஏறும். ஆனால் தேக்கில் எலி, அணில் எல்லாம் சுலபமாக ஏறிவிடும். அப்படியே தென்னைக்குத் தாவி சாப்பிடுவதால்தான் குரும்பை கொட்டுகிறது என்று சொன்னார். உடனே, அந்த தேக்கு மரங்களை வெட்டி எடுத்துவிட்டேன். அதற்குப் பிறகு குரும்பை கொட்டுவது நின்றுவிட்டது.
அதனால், தென்னைக்குப் பக்கத்தில் தேக்கு மாதிரியான மரங்கள் இருந்தால்... எலி சுலபமாக ஏறிவிடும் என்பது என் அனுபவத்தில் பார்த்த உண்மை. இதை மற்ற விவசாயிகளும் தெரிந்து கொண்டால் நல்லது என்று நினைத்தேன். அதனால்தான் ‘பசுமை விகடனை’க் கூப்பிட்டேன் என்றார் ரமணன்.
எலிகளைக் கட்டுப்படுத்த வழி இருக்கு!
ரமணன் சொன்ன விஷயத்தை, தென்னந்தோப்பிற்குள் அதிகளவு மரங்களை வளர்த்து வரும் காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணியிடம் சொன்னோம்.
தென்னைக்கு இடையில் தேக்கு மரம் வளர்ப்பதால், எலித்தொல்லை ஏற்பட்டு குரும்பை கொட்டுவதாகச் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. எலியைப் போல், இரவு நேரங்களில் தென்னையில் ஏறி இளம் காய்களை ஓட்டை போட்டு தண்ணீரை குடித்துச் செல்லும் மர நாய்களும் இருக்கின்றன. அதனுடைய வேலையாகக் கூட இருக்கலாம். இந்த மர நாய்களைக் கட்டுப்படுத்த சில பகுதிகளில் தென்னையின் அடிப்பகுதியில் வெள்ளை அல்லது கறுப்பு வண்ணத்தைப் பூசி வைத்தால், போதும். அதே போல் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த தற்போது பத்து ரூபாய்க்கு தரமான எலிக்கொல்லி கேக்குகள் கடைகளில் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்தி எலிகளை அழிக்கலாம். அதற்காக, மற்ற மரங்களை வெட்ட வேண்டியதில்லை. குரும்பை உதிர்வதற்குச் சொல்லப்படும் பல காரணங்களில், தேக்கு போன்ற மரங்களும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர, அதுதான் முக்கிய காரணம் என்பது சரியல்ல என்கிறார் மாசிலாமணி.
தென்னையைவிட உயரமான பயிர் வேண்டாம்!
இவரைப் போலவே தென்னைக்குள் அதிகளவு மரங்களை வளர்த்து வருபவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த மது.ராமகிருஷ்ணன். அவரிடம் இதே விஷயத்தைக் கேட்ட போது.. தென்னைக்கு அருகில் தேக்கு மரத்தை சாகுபடி செய்யும்போது இரண்டிற்கும் சரியான அளவில் பாசனமும், பக்குவமும் செய்ய வேண்டும். தென்னைக்குண்டான தண்ணீரை தேக்கோ.. அல்லது தேக்கின் தண்ணீரை தென்னையோ எடுத்துக் கொண்டாலும் குரும்பை கொட்டும். தென்னையில் ஊடுபயிர் செய்யும் போது தென்னையைவிட உயரம் குறைவான பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது இதைப் போன்ற பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
தென்னைக்கு அதிக சூரிய ஒளி தேவை. எனவே, தென்னந்தோப்பில் பாக்கு, வாழை, கோகோ, வெணிலா பொன்ற 50% சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும். தேக்கு மரமானது, தென்னையை போலவே 100% சூரிய ஒளி தேவைப்படும் பயிர். அதனால் இரண்டில் ஒன்றின் வளர்ச்சி கண்டிப்பாக தடைபடும். அதில்லாமல் தென்னையை உரசும்படி தேக்கோ மற்ற மரங்களோ இருக்கும் போது, காற்றோட்டக் குறைவால் மகரந்தச் சேர்க்கையும் தடைபடும். அதனாலும், மகசூல் குறைய வாய்ப்புகள் உள்ளன. ரமணன் தேக்கு மரங்களை வெட்டிய பிறகு காற்றோட்டம் சீராகி மகரந்தச் சேர்க்கையும் சீராகியிருக்கலாம் என சில கூடுதல் விவரங்களைச் சொன்னார் மது.ராமகிருஷ்ணன்.
தொடர்புக்கு,
பேரா.ரமணன், செல்போன்: 98948 – 37007
மாசிலாமணி, செல்போன் :94436-38545
மது.ராமகிருஷ்ணன், செல்போன்:94424 – 16543
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
சமவெளியிலும் சபாஷ் போடும் சாத்துக்குடி !

25.10.12

முத்தான முயற்சி.. சத்தான வருமானம்!
வேலையாட்கள் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, இயற்கைச் சீற்றங்கள்.. எனச் சுற்றியடிக்கும் பல பிரச்னைகளால் விவசாயத்தை விட்டு விலக நினைப்பவர்களுக்குக் கண்டிப்பாக சாத்துக்குடி சாகுபடி கைக் கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார். திருவண்ணாமலை மாவட்டம், நார்த்தாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன்.
கொத்துகொத்தாக காய்த்துத் தொங்கிய சாத்துக்குடி மரங்களுக்கு இடையில் வேலை செய்து கொண்டிருந்த கமலநாதனை சந்தித்தோம். தாத்தா, அப்பா என்று எல்லோருக்கும் விவசாயம்தான் பூர்வீகத் தொழில். நானும் கல்லூரி படிக்கும்போதே விவசாயத்தையும் கவனிக்க ஆரம்பித்தேன். எம்.ஏ, எம்.எட். முடித்துவிட்டு, 32 வருடமாக வாத்தியாராக வேலை பார்த்து, இப்போது பணி ஓய்வு பெற்றேன்.
மொத்தம் 17 ஏக்கர் நிலமிருக்கு. 5 ஏக்கரில் நெல், 5 ஏக்கரில் மணிலா, 3 ஏக்கரில் கரும்பு, 2 ஏக்கரில் சப்போட்ட என்று இருக்கு. 1 ஏக்கர் 20 சென்டில் சாத்துக்குடி. மீதி 80 சென்ட் நிலத்தை கோழி வளர்ப்பிற்கும் அசோலா வளர்ப்பிற்கும் பயன்படுத்துகிறேன்.
ஆரம்பத்தில் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்கும்போது, ரசாயன உரங்களைத்தான் போடுவோம். அப்போது அதிக மகசூல் கிடைத்தாலும், போகப் போக குறைந்துவிட்டது. அதன்பிறகு பழையபடி மாட்டு எரு, ஆட்டு எருவையும் பயன்படுத்த ஆரம்பித்தோம். அதனுடன், அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் மாதிரியான இயற்கை உயிரி உரங்களையும் போட ஆரம்பித்ததும் மகசூல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிவிட்டது என்றார்.
சாத்துக்குடி குளிர்ச்சியான இடங்களில் மட்டும்தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கங்கம்பட்டு, அரிதாரிமங்கலம் பகுதியில் சாத்துக்குடியை சாகுபடி செய்திருந்தார்கள். அப்ப, நம்முடைய மண்ணிற்கும் வரும் என்று முடிவு செய்து, 95 – ம் வருடம் 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் மொத்தம் 120 செடிகளை நட்டேன். இதுவும் இயற்கை முறை சாகுபடிதான். வேலையில் இருந்ததால், சரியாக கவனிக்க முடியாமல் போனதில் 40 மரம் காய்ந்து போய்விட்டது. மீதி 80 மரங்களை நன்றாக பராமரிக்க ஆரம்பித்தேன்.
அந்த சமயத்தில் ‘பசுமை விகடனில் ‘ஜீரோ பட்ஜெட்’ கட்டுரையைப் படிக்க ஆரம்பித்ததில் அதில் ஈர்ப்பு வந்தது. திருவண்ணாமலையில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டு, பாலேக்கர் சொன்ன முறையில்.. நான்கு சாத்துக்குடி மரங்களுக்கு இடையில் ஒரு வரிசையில் சப்போட்டாவும், ஒரு வரிசையில் நெல்லியும் மாற்றி மாற்றி நடவு செய்தேன். நெல்லி போன வருடத்திலிருந்து காய்க்கிறது. சப்போட்டா இன்னும் காய்ப்புக்கு வரவில்லை

செம்மண் ஏற்றது!
சாத்துக்குடி சாகுபடி செய்ய, தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரலை மண் நிலங்கள் ஏற்றவை. மழைக் காலங்களான ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் நடவு செய்யலாம். இந்தப் பருவத்தில் நடவு செய்தால், நாற்று பழுது இல்லாமல் சிறப்பாக முளைக்கும். சாத்துக்குடி ஒட்டுச்செடிகள் பெங்களூரு, ஆந்திரா எல்லைகளிலும், தமிழ்நாட்டில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களிலும் கிடைக்கும்.
காய்க்கும் வரை சொட்டுநீர்!
20 அடிக்கு 20 அடி இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழத்தில் குழி எடுத்து 15 நாட்கள் ஆறப்போட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றைக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். நாற்றின் ஒட்டுப்பகுதி தரைக்கு மேல் அரையடி உயரத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க... நீளமானக் குச்சியை ஊன்றி செடியுடன் இணைத்துக் கட்ட வேண்டும். மரம் காய்ப்பிற்கு வரும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சொட்டுநீர்ப் பாசனமும், அதற்குமேல் நேரடியான முறையில் குழாய் பாசனமும் செய்ய வேண்டும். மரத்தில் இடைஞ்சலாக இருக்கும் கிளைகளை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெட்டி எடுக்க வேண்டும்.
ஒரு டன் எரு, 300 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவை தலா 20 கிலோ இவற்றை ஒன்றாகக் கலந்து, ஆண்டிற்கு ஒரு முறை மழைகாலத்திற்கு முன்பாகக் கொடுக்க வேண்டும். ஐந்து வயது மரங்களுக்கு 3 அடி இடைவெளியிலும், அதற்கு மேல் வயதுள்ள மரங்களுக்கு 5 அடி இடைவெளியிலும் இரண்டடி அகலத்திற்கு வட்டபாத்தி எடுத்து மேற்கண்ட கலவையில் ஒவ்வொரு மரத்திற்கும் 10 கிலோ அளவிற்கு வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விட வேண்டும்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள்!
10 வயதான சாத்துக்குடி மரங்களுக்கு, இடையில் ஒரு சப்போட்டா அல்லது நெல்லி என ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம். நான்கு மரங்களுக்கு இடையில் இதை நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் இடைவெளிப் பகுதியிலும் வருமானம் பார்க்கலாம். செடிகள் வளரும் வரை மட்டும், செடிகளைச் சுற்றியுள்ள களைகளை அகற்ற வேண்டும்.
மரத்தில் சிகப்பு எறும்புகள் இருப்பதால்... வண்ணத்துப்பூச்சித் தாக்குதலைத் தவிர வேறு விதமான பூச்சிகள் தாக்குவதில்லை.(வண்ணத்துப் பூச்சிகளுக்கும் இவர் பூச்சிக்கொல்லி தெளிப்பதில்லை).
மரத்திற்கு 250 கிலோ!
செடி நடவு செய்த 5 –ம் ஆண்டில் பூவெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். 7 –ம் ஆண்டில் மரத்திற்கு 100 கிலோ அளவிலும், 10 – ம் ஆண்டு முதல் 200 முதல் 250 கிலோ அளவிலும் சாத்துக்குடிப் பழங்கள் கிடைக்கும். பொதுவாக சாத்துக்குடியில் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் பூ எடுத்து, ஏப்ரல் – மே மாதங்களில் இடைப்பருவ மகசூலும், ஜீன் – ஜீலை மாதங்களில் பூ எடுத்து, செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் முழுமகசூலும் கிடைக்கும்.
சாத்துகுடியில், இடைப்பருவ மகசூலில் சராசரியாக 2 டன் அளவிற்கு காய் கிடைக்கும். பருவத்தில்  6 டன் அளவிற்கு காய் கிடைக்கும். ஒரு கிலோ 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரைக்கும் விற்கிறது. சராசரியாக ஒரு கிலோ 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே.. மொத்தம் 8 டன்னிற்கும் சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துவிடும்.
வருடத்திற்கு 2 டன் நெல்லி கிடைக்கிறது. அதன் மூலமாக 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இரண்டிலும் சேர்த்து வருடத்திற்கு மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். செலவு 35 ஆயிரம் ரூபாய் போக, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் லாபம் என்றார்.
தொடர்புக்கு
கமலநாதன், செல்போன் : 98945 – 36616.               
 ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு, 25.10.12 ,www.vikatan.com

புதர் நிலத்திலும் புதையல் எடுக்கலாம்... கலக்கல் வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!

25.10.12

பகதி நேர விவசாயியின் பலே சாதனை!
விவசாயத்தில் வெற்றி, தோல்வி சகஜம்தான். ஆனால், குதிரைக்குக் கடிவாளம் கட்டிய மாதிரி எல்லோரும் செய்வதையே நாமும் செய்துவிட்டு, ‘நஷ்டம், நஷ்டம்’ என்று புலம்பக் கூடாது, நம்ம மண்ணிற்கு, சூழலுக்கு எது ஏற்றதோ அதை ஆர்வத்துடனும், அர்பணிப்புடனும் செய்தால் வெற்றி தானாக வரும்.
இப்படி நம்பிக்கைத் தெறிக்கப் பேசுகிறர், சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகேயுள்ள மருதன்குடி கிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பன். பிள்ளையார்பட்டி இந்தியன் பேங்கில் அலுவலக உதவியாளராக இருக்கிறேன். விவசாயம் எனக்குப் புதிதல்ல. பரம்பரைத் தொழில்தான் ஆனால், நான் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் என்னிடம் நிலமெல்லாம் இல்லை. சொந்தமாக தோட்டம் வாங்க வசதியும் இல்லை. ஆனாலும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற  ஆசை மனதிற்குள் இருந்தது.
அப்படி இருக்கும்போது... எட்டு வருடத்திற்கு முன் நண்பர் ஒருவர் மூலமாக இந்த இடம் விற்பனைக்கு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். வந்து பார்த்த போது, புதர் மண்டி தரிசாகக் கிடந்தது. குளத்திற்குள் இறங்கி ஓடைப்பாதை வழியாகத்தான் போக வேண்டும். அதனால், யாருமே வாங்குவதற்கு முன்வரவில்லை. அந்தக் காரணத்தை வைத்தே  விலையும் குறைவாகத்தான் இருந்தது. என் பட்ஜெட்டிற்குள் இருந்ததால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று துணிந்து நான்கு ஏக்கரை வாங்கிவிட்டேன்.
உழைப்பு கொடுத்த ஊதியம்!
வாங்கிய கையோடு ஒரு குடிசையைப் போட்டு அதில் தங்கி அதிகாலை நேரம், சாயங்கால நேரங்களில் புதரை ஒதுக்க ஆரம்பித்தேன். வீட்டுப்பக்கம் போகாமல் இருக்கவே.. என் மனைவியும் இங்கே வந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தாங்க. பேங்க் வேலை முடிந்து வந்ததும்.. தோட்ட வேலையை ஆரம்பித்துவிடுவேன். கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து, தோட்டமாக்கி போர் போட்டு அடி பைப்  பொருத்திவிட்டேன். அதன் பிறகு மாங்கன்னுகளை நட்டு வைத்தேன். அதில் ஊடுபயிராக காய்கறிகளையும் சாகுபடி செய்கிறேன்.
அடி பம்பில் அடித்துதான் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன். மாங்கன்னுகளுக்குப் பக்கத்தில் சின்னத் துளை போட்ட மண்பானையை வைத்து அதில் தண்ணீரை நிரப்பிவிடுவேன். அப்படியே வளர்ந்த மாங்காயில் கிடைத்த வருமானத்தை வைத்துதான் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்து இடங்களை வாங்கினேன். இப்போது என்னிடம் மொத்தம் 10 ஏக்கர் இருக்கு.
ஊடுபயிராக வாழை!
இதில் 5 ஏக்கரில் என்.ஏ.7, சக்கையா, பி.எஸ்.ஆர் என்று நெல்லி ரகங்கள் இருக்கு. அதில் ஊடுபயிராக அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி ரக மாமரங்கள் இருக்கு. 5 ஏக்கரில் பெங்களூரா, நீலம், செந்தூரம் என்று மா இருக்கு. இதில் ஊடுபயிராக ஜீ-9, ரஸ்தாளி, கதளி என்று வாழை ரகங்கள், பலா, காய்கறிகள், எலுமிச்சை, சப்போட்டா என்று கலந்து வைத்திருக்கிறேன்.
நிலத்தோட வேலி ஓரங்களில் குமிழ், தேக்கு, ரோஸ்வுட், செஞ்சந்தனம் மாதிரியான மரங்கள் இருக்கு. மரங்களுக்கு 4 வயசாச்சு. வேலி ஓரமாக இருப்பதால், எல்லா மரங்களும் நன்றாக வளர்ந்திருக்கு.
சும்மாவே விளையும் போது செலவெதற்கு?
ஆரம்பத்தில் ரசாயன விவசாயம்தான் செய்து கொண்டிருந்தேன். இடையில் ஒரு முறை மாவிற்கு மருந்தடிப்பதற்கு நேரமில்லாமல் விட்டுவிட்டேன். ஆனால், வழக்கமாக கிடைக்கும் அதே மகசூல் கிடைத்தது. அடப்பாவி, சும்மாவே விளைவதற்கு போயா இத்தனை காசை கொட்டினோம் என்று ஆகிப்போனது. அந்த நேரத்தில்தான் ‘பசுமை விகடன்’ அறிமுகமானது. அதைப் படிக்க ஆரம்பித்த பிறகு, இனி இயற்கை விவசாயம்தான் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு, நடவு செய்த நெல்லி முதற்கொண்டு எல்லாவற்றிற்குமே இயற்கைதான். 5 வருடமாக ரசாயனத்தைக் கையில் தொடுவது கூட இல்லை.
சொட்டு நீர்... சொந்தமாக அமைத்தால் செலவு குறைகிறது!
இயற்கைக்கு மாறினதும் பஞ்சகவ்யா தயாரித்து மா மரங்களுக்கும், நெல்லிக்கும் கொடுத்தேன். நல்ல மாற்றம் தெரிந்தது. ஆனால், பஞ்சகவ்யாவை நிறுத்திவிட்டேன். இப்ப இ.எம். கரைசலைத் தயாரித்துக் கொடுக்கிறேன். அதனுடன் கடைகளில் விற்கும் ஆர்கானிக் இடுபொருட்களையும் அவ்வப்போது கொடுக்கிறேன். எல்லா மரத்திற்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான்.
தேவையானப் பொருட்களை வாங்கி கொண்டு வந்து நானே சொட்டு நீர்க் குழாய்களைத் தேவைக்கேற்ற மாதிரி அமைத்துக் கொண்டேன். அதனால் செலவு மிகவும் குறைவாகத்தான் வந்தது. மற்றபடி எனக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகளை, குன்றக்குடி கே.வி.கேயில் கேட்டுக்கொள்வேன்.
கால்சியம் பற்றாக்குறைக்கு ஜிப்சம்!
நெல்லிக்கு 16 அடிக்கு 16 அடி இடைவெளியில் ஒன்றரை கன அடியில் குழியெடுத்து.... ஒவ்வொரு குழிக்குள்ளும் 5 கிலோ நெல் உமி ஆகியவற்றைப் போட்டு நட வேண்டும். முதல் ஆண்டு முடிவில், ஒவ்வொரு செடியின் தூரிலும் 10 கிலோ குப்பை எருவைப் போட்டு, அதன் மேல் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி இ.எம்.கலந்த கரைசலை ஊற்ற வேண்டும். இரண்டாம் ஆண்டில் இருந்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்திற்கும் 10 கிலோ குப்பை எரு, 5 கிராம் அசோட்டோ பிளஸ், 5 கிராம் சூடோமோனஸ் மூன்றையும் கலந்து கொடுக்க வேண்டும்.
அது போக, கால்சியம் பற்றாக்குறை இருந்தால், ஆண்டிற்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு கிலோ ஜிப்சம் கொடுக்க வேண்டும். ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர் மாதங்களில் இலை வழித் தெளிப்பாக...ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் சூடோமோனஸ், 2 கிராம் அசோட்டோ பிளஸ், ஒரு கிராம் கருப்பட்டி என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவிற்குத் தெளிக்க வேண்டும்.
மூடாக்கு மட்டும் போதும்!
‘மா’விற்கு 30 அடிக்கு 30 அடி இடைவெளிவிட வேண்டும். நான்கு செடிகளுக்கு இடையில் எலுமிச்சை, சப்போட்டா, பலா, வாழை ஆகியவற்றை நடவு செய்யலாம். நடவிலிருந்து, 3 ஆண்டுகள் வரை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாட்டுச் சாணம் கலந்த குப்பை எருவை ஒரு செடிக்கு 10 கிலோ என்ற அளவில் போட வேண்டும். மரங்கள் பெரிதான பிறகு இலை தழைகளை மூடாக்காகப் போட்டு.. ஆணடிற்கு ஒரு முறை இடை உழவு செய்தால் போதுமானது.
நவம்பர் – டிசம்பர் மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை இலை வழித் தெளிப்பாக.. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் அசோட்டோபிளஸ், 3 கிராம் வெட்ரீசன் (பயிர் வளர்ச்சி ஊக்கி) என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவிற்கு தெளிக்க வேண்டும். வாழைக்கு மாதம் தோறும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் அசோட்டோ பிளஸ், 2 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி எனக் கலந்து தேவையான அளவிற்கு இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.
2 டன் நெல்லி! 9.5 டன் மா!
இந்த 10 ஏக்கரிலும் சேர்த்து மொத்தம் 480 மா, 320 நெல்லி, 250 வாழை, 80 பலா, 40 எலுமிச்சை, 20 சப்போட்டா, 40 செஞ்சந்தனம், 60 ரோஸ்வுட், 3 குமிழ் மரங்கள் இருக்கிறது. பலாவில் 3 மரங்கள் மட்டும்தான் காய்க்கிறது. நெல்லியில் இரண்டு வருடமாக மகசூல் கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கு 2 டன் நெல்லி, 4 டன் பெங்களூரா, நீலம், செந்தூரம் ரகங்களில் கலந்து 4 டன், இமாம் பசந்த்,அல்போன்சா ரகங்களில் கலந்து 1 டன், அரை டன் பங்கனப்பள்ளி என்று மகசூல் கிடைக்கிறது. இதுபோக, எலுமிச்சையில் இரண்டு சீசனுக்கும் சேர்த்து 60 ஆயிரம் காய்களும், ஒரு டன் சப்போட்டாவும் கிடைக்கிறது.
ஆண்டிற்கு லாபம் ரூ.1,50,000!
என்.ஏ.7 சக்கையா ரக நெல்லிக்கு சராசரியாக 15 ரூபாய் விலை கிடைக்கிறது. அந்த வகையில் 2 டன்னிற்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் பெங்களூரா கிலோ 5 ரூபாய் என்று விற்கிறது. நீலம், செந்தூரம் ரகங்கள் கிலோ 5 ரூபாய் என்று விற்கிறது. இமாம் பசந்த், அல்போன்சா ரகங்களுக்கு கிலோவிற்கு 30 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும்.
பங்கனப்பள்ளி கிலோ 20 ரூபாய் என்று விற்கிறது. மொத்தமாக மா மூலமாக ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.ஒரு எலுமிச்சை 50 பைசா வீதம் 60 ஆயிரம் காய்க்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் சப்போட்டாவை உள்ளூரிலேயே கிலோ 12 ரூபாய் என்று விற்றுவிடுகிறேன். ஒரு தார் சராசரியாக 80 ரூபாய் என்ற கணக்கில் வாழை மூலமாக 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
ஆகமொத்தம், 10 ஏக்கரிலிருந்து வருடத்திற்கு எப்படியும் இரண்டு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைக்கிறது. இதில் 50 ஆயிரம் செலவு என்று வைத்து கொண்டாலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.
இன்னும் பதினைந்து வருடம் கழித்து வேலி ஓரங்களில் இருக்கும் மரங்கள் மூலமாக ஒரு கணிசமான வருமானம் கிடைத்துவிடும். ஓய்வு நேர விவசாயத்தில் இவ்வளவு லாபம் கிடைக்கிறதே எனக்கு மனதிற்கு நிறைவாக இருக்கு என்றார்.
மதிப்புக் கூட்டினால் மகத்தான லபாம்!
நாச்சியப்பனிடம் பி.எஸ்.ஆர் ரக நெல்லியில் 20 மரங்கள் உள்ளன. அந்தக் காய்களை விற்பனை செய்யாமல் சாறு எடுத்து விற்பனை செய்கிறார். அதைப் பற்றி பேசியவர், இந்த ரக காய்கள் சின்னதாக இருக்கும். கிலோ 7 ரூபாய்க்குத்தான் கேட்பார்கள். அதனால், அதை விற்காமல் மதிப்புக் கூட்டி விற்கிறேன். காய்களைப் பறித்து அப்படியே ஒரு மண்பானை  அல்லது பிளாஸ்டிக்  குடத்தில் போட்டு காற்ற புகாத அளவிற்கு வேடு கட்ட வேண்டும். 60 நாள் அப்படியே வைத்திருந்து, அதை எடுத்து வடிகட்டினால் சாறு கிடைக்கும். 10 கிலோ நெல்லிக்கு இரண்டேகால் லிட்டர் சாறு கிடைக்கும்.
இதை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைக்க வேண்டும். தினமும் படுப்பதற்கு முன், 20 மில்லி சாறை 200 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும். இதை நிறைய பேர் என்னிடம் வாங்கி கொண்டு போறாங்க. ஒரு பாட்டில் (750 மில்லி) 200  ரூபாய் என்று விற்கிறேன். இது நன்றாக விற்பனையாகிறது. இதைச் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பசி எடுக்கும். 20 மரங்களிலிருந்து வருடத்திற்கு 800 கிலோ காய் கிடைக்கிறது. அதன் மூலமாக 240 பாட்டில் சாறு கிடைக்கிறது. ஒரு பாட்டில் 200 ரூபாய் என்று 240 பாட்டில்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இந்த வருமானம் உபரிதான் என்றார்.
தொடர்புக்கு
நாச்சியப்பன்
செல்போன்: 94420 – 43190
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு ,25.10.12 ,www.vikatan.com
பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

10.09.12

இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த  சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. அது போக, மருத்துவத்திற்குத் தேவையான பல மூலிகைகளைத் தேடித்தேடி வாங்கிட்டு வந்து வளர்த்திருக்கிறார் சொக்கலிங்கம். விஷத்திலேயே கொடிய விஷமான எட்டி, ஒத்தத் தலைவலியைக் குணப்படுத்தும் காஞ்சொறி, ஆஸ்துமாவை அழிக்கும் ஆஸ்துமா கொடி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் சர்க்கரைக் கொல்லி, இன்சுலின் செடிகளும் இங்கே இருக்கிறது. இந்த இன்சுலின் நாற்றுகளை நிறைய பண்ணைகளில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று விற்கிறார்கள். ஒரு செடியை வாங்கிக் கொண்டு வந்து அது வளர்ந்ததும் தண்டை ஒடித்து வைத்தாலே போதும், தன்னால் வளர்ந்துவிடும்.
அதேமாதிரி .. பிரம்பு, கருப்பு வெத்திலை, கருநெல்லி,  கருநொச்சி, ரசவாதத்திற்குப் பயன்படும் செங்குமரி, வெள்ளை நாவல், திருவோடு மரம், பேய்கரும்பு, வல்லாரை, ஓரிதழ் தாமரை, முடக்காத்தான், ரணகள்ளி, நீர் நொச்சி, நீர் பிரம்மி, நீல மிளகாய், தவசி, முருங்கை, மான் செவி, கேசவர்த்தினி, கரிசலாங்கன்னி, தண்ணீர் விட்டான் கிழங்கு, ஆகாயகருடன், மதனகாமப்பூ, ஈஸ்வர மூலிகை என்று வகை வகையான அறிய மூலிகைகளையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்க்கிறேன் என்றார்.
கனகாம்பரத்தில் பச்சை கலரில் பூ வரும் செடி, இரண்டு வகை வல்லாரை, இரண்டு வகை மருதாணி, மூன்று வகை பொன்னாங்கன்னி, ஐந்து வகை வில்வம், ஐந்து வகை பிரண்டை, மூன்று வகை நாரத்தை, ஐந்து வகை எலுமிச்சை என்று ஒரே செடியில் இருக்கும் பல வகைகளும் இங்கே இருக்கிறது. இருமல் உள்ளிட்ட நிறைய நோய்களை குணப்படுத்தும் சித்தரத்தை மட்டுமே தனியாக அரை ஏக்கரில் இருக்கிறது.
மொத்தமாக பார்த்தால்.. ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கே இருக்கு. இந்த மூலிகைகளை வைத்து ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, புற்றுநோய், தோல் நோய் என்று ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் எல்லா நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்த முடியும். இங்கிருக்கும் எந்தச்செடிக்கும் எந்த ஊட்டமும் கொடுப்பதில்லை. தன்னாலேயே வளர்கிறது. மூலிகையயோட குணமே அதுதான். காட்டில் உரம் போட்டா வளர்க்கிறார்கள் என்றார் சொக்கலிங்கம்.
பாம்பும் கீரியும் சண்டை போடும் போது, கீரி ஒரு இலையைச் சாப்பிடும். அதற்குப் பேர் கீரி புரண்டான் செடி, அது வேற ஒன்றும் கிடையாது. நம்ம காலடியில் கிடக்கும் சாதாரண சுண்ணாம்புக் கீரைதான். பொதுவாக, நாம செம்பருத்தி என்று சொல்லும் செடி அது கிடையாது. அதை ‘செம்பரத்தைப்பூ’ என்று சொல்லணும். செம்பருத்தி என்பது நாட்டுப்பருத்தியில் சிவப்பு கலரில் பூக்கும் ஒரு ரகம்’ என்றபடியே அந்தச் செடியைக் காண்பித்தார் சொக்கலிங்கம். எளிய மருத்துவக் குறிப்பு ஒன்றையும் சொன்னார்.
‘பல் சொத்தை, பல்லில் புழு என்று பல்டாக்டரிம் போய் ஐநூறு, ஆயிரம் என்று செலவழிப்பாங்க. அதற்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக்கிட்டு, நான்கைந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வாயில் மென்று குதப்பி துப்பினால்... எல்லாம் சரியாயிடும்.
நிறைவாக, என்னோட மூலிகைத் தோட்டத்தை பார்க்கணும் என்று ஆசைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
தொடர்புக்கு,
சொக்கலிங்கம், செல்போன் : 94439 – 19801.

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

10.09.12

வெட்டவே வேண்டாம்.. கொட்டும் வருமானம்!
மழைவளம், நிலவளம், மனிதவளம் இவை அனைத்தும் செழிக்கத் தேவையானது மரவளம். இதை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டார்கள். ஆனால், நாகரிகம் வளர வளர.. தன் தேவைக்காக மரங்களை, மரணிக்கச் செய்து வருகிறோம், நாம். அதனால்தான் மாதாமாதம் கிடைத்து வந்த மும்மாரி.. இப்போது ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கிடைத்தாலே பெரிது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது! அதன் விளைவு.. பூமிப் பந்து சூடாகி, வறட்சி வாட்டி எடுக்கிறது.
இதை மனதில் வைத்துதான், அரசு இயந்திரங்கள் மற்றும் பல்வேறு சமூக  அமைப்புகள் இணைந்து மரங்களின் மகிமையை மக்களுக்கு எடுத்துக்கூறி, மரம் நடுதல் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, தனி நபர்களின் தோட்டங்களில் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் ஒருவராக 40 ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து வேப்ப மரங்களை வளர்த்து வருகிறார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி.
நாமக்கல், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மேற்கு நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கிறது, சத்தியமூர்த்தியின் வேப்பந்தோப்பு. சாலையின் இருபுறங்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மானாவாரி மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து இருக்க, அதற்கு இடையில் பசுஞ்சோலையாக இருக்கிறது இவரது வேப்பந்தோப்பு.
குளுகுளு வேம்பவனம்!
என்னோட பூா்வீகம் ஈரோடு பக்கத்தில் இருக்கும் பஞ்சலிங்கபுரம் கிராமம். அடிப்படையில் விவசாயக் குடும்பம் தான். கூடவே, கட்டுமானப் பணிகளும் செய்து கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் தொழில் நிமித்தமாக நாமக்கல்லிற்கு வந்துவிட்டேன். இருந்தாலும், விவசாய ஆர்வம் குறையவில்லை.
இயற்கை முறையில் நாட்டு மரங்களை வளர்க்கணும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் ஓய்வு நேரங்களில் சேவை அமைப்புகளோட சேர்ந்து.. பொது இடங்களில் மரம் நடும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நம்மாழ்வார் அய்யாவோட தொடர்பு கிடைத்தது. அவரை வைத்து இயற்கை விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தினோம். அங்குதான் வேப்பமரத்தினால் மனுஷனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், அதனுடைய மருத்துவக் குணம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்.
நாமக்கல்லில் இருக்கும் ரத்தின சபாபதி சுற்றுச் சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம், தனியார் நிலங்களில் காடு வளர்ப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டே இருந்தாங்க. அதைத் தொடர்ந்து, விவசாயம் செய்ய நான் வாங்கிப் போட்டிருந்த 40 ஏக்கர் பாசன நிலத்தில் முழுக்க வேப்பங்கன்றுகளை நடவு செய்து வளர்த்து கொண்டு வருகிறேன். மொத்தம்  3, 500 மரங்கள் இருக்கு. நட்டு 6 வருடமாகிறது. சொட்டுநீர்ப் பாசனம் செய்வதால் மரங்கள் தளதளவென்று இருக்கிறது.
15 அடி இடைவெளி!
மண்கண்டம் மிகவும் மோசமாக உள்ள இடங்களைத் தவிர பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் வேப்பமரம் வளரும். கோடை உழவு செய்து நிலத்தைக் காய விட்டு, பருவமழை கிடைத்ததும் மீண்டும் இரண்டு உழவு செய்தால், சிறப்பாக இருக்கும்.
கோடை உழவு செய்யாதவர்கள் பருவமழைக் காலத்தில் நன்றாக உழுது, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 15 அடிக்கு 15 அடி இடைவெளிவிட்டு, 2  கன அடி அளவிற்க்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் செம்மண் இரண்டையும் குழியில் பாதி அளவு நிரப்பி, குழியின் மையத்தில் நாற்றுகளை நடவு செய்து, மண்ணைப் போட்டு குழியை மூட வேண்டும்.
அதிக பராமரிப்புத் தேவையில்லை!
வேர்கள் நோயுறாமல் இருக்கவும், செடிகள் ஊக்கமுடன் வளர்வதற்காகவும் நடவு செய்தவுடன் ஒவ்வொரு செடியைச் சுற்றியும் ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை ஊற்ற வேண்டும். பின்பு, சொட்டுநீர் மூலம் வாரம் ஒரு பாசனம் செய்தால் போதும். ஆண்டுக்கொரு முறை செடிகளின் பக்கக்கிளைகளை ஒடித்து கவாத்து செய்ய வேண்டும். இல்லையெனில், பக்கக்கிளைகள் பெருகி, சீரான  வளாச்சி பாதிக்கப்படும். இதைத் தவிர வேறு பராமரிப்பகள் தேவையில்லை.
ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் வருமானம்!
மரங்களை வளர்த்தால்.. வருமானத்திற்கு வருமானம் ஆச்சு, சமூகத்திற்கும் நன்மை செய்த திருப்தியும் கிடைக்கிறது. இன்னும் 15 வருடம் கழித்து இந்த மரங்களை வெட்டி விற்கலாம். இன்றைய நிலவரப்படி, ஒரு மரம் 5,000 ரூபாய் விலை என்று வைத்துக் கொண்டாலும் கூட ஒரு கோடியே எழுபத்தைந்து லட்ச ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
ஆனாலும் மரத்தை வெட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேநேரத்தில் வருமானமும் வேண்டுமே என்ன செய்வது  என்று யோசித்த போதுதான், பல நிபுணர்கள்கிட்ட ஆலோசனை செய்தேன். அதனடிப்படையில்.... வனத்தை அழிக்காமல்.... பணத்திற்கு வழி செய்யும் ஒரு திட்டத்தைத் தயார் செய்திருக்கிறேன் என்றார்.
மதிப்புக் கூட்டினால் போதும்!
அதாவது, வேப்ப மரத்திலிருந்து மதிப்புக் கூட்டியப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன். வருடத்திற்கு ஒரு முறை ஒரு மரத்திலிருந்து, குறைந்தது 3 கிலோ வேப்பமுத்து கிடைக்கிறது. அதை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். இதை வைத்து, மருத்துவ குணம் கொண்ட வேப்பெண்ணெய், அதை மூலப்பொருளாக வைத்து, இயற்கை விவசாயத்திற்கான பூச்சிவிரட்டி தயாரிக்கலாம் என்றிருக்கிறேன். மரத்திலிருந்து கிடைக்கும் கோந்தையும் சேகரித்து விற்க முடியும். இப்படி மரங்களை வெட்டாமலும் மரங்கள் மூலமாக சம்பாதிக்க முடியும். இதை, குடிசைத் தொழில் மாதிரி செய்தால் இந்தப்பகுதி மக்களுக்கும் நிரந்தர வேலைவாய்ப்பைக் கொடுக்கும் எண்ணமும் இருக்கு.
இயற்கை சரணாலயம்!
40 ஏக்கரில் விரிந்து கிடக்கும் இந்த வேப்பஞ்சோலைக்குள் ஒருமுறை சென்று வந்தாலே .. புத்துணர்வு கிடைக்கும். தினந்தோறும் வேப்பமரக் காற்றை சுவாசித்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். மூச்சுக் குழாய், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும். சா்க்கரையின் அளவு குறையும் என்று சொல்றாங்க. அதை மனதில் வைத்து, இந்த வேப்பஞ்சோலைக்குள் இயற்கை மருத்துவமனையும், ஒரு முதியோர் இல்லத்தையும் ஆரம்பிக்கப் போகிறேன். அதோட இங்கே, கிளி, மைனா, குயில், மயில், தேன்சிட்டு, புறா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவைகளும், முயல், கீரி, உடும்பு, காட்டுப்பூனை மாதிரியான விலங்குகளும் வந்து போயிட்டு இருக்கு. மேலே கூறியுள்ள உயிரினங்களுக்கு குடிநீர்த் தொட்டிகளை அங்கங்கே வைத்திருக்கிறேன். அதனால் இது ஒரு சரணாலயமாகவும் மாறிவிட்டது.
வனம் இருந்தால்தான்.. இனம் இருக்கும். மரவளம் குறைந்த நாமக்கல் மவாட்டத்தை மழை வளமுள்ள மாவட்டமாக மாற்றணும் என்பதுதான் என்னோட ஆசை. அதை மனதில் வைத்துதான், நாமக்கல் மாவட்ட மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கிறேன் என்றார்.
தொடர்புக்கு
சத்தியமூர்த்தி, செல்போன் : 98943 – 99944
தில்லை சிவக்குமார், செல்போன்: 94432-24921
கணேஷமூர்த்தி, செல்போன்: 90951 – 20888
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு Date : 10.09.2012 , www.vikatan.com


மல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

10.08.12

வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக.. தென்னை, பாக்கு, மூங்கில் உள்ளிட்ட மரப்பயிர்கள் என தங்களுடைய விவசாயத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பலரும். இவர்களுக்கு நடுவே... தினசரி வருமானம் கொடுக்கும் காய்கறிகளை, விடாமல் பயிர் செய்யும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அருகேயுள்ள சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ், அவர்களில் ஒருவராக, ஆண்டு முழுவதும் கொத்தமல்லியை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார். தன்னுடைய வயலில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனகராஜை சந்தித்த போது, அன்போடு வரவேற்று... ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தவர், எனக்கு மூன்று ஏக்கர் இருக்கு. மொத்தமும் செம்மண் பூமி என்பதால், போட்டது விளையும். பாசனம் கொஞ்சம் பற்றாக்குறைதான். ஆயிரம் அடிக்கு போர் வெல் போட்டும் ஆடு கறக்க .. பூனை குடிக்கும் கதையாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது. வழக்கமாக மிளகாய், பொரியல் தட்டை, வெங்காயம், கீரை, காய்கறிதான் சாகுபடி செய்வோம். ஆனால் இவைகளை மூன்று ஏக்கர்  முழுவதும் பயிர் செய்ய முடியாது. காரணம்.. இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் பி.ஏ.பி (பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்) தண்ணீர் கிடைக்கும். அப்போது மட்டும்தான் மூன்று ஏக்கரிலும் முழுவதும் வெள்ளாமை செய்ய முடியும்.

நஞ்சையான புஞ்சை!
வழக்கமாக என்னோட நஞ்சை நிலத்தில் மட்டும் கொத்தமல்லி கீரையை சாகுபடி செய்வேன். இந்த முறை மானாவாரி நிலத்தை குத்தகைக்கு பிடித்து, அதில் விதைத்திருக்கிறேன். என்னோட தோட்டத்திற்குப் பக்கத்தில் ஏக்கர் கணக்கில் காலி நிலங்கள் கிடக்கிறது. நல்ல மழை கிடைத்தால் மட்டும்தான் அதில் சோளம், கம்பு என்று எதையாவது விதைப்பாங்க. மற்றபடி, ஆடு மாடுகள்தான் மேய்ந்து கொண்டிருக்கும். அதனால் அதுகளோட எரு மொத்தமும் அந்த இடத்திலேயே மண்டி, நிலமும் வளமாக இருந்தது. அந்த மண்ணில் பாரம்பரிய விவசாய முறையில் கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம் என்று தோன்றவே.. இரண்டு ஏக்கரை குத்தகைக்குப் பிடித்து, என் தோட்டத்திலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் எடுத்துச் சென்று அதில்தான், இந்த முறை கொத்தமல்லி சாகுபடி செய்திருக்கிறேன். அரை, ஏக்கர் நிலத்தில்தான் கொத்தமல்லியை விதைப்பேன். ஒரு பக்கம் அறுவடை நடக்கும் போதே, அடுத்த அரை ஏக்கரில் கொத்தமல்லியை சாகுபடி செய்வதுதான் என்னோட பழக்கம். குத்தகை நிலத்திலும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறேன்.

கோழி எருவை மட்க வைத்துதான் கொட்டணும்!
கலப்பையே படாமல் இருந்த அந்த நிலத்தில் புழுதி கிளம்ப கோடை உழவு செய்து ஆறப்போட்டுத்தான் வெள்ளாமை செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் அரை ஏக்கர் நிலத்தை மட்டும் சரி செய்து, ஆரம்பித்தேன். நாட்டுக் கோழிப் பண்ணை வைத்திருக்கிறேன். அதிலிருந்து 5 டன் கோழி எருவையும் கொண்டு வந்து போட்டதில் பயிர் நன்றாக வந்திருக்கு. கோழி எரு போடும் போது கொஞ்சம் கவனமாக இருக்கணும். அதில், காரத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால், காற்றோட்டமான இடத்தில் குவியலாக கொட்டி வைத்து, 45 நாள் ஆன பிறகுதான் அதை வயலில் போட வேண்டும். இல்லையென்றால் பயிர்களோட வேரை அது பாதித்துவிடும்.

45 நாளில் வருமானம்
மணல் கலந்த செம்மண் பூமியில், கொத்தமல்லி அருமையாக விளையும். இதன் வயது 45 நாட்கள். நிலத்தை பொலபொலவென உழுது மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். அரை ஏக்கருக்கு இரண்டு டன் தொழுவுரம் அல்லது, 5 டன் கோழி எருவை அடியுரமாக இட்டு, இரண்டு முறை உழ வேண்டும். பிறகு, இடவசதிக்கு ஏற்ப சதுர பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் சிறுசிறு மண்கட்டிகள், கற்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, மண்ணை சமன் செய்து விதைக்க வேண்டும். அரை ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். விதைக்கும் போது ஓரிடத்தில் அதிகமாகவும் இன்னோரிடத்தில் குறைவாகவும் விதைகள் விழுந்தால், முளைப்பு சீராக இருக்காது. அதனால், கவனமாக விதைத்து, பாத்திகளில் உள்ள விதைகளை மண் மூடும்படி குச்சி கொண்டு கீறி, மண் நனையும் அளவிற்கு மட்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

வாரம் ஒரு பாசனம்!
விதைத்த 3 –ம் நாளில் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. விதைத்த 8 – ம் நாளில் இருந்து 10 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கும். 20-ம் நாளில் களை எடுத்து, பயிர் வளர்ச்சி ஊக்கியாக 25 கிலோ தழை – மணி – சாம்பல் சத்துக் கொண்ட உரத்தை பாசன நீரில் கரைத்துவிட வேண்டும். ( இவர் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆர்கானிக் உரத்தைப் பயனபடுத்துகிறார்.) 30 – ம் நாளில் செடிகள் ‘தளதள’வென  வளர்ந்து பச்சைக்கட்டி நிற்கும். அதன் வாசமும் நிறமும் பூச்சிகளை ஈர்க்கும். அசுவிணி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கூட்டமாக வந்து செடிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.

உடனடி விற்பனை!
45 – ம் நாளில் செடிகள் பாத்தி தெரியாத அளவிற்கு வளர்ந்து நிற்கும் இதுதான் அறுவடை தருணம். அளவான ஈரத்தில் செடிகளை வேருடன் பிடுங்கி, இரண்டு கைப்பிடி அளவிற்கு வைத்து வாழை நார் கொண்டு கட்டுகளாககக் கட்டி வேர்ப்பகுதியை மட்டும் தண்ணீரில் அலசி, வேர்களில் படிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
நிழலான இடத்தில் வரிசையாக கட்டுகளை அடுக்கி வைத்து, ஈரத்துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தழைகள் வாடி உதிர்ந்து போகாமல் இருக்கும். கொத்தமல்லி, விரைவில் வாடிப்போகும் என்பதால், அறுவடை செய்த உடனே விற்று விடுவது நல்லது.

அரை ஏக்கரில் 30 ஆயிரம்!
கொத்தமல்லியைப் பொறுத்த மட்டும் எப்பவும் கிராக்கி இருந்து கொண்டேயிருக்கும். அறுவடைக்கு நான்கு நாளைக்கு முன்பே வியாபாரிகள் வந்து பாத்திகளை கணக்குப் போட்டு முன்பணம் கொடுப்பாங்க. அதற்காக அவங்களை மட்டுமே நம்ப வேண்டியதில்லை. உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் என்று நாமாகவே நேரில் கொண்டு சென்றும் விற்கலாம். நான், இந்த அரை ஏக்கரில் 3 ஆயிரத்து 500 கிலோ மகசூல் கிடைக்கம் என்று கணக்குப் போட்டு, கிலோ 12 ரூபாய் என்று விலை பேசி வியாபாரிகளிடம் விற்றுவிட்டேன். இதன் மூலமாக 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. மொத்த செலவு 12 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் ரூபாய் லாபம்.. அதுவும் 45 நாளில் என்று விற்பனை, வருமானம் மற்றும் லாபக் கணக்குகளைச் சொன்னார்.

தொடர்புக்கு
கனகராஜ்
செல்போன் : 98427 - 07280

ஊருக்காக வேண்டாம்…நமக்காக வேண்டும்…வியக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்

25.7.12

அதிக இடம், செழிப்பான தண்ணீர், அதீத உடல் உழைப்பு, இவையெல்லாம் இருந்தால்தான் விவசயாம் சாத்தியம்’ என்பது பொரும்பாலோரின் நினைப்பு, நம்பிக்கை எல்லாம். ஆனால் மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதுபோல் கிடைக்கும் ஒரு துளி இடத்தில் கூட ஒரு செடியை நட்டு வைத்து, வளர்த்தெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரேமலதா அவர்களில் ஒருவர்.
வீட்டைச் சுற்றிலும், பசுமை கொஞ்சிக் கொண்டிருக்க, செடிகளுக்கு வாஞ்சையோடு தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்த பிரேமலதா, தன் வீட்டுத் தோட்டம் பற்றி பேச ஆரம்பித்தார். மார்த்தாண்டம், நேசமணி நினைவு கிறிஸ்துவ கல்லூரியில் கணிப்பொறித் துறை பேராசிரியராக இருக்கிறார்.  இவருடைய தாய் வீட்டைச் சுற்றிலும் கீரை, கிழங்கு என்று எதையாவது விதைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார். இவரை பார்த்து இவருக்கும் விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் வந்ததாக கூறுகிறார்.
இவரது கணவர் சர்ச்சில் போதகராக இருப்பதால் அடிக்கடி சபை மாற்றப்பட்டு வீடு மாறிக் கொண்டே இருக்கின்றனர். இந்த வீட்டிற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. இந்த வீட்டிற்குப் பின்னர் காலி மனை இருப்பதை பார்த்ததும் வீட்டு தோட்ட ஆசை வந்துவிட்டதாக கூறுகிறார். நல்ல செம்மண் இருந்ததால் நல்ல வசதியாக இருந்ததாக சூறுகிளார்.
அழகுக்கு ஆர்கிட், ருசிக்கு திசு வாழை
முன் பகுதியில் செவ்வாழை, குட்டை ரச மோரீஸ் வாழையும், பின் பகுதியில் வெள்ளைத் துளுவன், மட்டி வாழையும் நிற்கிறது. வாழையைப் பொறுத்தவரை முழுக்க இயற்கைதான். இதுபோக ஆர்கிட், அந்தூரியம், ரோஜா என்று வீட்டு முன்பகுதி முழுக்க அலங்காரச் செடிகள் இருக்கிறது. வீட்டுக்கு வருகின்றவர்கள்எல்லோருமே, ரம்மியமாக இருக்கிறது என்று இந்தச் செடியைப் பார்த்து அசந்து போகிறார்கள்.
வீட்டைச் சுற்றி, வல்லாரை, பொன்னாங்கண்ணி, பசலை, தண்டுக்கீரை, சிவப்புக் கீரை, அகத்திக்கீரை என்று எல்லா வகைக் கீரைகளும் இருக்கிறது. ஒவ்வொரு வகையான கீரையை சமையலில் சேர்த்துக் கொள்வதாக கூறுகிறார்.
இரக இரகமாக காய்கறிகள்
புதர் மிளகு, வெண்டை, தக்காளி, கேரட், பீன்ஸ், வழுதலை, கத்தரி. அவரை, பூசணி என பல வகை காய் கறிகள் ஈருக்கிறது. மரவள்ளிக் கிழுங்கு, கூவைக் கிழங்கு, சிறு கிழங்கு, சேனைக்கிழங்கு, காய்ச்சில் கிழங்கு என்று கிழங்கு வகைகளும் நிறைய இருக்கிறது. வீட்டில் வருகிற கழிவு நீரையே செடிகளுக்கு கொடுப்பதாக கூறிய அவர் தோட்டம் அமைக்கும் முறைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பல பயிர் முறை
முறையாக வீட்டுத் தோட்டம் அமைத்தால், வருடம் முழுவதும் மகசூல் பார்க்கலாம். ஓரே மாதிரியான காய்கறிகளை வரிசையாக நடாமல், வேறு பயிர்களையும் கலந்து நட வேண்டும். செடிக்குச் செடி ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். இதனால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
அரை அடிகக்குத் தோண்டி கால் கிலோ தொழுவுரம் போட்டுச் செடிகளை நட வேண்டும். எந்தக் காய்கறியாக இருந்தாலும், பராமரிப்பு ஒன்று தான். தொழுவுரம், கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, எலும்புத்தூள் எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் இந்தக் கலவையில் ஒரு பிடி அளவுக்கு தூவ வேண்டும். பலவீனமாக இருக்கும் செடிகளுக்குக் கூடுதலாக கொடுக்கலாம்.
வெயில் நேரங்களில்தண்ணீர் விடக் கூடாது. செடியின் அடி பாகத்தில் தேங்காய் மட்டையை அடுக்கி வைத்து தண்ணீர் ஊற்றினால் நிறைய நேரம் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியே வந்தாலும், வேப்பெண்ணெய், காதி சோப் கரைசலைத் தெளித்தால் போய்விடும். செடிகள், காய்கறிக் கழிவுகளை செடிகளுக்கு மூடாக்காக போட்டு வைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்கிறார் பிரேமலதா.




பூரிக்க வைக்கும் பூத் ஜலக்கியா  பத்து சென்ட் நிலத்தில் ரூ.26 ஆயிரம் லாபம்

25.7.12

பூத் ஜலக்கியா, உலகத்திலேயே அதிக காரம் உள்ள மிளகாய். இந்த ரக மிளகாய் பற்றியும்,  வட மாநிலங்களில், இதை விவசாயிகள் சாகுபடி செய்து வருவது பற்றியும் பசுமை விகடனில் சாகுபடி செய்வது பற்றி கட்டுரை வெளியிடப்பட்டது. இப்பொழுது, இதே மிளகாயை, விளைய வைத்து வியக்கக் காத்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலையில் இருக்கும் வஞ்சிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சேகர். இவர் சோதனை முயற்சியாக  நடவு செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். வளைந்து, நெளிந்து செல்லும் மலைப் பாதைகளுக்கிடையில் ‘பூ’ விட்டு நிற்கும் பருத்திச்செடிகளும் கதிர் முற்றிய சோளக் கொல்லைகளும் சூழ்ந்திருக்க சேகரின் தோட்டத்தில், சுமார் 10 சென்ட் நிலத்தில் ‘சிவப்பு’ நிறத்தில் சிர்த்துக் தொங்கிக் கொண்டிருந்தன, ‘பூத் ஜலக்கியா’ மிளகாய்கள்.

இவருக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆரம்பத்தில் மானாவாரி பட்டத்தில் வரகு, கம்பு, சோளம், கொள்ளு என்று விவசாயம் பார்த்திருக்கிறார். போதுமான வருமானம் வரவில்லை. அதனால், கடன் வாங்கி, கிணறு வெட்டி மக்காச்சோளம், பருத்தி, நெல்  என்று விவசாயம் பார்க்க ஆரம்பித்ததாக கூறுகிறார். இப்பொழுது இவர் கிணற்றில் 22 அடியில் தண்ணீர் இருக்கிறது. அதனால், இந்த போகத்தில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம், 40 சென்ட் நிலத்தில் பருத்தி, 10 சென்ட் நிலத்தில் ‘பூத் ஜலக்கியா’ மிளகாயும் சாகுபடி செய்து கொண்டிருக்கிறார். இந்த மிளகாய் விதையை  இவரிடம் ஏழுமலை என்பவர் கொடுத்து சோதனை முயற்சியாக சாகுபடி செய்யச் சொன்னார். கூடவே, எந்த விதமான இரசாயன மருந்துகளும் போடக் கூடாது என்று, இயற்கை உரம், மூலிகை பூச்சி விரட்டி என்று அவரே கொடுத்துள்ளார். அதைஎல்லாம் பயன்படுத்திதான் சாகுபடி செய்திருக்கிறார். செடி நன்றாகவே வளர்ந்திருக்கிறது. இது இதுவரைக்கும் நான்கு அறுவடை மூலம் 100 கிலோ மிளகாய் கிடைத்திருக்கிறது. மீதி அறுவடை பாக்கி இருக்கிறது என்றவர், சாகுபடி பாடத்தை ஆரம்பித்தார். ஆடிப்பட்டம், தை பட்டம் ஏற்றவை
இதன் ஆயுள் காலம் இரண்டு ஆண்டுகள். நம்முடைய மண் மற்றும் தட்பவெப்ப நிலை நிலையில் குறை்நதபட்சம் ஓர் ஆண்டுக்கு செடியை வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் இருமண் பாங்கான நிலங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டம் மற்றும் தைப் பட்டம் ஏற்றவை.

நாற்று உற்பத்தி
பசுமைக் குடில் மூலம்தான் பூத் ஜலக்கியா நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். ஈரப்படுத்தப்பட்ட தேங்காய் நார்க்கழிவை குழித்தட்டில் நிரப்பி, அதில் விதைகளை நடவு செய்ய வேண்டும். பின்னர், பாலிதீன் கவர் கொண்டு மூடி 7 நாட்கள் வைத்தால் முளைத்து விடும். 20-ம் நாளில் பயிர் வளர்ச்சி ஊக்கியும், 30-ம் நாளில் நோய் தொற்றைக் குறைக்க, இயற்கைப் பூஞ்சானக் கொல்லியும் தெளித்து வந்தால், 40-ம் நாளில் நாற்று நடவுக்குத் தயாராகிவிடும்.

10 சென்ட் நிலத்தில் 300 நாற்று
நிலத்தில் களை இல்லாமல், பொல பொலப்பாக மண் மாறும் அளவுக்கு குறுக்கு நெடுக்காக டிராக்டர் மூலம் இரண்டு உழவு செய்து, 10 சென்ட் நிலத்திற்கு 10 கூடை தொழுவுரம் என்ற கணக்கில் இட்டு, மீண்டும் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். பி்ன்னர் இரண்டு அடி அகலத்தில், பார் அணைக்க வேண்டும். பார்களுக்கு இடையில், தண்ணீர் கட்ட ஓர் அடி இடைவெளி விட வேண்டும். நிலத்தை ஈரமாக மாற்றி பாரின் ஒரு பக்கத்தில் மட்டும் 40 நாட்கள் வயதுள்ள மிளகாய் செடிகளை இரண்டு அடிக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், 10 சென்டி நிலத்தில் சுமார் 300 செடிகள் வரை நடவு செய்யலாம்.
பூச்சிகளுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி
மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். 20-ம் நாளில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதல் இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்த, டேங்குக்கு (10 லிட்டர்) 100 மில்லி வேப்பண்ணெய் 50 மில்லி காதி சோப் கரைசல் இரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும். 25 மற்றும் 50-ம் நாட்களில் ஏதாவது ஒரு பயிர் ஊக்கியைத் தெளிக்க வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரம்-2 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு -10 கிலோ, எரு -20 கிலோ ஆகியவற்றைக் கலந்து செடிக்குச் செடி வைத்து, மண் அணைக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தால், டேங்குக்கு 300 மில்லி வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்க வேண்டும்.
30 அயிரம் ரூபாய்
60-ம் நாளில் பூவெடுத்து, 75-ம் நாள் முதல் அறுவடைக்கு வந்து விடும். ஒவ்வொரு செடியிலும் 100 முதல் 120 மிளகாய்கள் இருக்கும். வாரம் ஒரு பறிப்பு வீதம், சராசரியாக, 36 முறை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 20 கிலோ வீதம், 36 பறிப்புக்கும் சேர்த்து 720 கிலோ மிளகாய் கிடைக்கும். அவற்றில் செலவு போக, 26 அயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

கிலோ 50 ரூபாய்
சேகரின் சாகுபடி பாடத்தை அடுதது, அவருக்கு பூத் ஜலக்கியா மிளகாயை சோதனை முயற்சியாக கொடுத்த விழுப்புரம் மாவட்டம், இளையனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையிடம் பேசினோம். இவர் நம்மிடம் 10 வருடமாக விவசாயிகளிடம் இருந்து மூலிகைகளை வாங்கி விற்பதாக கூறினார். ஒரு முறை பசுமை விகடனில் பூத் ஜலக்கியா மிளகாய் பற்றிய செய்தியைப் படித்து அதற்குப் பிறகு அசாம் மாநிலத்தில் உள்ள விதைக் கம்பெனியைத் தொடப்பு கொண்டு விதையை வாங்கி, தன்னுடைய தோட்டத்தில் நாற்றங்கால் போட்டுள்ளார். அதிலிருந்து50 செடிகளைப் பறித்தெடுத்து நடவு போட்டுப் பார்த்துள்ளார். நல்லாவே வந்ததாக கூறுகிறார்.


அதற்குப் பிறகு, போன தைப்  பட்டத்தில் மலைக் கிராமங்களில் எப்படி வளர்கிறது என்று பார்ப்பதற்காக சேகரிடம் கொடுத்து அங்கேயும் நன்றாகவே வந்திருக்கிறது என்கிறார். சமவெளி சாகுபடிக்கு ஆடிப்பட்டமும், மலைப் பகுதிக்கு தைப் பட்டமும் நன்றாக இருக்கிறது. இப்போதைக்கு, ஒரு கிலோ மிளகாயை 50 ரூபாய் என்றுஇவரே வாங்கி வைத்திருப்பதாக கூறுகிறார். இந்த மிளகாய்க்கான ஏற்றுமதி வாய்ப்பு சிறப்பாகவே உள்ளதாகவும் கூறுகிறார். பச்சை மிளகாய் தரத்திற்கு தக்கப்படி கிலோ 20 ரூபாயிலிந்து 200 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. காய்ந்த மிளகாய் தரத்தைப் பொறுத்து கிலோ 200 ரூபாயிலிருந்து 1இ200 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. வழக்கமாக மிளகாய் விதை சேமிப்பது போல, நன்றாக காயவைத்து விதையை சேகரித்து பயன்படுத்தலாம் என்கிறார்.
தொடர்புக்கு
சேகர்
செல்போன் : 96261 – 17026

சிறிய பரப்பு..அதிக மரங்கள்…பிரமிக்க வைக்கும் மர மகசூல் 

25.7.12

சிறிய பரப்பில் அதிகமான மரங்கள் வளர்த்தால் அவைகளின் வளர்ச்சி சிறப்பாக அமையாது என்பார்கள். ஆனால், இவர் நிலத்தில் இந்த கருத்து பொய்யாகியிருக்கிறது. குறுகிய காலத்தில் எல்லா மரங்களுமே நன்றாக செழிப்பாக வளர்ந்திருக்கிறது என்று சிலாகிக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல். தஞ்சாவூரில் புத்தக நிலையம் மற்றும் மருந்துக்கடை நடத்தி வருடம் பட்டதாரியான சக்திவேல் கூடவே விவசாயத்தையும் விடாது தொடர்கிறார். பகல் பொழுதொன்றில் தோட்டம் சென்றோம். இரண்டு வயதே உள்ள மகோகனி, குமிழ்தேக்கு, வேங்கை, செஞ்சானம், ரோஸ்வுட் உ்ள்ளிட்ட மரங்கள் வளமாக வளர்ந்து நிற்க தோட்டத்தைச் சுற்றிலும் தென்னை, பனை, பூவரசு, வேம்பு, சுிசு மரங்களும் அலங்கரித்து நின்ற காட்சியைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தோம்.

இரண்டு வருடத்திற்கு முன்பு வரை நெல் சாகுபடி செய்த நிலம்தான் இது. இப்பொழுது செழிப்பான தோட்டமாக அளிப்பதற்கு காரணமே முறையான திட்டமிடல் தான் என்ற சக்திவேல் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.
மொத்தம் 6  ஏக்கர் நிலம் இருக்கிறது. இது வண்டல் மண் பூமி. முழுக்க இரசாயன முறையில் நெல் விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறார். மரம் வளர்ப்பிலேயும், இயற்கை விவசாயத்திலேயும் ஆர்வம் ஏற்பட்டதால், இரண்டு ஏக்கரில் மட்டும் மரங்கள் வளர்க்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். ஏற்கனவே இந்த இரண்டு ஏக்கரை சுத்தி, வேலி ஓரத்தில் 40 வயதுள்ள 50 பனை: 10-15 வயதுள்ள 100 பூவரசு, 25 வேம்பு: 3 வயதுள்ள 80 தென்னை என்று இருக்கிறது. இப்பொழுது 300 பூவன் வாழை மரங்களும் வேலியில் இருக்கிறது. பொதுவாக வேலியோர மரங்களும் மாட்டு எரு கூட, கொடுப்பதில்லை. வாழைக்கும் கூட அப்படித்தான். அதனாலும்கூட, இந்த வாழை, மரங்கள் பூச்சி, நோய்த் தாக்குதல் இல்லாமல், திடகாத்திரமாக வளர்கிறது. மடல்கள் நன்றாக பரந்து விரிந்து, எப்பவும் பசுமையாக இருக்கிறது. இப்பொழுதுதான் தார் போட்டு, முதல் தாம்பு அறுவடைக்கு வந்திருப்பதாக கூறுகிறார். ஒரு தாருக்கு 225 காய்கள் வரை இருக்கிறது. பழங்கள் நல்ல சுவையுடன் உள்ளது. இந்தப் பழங்கள் 15 நாட்கள் வரை கெட்டுபோவதில்லை என்று சொன்னவர் புதிதாக மரம் வளர்ப்பில் இறங்கியதைப் பற்றிக் கூறுகிறார்.

இரண்டு ஏக்கரில்தேவையா அளவு குழி எடுத்து, 750 மகோகனி, 100 குமிழ்தேக்கு, 500 வேங்கை, 20 செஞ்சந்தனம், 500 ரோஸ்வுட், 750 முள்ளிள்ளா முங்கில் மரங்கள் என்று மொத்தமாக சேர்த்து 2 ஆயிரத்து 620 மரங்களை நடவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மரத்திற்கும் 6 அடி இடைவெளி விட்டு ஒரே வகையான மரங்கள் அடுத்தடுத்து இல்லாத மாதிரி நடவு செய்திருக்கிறார். அதிக எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதினாலட, நிறைய இலை தழைகள் உதிர்ந்து, மண் வளமாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, முள்ளில்லா மூங்கிலிலிருந்துஅதிக இலைகள் கிடைக்கிறது. இந்த மரங்களுக்கிடையில் வேறு மரங்கள் வைத்தோம் என்றால் சரியாக வளராது என்று சொல்லுவார்கள் ஆனாலும் எல்லா மரங்களும் நன்றாகத்தான் வளர்வதாக கூறுகிறார்.

முள்ளில்லா மூங்கிலில் பக்க வேர்கள் மட்டுமே இருப்பதனால், அது மண்ணிற்கு மேல் பகுதியில் உள்ள சத்துக்களை உணவாக எடுத்துக் கொள்கிறது. மற்ற வகை மரங்களுக்கு ஆணிவேர்கள் மட்டுமே அதிகமாக இருப்பதினால் இந்த மரங்கள் மண்ணிற்கு கீழ் உள்ள சத்துக்களை உணவாக எடுத்துக் கொள்கிறது. இங்கே உள்ள எல்லா மரங்களுமே சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கிறது. கடுமையான கோடையிலும் கூட மரங்களில் கொ!சம் கூட வாட்டம் தெரிவதில்லை.  நடவு செய்ததிலிருந்து முதல் ஒரு வருடம் வரைக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்ததாகவும், பிறகு மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க ஆரம்பித்ததாகவும் கூறுகிறார். களைகளை நன்றாக மண்ட விட்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, குபேட்டா ஓட்டி, மண்ணுக்குள்ளேயே புதைக்கிறோம். இதனால், களைகள் நல்ல பசுந்தாள் உரமாக மாறிவிடுகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தையும் சுத்தி, தலா 5 கிலோ மாட்டு எரு போட்டுகிட்டு இருக்கோம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை பக்க கிளைகளை மட்டும் ஒடித்துவிட்டு கவாத்து செய்கிறார். அதனால் மரங்கள் நேராக வளர்கிறது. எதிர்காலத்தில் மரங்கள் பெரிதானாலும், இடைவெளி அதிகமாக தேவைப்படும். மரங்களோட முதிர்வுக்கு ஏற்ப வெவஇவேறு கால கட்டங்களில் வெவ்வேறு மரங்களை வெட்டி விற்பனை செய்தால் மீதம் இருக்கும் மரங்களுக்கு தேவையான இடைவெளி கிடைக்கும் என்ற தொழில்நுட்பங்களை விவரித்த சக்திவேல் நிறைவாக, 7-ம் வரடம் முள்ளில்லா மூங்கில் குத்துகளில் சில மரங்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை அறுவடை செய்யலாம். 8-ம் ஆண்டு குமிழ்தேக்கையும், 15-ம் ஆண்டு மகோகனியையும், 12-ம் ஆண்டு வேங்கையையும், 30-ம் ஆண்டு செஞ்சந்தனம், ரோஸ்வுட் மரங்களையும் அறுவடை செய்யலாம் என்று அறுவடை பற்றிய தகவலொடு முடித்தார் கச்திவேல்.
தொடர்புக்கு
சக்திவேல்
செல்போன் : 99441-44888

அரை ஏக்கரில் 21 மூட்டை..கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!

25.6.12
ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக் கூடியவை. இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர். அதே சமயம், வீரிய ரக மகசூலுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை.. பாரம்பரிய ரகங்களின் விளைச்சல்  என்று இன்னொருப் பக்கம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள். இதோ.. இந்த அருண்கூட  அத்தகையோரில் ஒருவர்தான்!

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ஜங்காலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அருண். கடந்த கார்த்திகை மாதத்தில் அரை ஏக்கரில் கிச்சடி சம்பா நெல்லை நடவு செய்தார். அப்போதைக்கு, அதைப் பார்த்து சந்தேகத்தோடு பேசிய மற்ற விவசாயிகள், தற்போது அவருக்குக் கிடைத்த மகசூலைப் பார்த்த ஆச்சரியத்தில் வாயடைத்துக் கிடக்கின்றார்கள். கொஞ்சம் வருடத்திற்கு முன் நான் ஒரு ரசாயன விவசாயி. பசுமை விகடன் மூலமாக நம்மாழ்வார் அய்யாவின் தொடர்பு கிடைத்தது. அதிலிருந்து ஒரு குண்டு மணி ரசாயனம் கூட  சேர்க்காமல் மஞ்சள், வாழை, நிலக்கடலை, சாமந்தி, நெல் என்று சுழற்சி முறையில் சாகுபடி செய்கிறேன். பொதுவாகவே, எங்க ஏரியா மண்ணில் நெல் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். இந்த நிலையில் நான் கிச்சடி சம்பா நெல்லை நடனும் என்று முடிவு செய்த போது.. என்னோட நண்பர்கள் சிலர் சலனப்படுத்தினாங்க. அதோட, ‘ஆடிப்பட்டம்தான் சம்பா நெல்லுக்குப் பொருத்தமான சீசன். இப்போது விளைச்சல் சிறப்பாக இருக்காது என்று பயமுறுத்தினாங்க. ஆனாலும், எனக்குள் ஒரு வெறி, பழைய நெல் ரகங்கள், நவீன ரகங்களுக்கு ஈடுகொடுத்து விளையாது என்ற கருத்தை உடைக்கணும் என்று நினைத்தேன். அதற்காகவே தீவிரமாக களத்தில் இறங்கி, இப்போது சாதித்தும் காட்டியிருக்கிறேன் என்றார்.

இதுதான் தற்சார்பு விவசாயம்!
எங்க பகுதியில் இருக்கும் கீரைப்பட்டி விவசாயி கோவிந்தராஜ்கிட்ட, 15 கிலோ விதை நெல்லை வாங்கி வந்து நாத்து விட்டேன். நடவுக்கு 25 சென்ட் அளவு கொண்ட இரண்டு வயல்களை  எடுத்துக் கொண்டேன். ஒரு வயலில் கிளரிசீடியா மாதிரியான தழைகளையும், மண்புழு உரத்தையும் மட்டும்தான் போட்டேன். இன்னொரு வயலில் பல தானியச் செடிகளை மடக்கிச் சேர்த்து சேறடித்தேன். இரண்டு வயலிலும் சாரி ( வரிசை) நடவு முறையில், சாரிக்கு சாரி ஒரு அடி இடைவெளியில் நடவு செய்தேன்.

தற்சார்பு விவசாயம்!
பூச்சிகளைக் கட்டுப்படுத்த வயலில் அங்கங்கே பறவைத் தாங்கிகளை அமைத்தேன். வரப்பில் உளுந்து நடவு செய்தேன். இதுபோக, ஒட்டுப் பொறிகளையும் சில இடத்தில் அமைத்தேன். இரண்டு முறை மூலிகைப் பூச்சிவிரட்டி, ஒரு முறை மோர் தேங்காய்ப் பால் கரைசல் என்று தெளித்தேன். ஒரு முறை கோனோவீடர் உருட்டி களைகளை அமுக்கி விட்டேன். இவ்வளவுதான் நெல்லுக்கு நான் செய்த பராமரிப்பு. இப்படி தற்சார்பு முறையில் விவசாயம் செய்ததால்.. எனக்குப் பெரிதாக செலவு எதுவும் இல்லை. மண்புழு உரத்தைக்கூட நானே தயார் செய்து கொண்டேன்.

ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்!
50 சென்ட் நிலத்தில் 21 மூட்டை ( 80 சிலோ மூட்டை) விளைந்தது. அதாவது 1,680 கிலோ நெல். இதில் 100 கிலோவை அறுவடை செய்தவங்களுக்கு கூலியாக கொடுத்துவிட்டேன். விதை நெல்லுக்காக  120 கிலோ நெல்லை இருப்பு வைத்திருக்கிறேன். 160 கிலோவை விதை நெல்லுக்காக கிலோ 25 ரூபாய் வீதம் விற்றுவிட்டேன். மீதி, 1300 கிலோ நெல்லை, அரிசியாக்கியதில் 650 கிலோ கிடைத்தது. வீட்டுத் தேவைக்கு 300 கிலோ அரிசியை வைத்துக் கொண்டு மீதியை, கிலோ 70 ரூபாய் விலையில் விற்றுவிட்டேன். ஆக மொத்தத்தில் அரை ஏக்கரில் செலவு போக 40 ஆயிரத்திற்கும் மேல் லபாம் கிடைத்தது. பொதுவாக நெல் சாகுபடி நஷ்டம் என்று சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நெல் சாகுபடி லாபமாகத்தான் இருக்கு. இது என்னோட அனுபவத்தில் பார்த்த உண்மை என்றார் அருண். அடுத்ததாக, பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல்லை நடவு போட்டு, இதே மாதிரி விளைச்சல் எடுக்கணும் என்று தயார் பண்ணிட்டு இருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் ரசாயன ஆதரவாளர்களுக்கு நான் விடும் ஒரே கோரிக்கை.. நவீன ரக நெல்லைப் போல் பாரம்பரிய நெல் விளையாது என்று தயவு செய்து பொய் பிரச்சாரத்தை செய்யாதீர்கள் என்றார்.

தொடர்புக்கு
அருண், செல்போன் : 98653 19772.


உரம் இல்லை.. செலவு இல்லை.. வரவு உண்டு ..ஊடு பயிரில் அசத்தும் அன்னாசி!

25.6.12
எந்தப் பயிராக இருந்தாலும் சரி அதற்கேற்ற ஊடுபயிரையும் சேர்த்து நடவு செய்தால், கூடுதல் வருமானத்தோடு பிரதான பயிருக்கும் சில நன்மைகள் கிடைத்துவிடும். இதைக் கண்கூடாக உணர்ந்து கொண்ட விவசாயிகள், ஊடுபயிர் சாகுபடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான பயிராக இருக்கும் ரப்பர் மரங்களுக்கு நடுவே... அமோகமாக அன்னாசி பயிரிடப்படுகிறது. ஒரு காலத்தில் வேலிப்பயிர் என்றே அறியப்பட்டு வந்த அன்னாசியை, இப்போது  தனிப்பயிராகவே பலரும் சாகுபடி செய்து வருகிறார்கள். சத்தான சந்தைத் தேவை இருப்பதை விவசாயிகள் உணர்ந்ததுதான் இதற்கு காரணம்!
மார்த்தாண்டத்தில் இருந்து நாகர் கோவில் செல்லும் சாலையில், மூன்றாவது கிலோ மீட்டரில் இருக்கிறது காஞ்சிரக்கோடு. காணும் இடமெல்லாம் ரப்பர் சாகுபடிதான். இங்கே தன்னுடைய தோட்டத்தில் ‘ரப்பர் பால்’ சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேஸ் ராணியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள உற்சாகமாய் பேசத் தொடங்கினார்.
ஆரம்பத்திலிருந்தே இயற்கை விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறேன். குமரி மாவட்ட நஞ்சில்லா வேளாண்மைச் சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கிறேன். பொதுவாக, ரப்பர் சாகுபடிக்கு ரசாயன உரங்களைத்தான் போடுவாங்க. நான்  ரப்பரையும் இயற்கையில்தான் சாகுபடி செய்கிறேன். ஏற்கனவே முந்திரி, மா, பலா என்று மரப்பயிர்களை நடவு செய்திருந்தோம். பசங்களோட படிப்புச் செலவிற்காக கொஞ்ச பூமியை விற்றுவிட்டோம். மீதமிருக்கும் 82 சென்ட் நிலத்தில் ரப்பர் இருக்கு. அதில்தான் ஊடுபயிராக அன்னாசி போட்டிருக்கிறோம்.
ரப்பர் மரங்களுக்கு 18 வயதாகிறது. மொத்தம் 125 மரங்கள் நிற்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் பத்தடி இடைவெளி விட்டிருக்கிறேன். நடவு செய்த முதல் மூன்று வருடத்தில் ஊடுபயிராக கத்திரி, வெண்டை, வழுதலங்காய், புடலை என்று காய்கறிகளை சாகுபடி செய்தேன். வளர, வளர ரப்பர் மரத்தோட வேர் மண்ணுக்கு மேல் பகுதிக்கு வந்துவிடும் என்பதால் மேற்கொண்டு காய்கறிகளை ஊடுபயிராக போட முடியாது. அதனால்தான் இப்போது அன்னாசியைப் போட்டிருக்கிறேன். இதிலும் அசத்தலான வருமானம் கிடைக்கிறது.
வாழையைப் போல் பக்கக்கன்றுகள்!
அன்னாசி, மானாவாரி பயிர். இதோட வளர்ச்சிக்கு வெப்பமும், நிழலும் சரிசமமாக இருக்கணும். இதனால் ரப்பருக்கு ஊடுபயிராக போடும் போது.. நல்ல மகசூல் கிடைக்கிறது. இதில் ஒரே விசேஷம்  என்ன வென்றால், இதை ஒரு முறை நட்டாலே போதும்.. வாழை மாதிரி பக்கக் கன்றுகளை விட்டு பரவிடும். தொடக்கத்தில் 200 செடிகளைத்தான் நடவு செய்தேன். அதிலிருந்து பரவி இப்போது ஆயிரத்திற்கும் மேல் அன்னாசிச் செடி இருக்கிறது. மொத்த ரப்பர் மரங்களுக்கும் வருடத்திற்கு ஒரு முறை 200 கிலோ மண்புழு உரம் போடுவேன். தேவைப்பட்டால் மூலிகைப் பூச்சிவிரட்டியும் தெளிப்பேன். அன்னாசிக்கு என்று தனியாக எதையும் போடுவதில்லை. ரப்பருக்கு கொடுக்கும் இடுபொருள் மூலமாகவே அன்னாசியும் வளர்ந்து, நல்ல வருமானத்தைக் கொடுக்கிறது.
செம்மண் ஏற்றது!
அன்னாசியின் ஆயுள் காலம் ஓர் ஆண்டு. செம்மண்ணில் நல்ல மகசூல் கொடுக்கும். தனிப்பயிராக நல்ல மகசூல் நடும்போது ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் வரை நடவு செய்யலாம். ஊடுபயிராக நடும்போது இருக்கும் இடைவெளியைப் பொறுத்து செடிகளில் எண்ணிக்கை மாறுபடும்.
ஒவ்வொரு செடிக்கும் மூன்றடி இடைவெளி இருக்க வேண்டும். மண்ணை வெறுமனே கையால் தோண்டி, ஒரு கைப்பிடி தொழுவுரத்தைப் போட்டு நடவு செய்ய வேண்டும்.
களை பற்றிய கவலையே இல்லை!
அன்னாசிக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் இருப்பதால், நோய்கள் தாக்காது. ஊடுபயிர் என்பதால், அதிகமாக களை எடுக்கும் வேலையும் இருக்காது. முதல் முறை நடவு செய்யும் போது ஓராண்டு முடிவில்தான் மகசூல் கிடைக்கும். அதன் பிறகு பக்கக் கன்றுகள் அதிகமாகி விட்டால், வாரம் தோறும் மகசூல் எடுக்கலாம். ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சம் 25 காய்கள் என வைத்துக் கொண்டால்…ஓராண்டில் சுமார் 1200 காய்கள் கிடைக்கும். எந்தச் செலவும் இல்லாமல் இந்த மகசூல் கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எலி, அணில், காகம் ஆகியவற்றால் அன்னாசி கொஞ்சம் சேதமாகும். இதைக் கட்டுப்படுத்த அன்னாசிப் பழம் விளைந்ததும், வாழை நாரைக் (வாழைப் பட்டை) கொண்டு பழத்தைக் கட்டிவிட வேண்டும். இப்படி செய்யும் போது சேதாரம் தடுக்கப்படுவதுடன், காயும் பருமனாக வரும். அன்னாசிப் பழத்தைப் பறித்ததும், செடியைப் பிடுங்கி ரப்பர் மரத்திற்கு உரமாக போட்டுவிடுவேன். காஞ்சிரக் கோட்டில் இயற்கை விவசாயிகள் சோ்ந்து நடத்தும் ‘ஆர்கானிக் பஜார்’ இருக்கு எங்க தோட்டத்தில் விளையும் அன்னாசியை அங்கு கொண்டு போய் விற்றுவிடுவேன். மார்த்தாண்டம் சந்தையில் ஒரு பழத்தை பத்து ரூபாய் என்றுதான் எடுப்பாங்க. ஆர்கானிக் பஜாரில் இருபது ரூபாயிலிருந்து இருபத்தைந்து ரூபாய் வரைக்கும் விலைபோகும்.
ஒரு கன்று 1 ரூபாய் 50 பைசா விலையில் தான் அன்னாசியை வாங்கி நடவு செய்தேன். 200 கன்றிற்கும் சேர்த்து 300 ரூபாய்தான் ஆனது. அது மட்டும்தான் செலவு. இப்போது வாரத்திற்கு 20 பழம் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சம்.. ஒரு காய் 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும்.. வாரத்திற்கு 400 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மாதத்திற்கு 1,200 ரூபாய் என்றார்.
அனைத்துப் பகுதிகளிலும் பயிரிடலாம்!
ஊடுபயிராக அன்னாசி பற்றி பேசிய பேச்சிப்பாறை, கே.வி.கே (வேளாண்மை அறிவியல் நிலையம்), தோட்டக்கலை இணைப் பேராசிரியர் தங்க செல்வபாய், காற்றில் ஈரப்பதமும், சராசரியான வெப்பமும், நல்ல மழையளவும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அன்னாசியைப் பயிரிடலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில்  மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளிலும் தென்னை மற்றும் பழத் தோட்டங்களில் அன்னாசியை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் அன்னாசி சாகுபடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மூன்றாண்டுகள் வரையிலும் அன்னாசியை நடவு செய்யலாம். இருபது வயதிற்கு மேற்பட்ட மரங்கள் உள்ள தென்னந்தோப்புகள் மற்றும் அதிக இடைவெளியல் நடவு செய்யப்பட்டுள்ள பழத் தோட்டங்களிலும் ஊடுபயிராக  அன்னாசியை நடவு செய்யலாம். ஊடுபயிராக  இதை நடவு செய்யும் போது வரிசைக்கு வரிசை இரண்டு அடியும், செடிக்கு செடி ஓரடியும் இடைவெளி விட வேண்டும். புதிதாக நடவு செய்பவர்கள் முதலில் குறைந்த எண்ணிக்கையுடன், சோதனை அடிப்படையில் நடவு செய்து பார்த்துவிட்டு. பிறகு, அதிக பரப்பில் நடவு செய்வது நல்லது என்று ஆலோசனைகளைப் பகிர்ந்தார்.

தொடர்புக்கு
கிரேஸ் ராணி, செல்போன் : 95669 – 43803
தங்க செல்வபாய், தொலைபேசி : 04651 - 281759

வறண்ட காட்டில் வளம் காட்டும் மலைப்பிரதேசப் பயிர்கள்!

25.5.12
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மடத்திற்குச் சொந்தமான இடத்தில் மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகளை விளைய வைத்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே... புறக்கடைக் காய்கறித் தோட்டத்தை, இயற்கை வழி விவசாய முறையில் சிறப்பாக செய்தமைக்காக, 2004-05 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தலைசிறந்த விவசாயி (க்ருஷி சிரோக் சம்மன்) எனும் விருதை அடிகளாருக்கு வழங்கியிருக்கிறது மத்திய அரசு.
அழியும் தறுவாயிலிருந்த தென்னந்தோப்பை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள், இதையடுத்து.. கேரள மாநிலம், காசர்கோட் பகுதியில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையம், குன்றக்குடி மடத்திற்குச் சொந்தமான தோப்பில் உள்ள தென்னை மரங்களைப் பயன்படுத்தி, வறட்சியைத் தாங்கி வளரும் புதிய தென்னை ரகத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் சாலையில், பிள்ளையார்ப்பட்டிக்கு முன்னதாக அமைந்திருக்கிறது குன்றக்குடி இங்குதான் இருக்கிறது குன்றக்குடி அதீன மடம்.
அனைத்துத் தொழிலுக்கும் அச்சாணியாக இருக்கிறது உழவுத் தொழில். செடி, கொடி.. மாதிரியான தாவரங்களுக்குத் தேவையானதை மட்டும் கொடுத்தால் போதும். அவங்க, அதற்கான நன்றிக் கடனாக பூ, காய், பழம் என்று நமக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நமக்கான உணவை உற்பத்தி செய்யும் வேலையை நாமே செய்துக்கணும்தான்.. மடத்திற்கு பின்னாடியே ஒரு சின்னத் தோட்டத்தை அமைத்து, அதில் காய்கறிகளை உற்பத்தி செய்துக்கிட்டிருக்கிறோம்.
மடத்திற்கு வரக்கூடிய அன்பர்களுக்க உணவு சமைக்கவும் அந்தக் காய்களைத்தான் பயன்படுத்துவோம். அதுவுமில்லாமல் அன்பர்கள் சாப்பிடும் உணவில் நஞ்சு தெளித்த பொருட்கள் இருக்கக் கூடாது என்பதில் நாங்க உறுதியாக இருக்கிறோம். அதனால், இங்க முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயம்தான். இங்க இருக்கும் செடிகளுக்கு ரசாயன வாடையே தெரியாது என்றார். 20 சென்டில் தோட்டம் அமைத்திருக்கிறோம். ரொம்ப நாள் அந்த இடம் சும்மா கிடந்ததால் மண் இறுகிப் போய்க் கிடந்தது. அதனால், மண்ணை வளமாக்கும் முயற்சியில் இறங்கினோம். தொழுவுரம், மண்புழு உரம், காளான் கழிவுகள் என்று தொடர்ந்து கொட்டினோம். அதற்குப் பிறகு, கொத்திவிட்டு மண்ணை பொலபொலப்பாக்கினோம். நாளாக ஆக, மலைப் பகுதியில் இருக்கும் அளவிற்கு பொலபொலப்பாகவும் வளமாகவும் மண் மாறிடுச்சு.
நிலத்திற்கும் ஓய்வு தேவை
அதுக்ப்பறம்தான் கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கீரை என்று நடவு செய்தோம். மலைப்பயிர்களையும் இங்க விளைவிக்க வைக்கணும் என்று நினைத்தோம். அதற்காக குன்றக்குடி கே.வி.கே (க்ருஷி விக்யான் கேந்திரா) விஞ்ஞானிகள் கிட்ட ஆலோசனை கேட்டோம். அப்போதிருந்து இப்போ வரைக்கும், அவங்க தொழில்நுட்ப ஆலோசனைகளைச் சொல்லிக்கிட்டு இருக்காங்க. முதலில் நாங்க நடவு செய்தது, பீன்ஸ்தான் அது, நன்றாக விளைந்தது. அதன் பிறகு கேரட், நூக்கல், பீட்ரூட், கோஸ் என்று மலைப் பிரதேச காய்களை நடவு செய்தோம். எல்லாமே அற்புதமாக விளைந்தது.
மனிதர்கள் அதிகமாக உழைத்தால் ஓய்வெடுப்பது போல மண்ணிற்கும் ஓய்வு கொடுக்கணும். அதனால், ஒவ்வொர ஆண்டும் சித்திரை மாதம் தொடங்கி, பத்து பதினைந்து நாளில் அறுவடையை முடித்து, நிலத்திற்கு ஓய்வு கொடுத்துவிடுவோம். பிறகு, ஆடி மாதம் தான் அடுத்து, விதைக்க ஆரம்பிப்போம்.
நோய்களை விரட்டும் நொச்சிக் கரைசல்!
மடத்தில் இருக்கும் நாட்களில் தினமும், காலை நேரத்தில் தோட்டத்தைச் சுற்றி வருவோம். அப்போ கண்ணில் தட்டுப்படும களைகளைப் பறித்திடுவோம். அதேமாதிரி. பயிர்களில் அடிக்கடி நொச்சிக் கரைசலைத் தெளித்துக் கொண்டே இருப்போம். அதனால் பயிர்களை எந்த நோயும் தாக்குவதில்லை. 5 கிலோ நொச்சி இலையை, 20 லிட்டர் தண்ணீரில் 6 நாள் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் பத்து மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேப்பிலைக் கொத்து மூலமாக பயிரில் தெளிக்கிறோம். ராமசாமி என்றவர் தான் இந்தத் தோட்டத்தைப் பராமரித்துக் கொண்டு இருக்கிறார். இங்க விளையும் ஒவ்வொரு பொருளிலும் அவரோட உழைப்பும் இருக்கும் என்ற அடிகளார், கே.வி.கே. விஞ்ஞானி முனைவர். செந்தூர் குமரனை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
மடத்தின் பராமரிப்பில் இருக்கும் தென்னந்தோப்பு பற்றி விரிவாகப் பேச அரம்பித்த செந்தூர் குமரன், மடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் மேலப்பட்டி கிராமத்தில் 80 ஏக்கரில் தென்னந்தோப்பு இருக்கு. அங்க நிறைய மரங்கள் 100 வருடத்தைக் கடந்துவிட்டது அந்தக் காலத்தில் வரிசை இல்லாமல் நட்டிருந்தாங்க. அதில் பல மரங்கள் காய்க்கும் திறனை இழந்துவிட்டது. சில மரங்கள் சுமாராகத்தான் காய்த்தது. ஒரு முறை அந்தத் தென்னந்தோப்பிற்கு கே.வி.கே விஞ்ஞானிகளையும், பட்டுக்கோட்டை தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளையும் சாமி கூட்டிட்டுப் போனாங்க. நாங்க, மரங்களோட நிலையைப் பார்த்துவிட்டு. எல்லா மரங்களையும் எடுத்துட்டு, புதிதாக கன்னுகளை நடவு செய்யலாம் என்று சாமிகிட்ட சொன்னோம்.
வறட்சியைத் தாங்கும் தென்னை
ஆனால் அவங்க அதை எடுத்துக்காமல், மரங்களை எடுக்கக் கூடாது. இடைவெளியில் புது மரங்கள் நடுவதற்கு மட்டும் யோசனை சொல்லுங்க என்று கேட்டாங்க. அதேமாதிரி, நாட்டு ரகங்களை மட்டும்தான் நடவு செய்வது என்பதிலும் சாமி உறுதியாக இருந்தாங்க. அந்தத் தோப்பிலேயே நல்ல விளைச்சலைக் கொடுக்கக் கூடிய நாற்பது வயதுக்கும் மேலான நெட்டை ரக மரங்களிலிருந்து நெத்து எடுத்து, கன்றுகளை உற்பத்தி செய்தும் கொடுத்தாங்க. அதில் 1,000 கன்றுகளை நடவு செய்திருக்கிறோம்.
கே.வி.கே மூலமாக ஐந்து பேர் 15 நாள் அங்கேயே தங்கினோம். லே – அவுட் போட்டு, 25 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்தோம். எங்களோட சேர்ந்து சாமியும் கயிறு பிடித்து மார்க் செய்தாங்க. நிறைய வேலைகளையும் செய்தாங்க. நடவு செய்து இப்ப 6 வருடம் ஆகிறது. அந்தக் கன்றுகள் நல்ல தரமாக இருப்பதோட வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மையோட இருக்கு. இப்போது காய்ப்புக்கும் வந்துவிட்டது. தோப்பில், முழுதாக உற்பத்தித்திறனை இழந்த மரங்களை மட்டும் கழிப்பதற்கு, சாமி ஒப்புக் கொண்டார்.
கோழி எரு மட்டும்தான்
அப்போதே தோப்பில் சொட்டுநீர்ப் பாசனத்தையும் சாமி அமைத்தாங்க. அதற்குப் பிறகு, முறையாக தண்ணீர் பாய்ச்சதால் ஒவ்வொரு தென்னையும் கையால் கட்டி பிடிக்க முடியதாத அளவிற்க பருமானாகிவிட்டது. வருடத்திற்கு 4 முறை ஒரு மரத்திற்கு 25 கிலோ வீதம் கோழி எரு வைக்கிறாங்க. அதை தவிர வேற எந்தப் பராமரிப்பும் செய்வதில்லை. நெட்டை ரக மரங்கள் பொதுவாக 7 வருடத்தில் பாளை விட்டு, 10 ம் வருடம்தான் முழுமையான பலனைக் கொடுக்கும். ஆனால், இங்க இயற்கை முறையில் முறையான பாசனத்தில் வளர்வதால் 6 –ம் வருடமே 25 சதவித மரங்கள் காய்க்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மரத்திலும் 40 நான் இடைவெளியில் 8 முதல் 12 காய்கள் வரை கிடைக்கிறது.
கன்றுகள் இலவசம்
இந்தப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிறைய விவசாயிகள் தென்னை விவசாயத்தையே கை விட்டுட்டாங்க. ஆனால், இந்தத் தோப்பைப் பார்த்துவிட்டு நிறைய விவசாயிகள் திரும்பவும் தென்னை விவசாயத்திற்கு வருகிறார்கள். இன்றைக்குப் இந்தப் பகுதியில் இவ்வளவு தென்னை மரங்கள் இருப்பதற்கு சாமியோட முயற்சியும் ஒரு காரணம். சாமிகிட்டேயும் நிறைய பேர் ஆலோசனைக் கேட்டு வருவாங்க. அந்த மாதிரி வருபவர்களுக்கு பண்ணையில் உற்பத்தி செய்த கன்றுகளை இலவசமாக கொடுத்து கொண்டு இருந்தாங்க. ஆனால், இலவசத்திற்கு மரியாதை இல்லை என்பதால் நாங்க 20 ரூபாய் விலை வைத்துக் கொடுக்கலாம் என்று யோசனை சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி இன்னமும் அவங்க முடிவெடுக்கவில்லை.
வறட்சியைத் தாங்கும் புதிய ரகம்
தேசிய தென்னைசார் ஆராய்ச்சி நிலையத்தில், குறைவான தண்ணீரில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தென்னை ரகத்தை கண்டறியும் ஆராய்ச்சி நடந்துக் கொண்டிருக்கு. அந்த ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு ரக மரம் இருப்பதைக் கண்டுபிடிச்சிருக்காங்க. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு வந்த அந்த விஞ்ஞானிகள், சிவகங்கை மாவட்டத்திற்கும் வந்தாங்க. அப்போது, மடத்திற்கு சொந்தமான தோப்பில் இருக்கும் சில மரங்களை ஆராய்ச்சி செய்து, 30 மரங்களிலிருந்து பூக்கள், மகரந்தங்களை எடுத்துட்டுப் போனாங்க. அதில் இந்த ரக மரங்களும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகங்கள் என்று தெரிய வந்திருக்கு.
அதன்பிறகு, தும்கூர் ரகத்தையும், இந்த ரகத்தையும் இணைத்து ஒரு புது ரகத்தை உருவாக்கியிருக்காங்க. அதில், 50 கன்றுகளை சோதனைக்காக நடவு செய்திருக்கிறோம். அந்தக் கன்னுங்களுக்கு 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலும்  செழுமையாக இருக்கு. சுத்தியுள்ள மரங்க தண்ணியில்லாமல் காய்ந்தாலும், இந்த மரங்கள் மட்டும் பசுமையாகவே இருக்கு. முழுவதும் ஆராய்ச்சி முடிந்து இந்த ரகம் வெளிவருவதற்கு இன்னும் 10 வருடங்கள் கூட ஆகலாம். அது பயன்பாட்டிற்கு வரும்போது நிச்சயம் தென்னை விவசாயத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார் செந்தூர் குமரன்.
அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்த அடிகளார்.. நிறைவாக இயற்கை விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தணும் என்றால், இயற்கை வவிசாயம் ஒரு இயக்கமாக மாறணும். உண்ணும் உணவு நஞ்சில்லாத உணவு என்ற உத்திரவாதம் கிடைக்கணும். இதை அரசாங்கம் மட்டுமே செய்ய முடியாது. அனைவரும் ஒன்றாக இணைந்தால்தான் முடியும். இயற்கை விவசாயத்திற்கு, புதிய கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வரவேற்க வேண்டிய விஷயம். இன்றைக்கு விவசாயத்தில் பல சவால்கள் இருக்கு. சொட்டுநீர் மாதிரியான நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சவால்களைச் சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கும் காலம்.. சீக்கிரமே வரும். வாய்ப்பு இருப்பவங்க எல்லாம் வீட்டுத் தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்யணும். அதனால் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதோட கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது நஞ்சில்லாத உணவை சாப்பிடறோம் என்ற திருப்தியையும் அடைய முடியும் என்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனையையும் சொல்லி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு
செந்தூர்குமரன்,
செல்போன் : 94438 – 69408.


கமகம நறுமணம்.. கலகல வருமானம்!

25.5.12
மூலிகை சாகுபடியில் கலக்கும் சகோதரர்கள். பொதுவாக, பசுமைக் குடில் விவசாயம், மலைப்பகுதி விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை  விவசாயம் சரிப்பட்டு வராது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இக்கருத்தைத் தகர்க்கும் விதமாக, நீலகிரி மலைப்பகுதியில் முழு இயற்கை முறையில் மூலிகைகள் மற்றும் நறுமணப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள், சகோதரர்களான பிரவீண்குமார், சிவராமகிருஷ்ணன் ஆகியோர். நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்தவர்க்ள, இந்தச் சகோதரர்கள். அக்கிராமத்தின் மலைச்சரிவில் அமைந்திருக்கிறது, இவர்களது தோட்டம். நண்பகல் வேளையொன்றில் தேடிச் சென்றபோது.. தோட்டத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும்.

விவசாயம் தான் ஆத்மார்த்தமான தொழில்!
எங்க குடும்பத்திற்கு வாழ்வாதாரமே விவசாயம்தான். நாங்க சின்னக் குழந்தைங்களாக இருக்கும் போது, எங்க தாத்தா நந்தி கவுடர் பெள்ளத்தி கிராமத்து மலைச் சரிவிலிருந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில் தேயிலை வவிசாயம் பண்ணிட்டிருந்தார். அவர் அப்பவே இயற்கை விவசாயம்தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலத்தை. கவனிக்க முடியாமப் போயிடுச்சு. நான் பயோ – கெமிஸ்ட்ரி முடித்துவிட்டு சொந்தமாக பிசினஸில் இறங்கினேன். ஆனால், எதுவும் சரிப்பட்டு வரவில்லை. அதனால், விவசாயம் பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். பரம்பரைத் தொழில் என்பதைவிட எனக்கு விவசாயம்தான் ஆத்மார்த்தமான தொழிலாக தெரிந்தது.

கையைக் கடித்த பால் பண்ணை!
ஆரம்பத்தில் சும்மா கிடந்த தேயிலைத் தோட்டத்தில் பால் பண்ணை வைக்கலாம் என்று யோசனை தோணுச்சு. அந்த இடத்தை சுத்தப் படுத்தி சீமைப்புல், சோளத்தை விதைத்து உறவுக்காரர் ஒருத்தரோட சேர்ந்து பத்து பால் மாடுகளை வாங்கி விட்டேன். ஆரம்பத்தில் இருந்தே, ரசாயனத்தை தொடவே கூடாது என்ற  கொள்கை இருந்ததால்.. தீவனப் பயிர்களுக்கும் தொழுவுரம்தான். நான்கு சிமெண்ட் தொட்டிகளைக் கட்டி, மாட்டுத் தொழுவத்திலிருந்து வரும் மாட்டுச் சிறுநீர், அந்தத் தொட்டிகளுக்கே நேரடியாக வரும் மாதிரி வாய்க்கால் வெட்டினோம். அதில் சாணத்தையும் கொட்டிக் கரைத்து விட்டதால்.. தீவனமெல்லாம் நல்லா செழிப்பாக வந்தது. ஆனால், நாங்க மாடு வாங்கும் போது, சரிவர கவனித்து வாங்கததால், கறவை சரியில்லாமல் போயிடுச்சு. பால் பண்ணைத் தொழில் கையைக் கடிக்கவே, அதை உடனடியாக நிறுத்திவிட்டு, கேரட், கொத்தமல்லி, குடமிளகாய் என்று பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

தொழுவுரம், பஞ்சகவ்யா என்று முழு இயற்கை விவசாயம் செய்ததால்.. நல்ல விளைச்சல் கிடைத்தது. ஆனால், எங்க நிலம் ரிசர்வ் ஃபாரஸ்டுக்குப் பக்கத்தில் இருந்ததால்.. மான், காட்டுமாடு, கரடி என்று வரிசையாக விலங்குகள் வந்து தோட்டத்தை துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அதையெல்லாம் மீறி, கிடைப்பதைத்தான் விற்பனை செய்துக் கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் ஒன்றுமே மிஞ்சாத சூழ்நிலை வந்து, வெறுத்துப் போயி காய்கறி சாகுபடியையும் நிறுத்தியாச்சு. ஆனாலும், விவசாயத்தை விட்டு வெளியில் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். விலங்குகளால் பிரச்சனை வரக்கூடாது, அதே சமயத்தில் வருமானமும் வரும் மாதிரியான பயிராக இருக்கணும் என்று தேட ஆரம்பித்தேன். அப்போதுதான், ரோஸ்மேரி, தைம், ஸ்வீட் பேசில்.. மாதிரியான நறுமண மூலிகைப் பயிர்கள் பற்றித் தெரிய வந்தது.

இது எல்லாமே, சமையல் பொருட்களாகவும், நறுமணப் பொருட்களாகவும் பயன்படுவதால்.. உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நல்ல வரவேற்பு இருக்கு என்று தெரிந்து கொண்டேன். அதையெல்லாம் இயற்கையில் சாகுபடி செய்ய முடியும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
மலைச் சரிவு நிலத்தை டிராக்டர் மாதிரியான இயந்திரங்களை வைத்து உழவு செய்வதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். முள் கம்பி மாதிரியான உபகரணங்கள் மூலமாக ஆட்கள் தான் நிலத்தைக் கீறி விடணும். அப்படித்தான் இந்த நிலத்தையும் தயார் செய்து.. நறுமணப் பயிர்களை விதைத்தோம். இங்க தண்ணீர் பிரச்சனையும் கிடையாது.
மலையில் அங்கங்க ஊத்துகள் இருக்கும். எங்க நிலத்திற்கு மேல் சின்டெக்ஸ் தொட்டியை வைத்து ஊத்துத் தண்ணீரை டியூப் மூலமாக கொண்டு வந்து நிரப்பிடுவோம். தொட்டியிலிருந்து பள்ளத்திற்குப் பாயும்போது தண்ணீரோட வேகம் அதிகமாக இருக்கும். ஸ்பிரிங்க்ளர் வைத்து தெளிப்பதற்கும் எங்களுக்கு கரன்ட் தேவையில்லை. புவி ஈர்ப்பு விசை மூலமாகவே தண்ணீரோட பிரஷரில் தானாகவே பாய்ச்சிடுவோம்.
விற்பனையில் பிரச்சனையில்லை
முழு இயற்கை முறையில்தான் சாகுபடி செய்கிறோம். போதுமான அளவிற்கு வருமானம் கிடைத்துவிடுகிறது. ஹோட்டல்களில் சிக்கன், மட்டன் மாதிரியான இறைச்சிகளை சீக்கிரமாக வேக வைப்பதற்காக ரோஸ்மேரி தைம் மாதிரியான இலைகளைப் பயன்படுத்துவாங்க. இதைப் பயன்படுத்தும் போது கறிக்கு நல்ல வாசனையும், சுவையும் கிடைக்கும். அதில்லாமல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் இந்த இலைகளில் தேநீர் மாதிரியான பானம் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க. இதைக் குடிக்கும் போது மன அழுத்தம் விலகுகிறது என்றும் சொல்றாங்க.
சமையலுக்கு மட்டும் இல்லாமல்.. அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கவும் இந்த மாதிரியான நறுமண மூலிகை இலைகளைப் பயன்படுத்துறாங்க. அதனால் இந்தப் பயிர்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. விற்பனையைப் பொறுத்தவரை எங்களுக்குப் பிரச்சனையே கிடையாது. ஊட்டி ஹெர்ப்ஸ் என்று நாங்க ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறோம். அது மூலமாகவே நாங்க விற்றுவிடுகிறோம்.
ஆனால், தேவையான அளவிற்கு உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. மலைகளில் இருக்கும் இடங்களில் இந்த மாதிரியான பயிர்களை விளைவித்தால்.. நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதி. இப்போது, இந்தப் பயிர்களை சமவெளிப் பகுதிகளிலும் சோதனை அடிப்படையில் விளைவித்துப் பார்த்துக்கிட்டிருக்காங்க. அது வெற்றி அடைந்தால், எல்லா விவசாயிகளும் பயனடைய முடியும்.
ஒரு கிலோ 30 ரூபாய்!
நாங்க 2 ஏக்கரில் ரோஸ்மேரி, 4 ஏக்கரில் தைம், 1 ஏக்கரில் ஒரிகனா, அரை ஏக்கரில் சேஜ், அரை ஏக்கரில் ஸ்வீட் போசில் என்று மொத்தம் எட்டு ஏக்கரில் இந்த நறுமண மூலிகைப் பயிர்களைப் போட்டிருக்கிறோம். இது போக.. வரப்பு ஓரங்களில் லிப்பியா என்ற செடியையும்.. சேஜ் பயிருக்குள்ள ஊடுபயிராக மருகு செடியையும் நடவு செய்திருக்கிறோம்.
இந்த நறுமணப் பயிரிகளைப் பொறுத்த வரை, இலையை மட்டும்தான் அறுவடை செய்யணும். நாங்க பயிரிட்டிருக்கும் செடிகளோட இலைகளை கிலோ 30 ரூபாய் என்று தோட்டத்தில் வந்து வாங்கறாங்க. வெளி மார்க்கெட்டில் இந்த இலைகள் எல்லாம் கிலோ 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரைக்கும் விலை போய்க்கிட்டிருக்கு.
ஆண்டுக்கு 100 டன் மகசூல்!
முதல் வருடத்தில் எல்லா பயிர்களும் சேர்த்து.. 32 டன் மகசூல் கிடைத்தது.அதை கிலோ 30 ரூபாய் என்ற கணக்கில் விற்றதில்... 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. அதில் உழவு.. நாத்து, இடுபொருட்கள் எல்லாவற்றிற்குமா சேர்த்து 6 லட்ச ரூபாய் வரைக்கும் செலவானது. அதுபோக, 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் லாபம். இந்த வருஷம் பயிர்களெல்லாம் நல்ல செழிப்பாக வளர்ந்திருக்கு.
இனி, ஒவ்வொரு வருடமும் 100 டன் இலைகளுக்குக் குறையாமல் மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் பார்த்தால்.. வருடத்திற்கு 30 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் இடுபொருட்கள், பராமரிப்புச் செலவு போக எப்படியும் எட்டு ஏக்கரிலும் சேர்த்து வருடத்திற்கு 25 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு
பிரவீண்குமார்,
செல் போன்: 94423-25509.

காடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்!

25.5.2012
எனக்க 22 ஏக்கர் நிலம் இருக்கு. 5 ஏக்கரில் சவுக்கும், 5 ஏக்கரில் தைல மரமும் இருக்கு. மீதி 12 ஏக்கரில் நெல் சாகுபடி பண்ணிட்டிருக்கிறேன். ஆனால், எங்க பகுதியில்  வெலையாட்கள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். அதே போல், உழைப்பிற்கு ஏற்ற லாபமும் இல்லாததால், நெல் சாகுபடியை முழுயைாக கைவிட்டுட்டு, மொத்தத்திற்கும் மரங்களை வைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான ஆலோசனை கிடைக்குமா என்று பசுமை விகடனின் நேரடி குரல் பதிவு சேவை மூலமாக ஆதங்கக் குரலைப் பதிவு செய்திருந்தார், புதுக்கோட்டை மாவட்டம், கீழ்ச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். இவருக்கு ஆலோசனை சொல்ல புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி.

பாலசுப்ரமணியத்திடம் பேசி, பிரச்சனையை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட தங்கசாமி.. இதற்காக ஒட்டு மொத்தமாக நெல் உற்பத்தியையே கைவிடறேன் என்று சொல்வது நமக்கும் நல்லதல்ல நாட்டிற்கம் நல்லதல்ல. அதற்காக தொடர்ந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டே இருக்கணும் என்ற அவசியமும் இல்லை. அதிகமான பரப்பில் நெல்லு பயிரிட்டால்தானே எல்லா பிரச்சனையும். இரண்டு ஏக்கரில் ம்டும் நெல் பயிர் செய்து பாருங்க. பிரச்சனைகள் மிகவும் குறைந்துவிடும். வசதிபட்டால், அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சுடுங்க. மீதி நிலத்தில் மரங்களை வைத்து சமாளித்துவிடலாம் என்றபடியே நிலத்திற்குள் நடக்கத் தொடங்கினார்.

சரிங்கய்யா, நீங்க சொல்வது போலவே நெல்லுக்கு இரண்டு ஏக்கர் ஒதுக்கிடறேன். மீதியு்ள்ள பத்து ஏக்கரில் குமிழ், தென்னை என்ற வைத்து விடட்டுமா எனக் கேட்டார் பாலசுப்ரமணியன். உடனே குனிந்து, ஒரு குச்சியால் மண்ணை நன்கு கிளறி கையில் அள்ளிப் பார்த்த தங்கசாமி, இது ஈழக்களி.. லேசா மழை பெய்தாலே, சொதசொத என்று ஈரம்  கோத்துக் கொள்ளும்.அதனால், குமிழ் சரியாக வராது. நாட்டுத் தேக்கும் கூட சரியாக வளராது. தென்னை நல்லாவே வளரும். என்று சொன்னார். உடனே ஆர்வமான, பாலசுப்ரமணியன், அப்படினால் பத்து ஏக்கரிலுமே தென்னை வைத்துவிட வேண்டியதுதான் என்றார்.

தொடர் வருமானம் தரும் மூங்கில்
தென்னைக்கு தண்ணீர் செழிம்பாக இருக்கணும். உங்கப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், எதிர்காலத்திலும் மனசை வைத்துதான் எந்த ஒரு முடிவையும் எடுக்கணும். முதலில் இரண்டு ஏக்கரில் மட்டும் 25 அடி இடைவெளயீல் தென்னை நடவு செய்ங்க. ஏக்கருக்கு 75 தென்னை வரும். இரண்டு தென்னைக்கு நடுவில்  நாட்டு ரக எலுமிச்சைக் கன்றை நடுங்க. அடுத்ததாக.. இரண்டு ஏக்கர் ஒதுக்கி, 15 அடி இடைவெளியில் முள்ளில்லாத மூங்கில் வைங்க. இந்த மண்ணில் அது நன்றாக வளரும். அந்த மூங்கிலே ஏராளமான தழைகளை உதிர்க்கறதால், மண்ணும் வளமாகும். அடுத்த ஐந்தாவது வருடத்தில் இருந்து தொடர் வருமானமும் கிடைக்கும். என்று சொல்லிக் கொண்டே வந்தவர்.. ஒரு குறிப்பிட்ட பகுதியில் நின்று கொஞ்சம் ஆழமாக யோச்சித்தார்.. பிறகு, இந்த இடத்தில் நீர்ப் பிடிப்பு அதிகமாக இருக்குமே எனக் கேட்டார்! ஆமாங்க, மழைக்காலங்களில் இந்த இடத்தில் மட்டும் அளவிற்கு அதிகமாகவே ஈரம் கோத்துக் கொள்ளும் என்றார் பால சுப்ரமணியன்.

தண்ணீர் தேங்கினால் சவுக்கு!
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்த தங்கசாமி, அப்போ இந்தப் பகுதியில் இரண்டு ஏக்கரில் சவுக்கு நடவு பண்ணுங்க. நான்கடி இடைவெளி விட்டாலே போதுமானது. ஆக, ஆறு ஏக்கருக்கு முடிவாயிடுச்சு. மீதி இருக்கும் 4 ஏக்கரில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா, நெல்லி, நாவல், இலந்தை, முந்திரி, விளா, கிளாக்காய், சீதா, பூவரசு, புளி, வேங்கை, வேம்பு, ரோஸ்வுட், மகோகனி எல்லாத்தையும் கலந்து நடவு செய்யுங்க. ஒவ்வொரு கன்றிற்கும் 15 அடி இடைவெளி விடணும். ஒரே வகையான மரம் அடுத்தடுத்து வரக்கூடாது. ஒரு பழ மரம் வைத்தால்.. பக்கத்தில் மரவேலைப்பாடுகளுக்கு உதவக்கூடிய மரத்தை வைக்கணும். இப்படி மாற்றி மாற்றி வைத்து, காடு மாதிரி வளர்த்தால்.. நல்ல காசு பார்க்கலாம். வேலையாட்களுக்காகவும் கஷ்டப்பட தேவையிருக்காது. இப்ப நான் சொல்லி இருக்கும் மரங்கள் எல்லாமே.. இந்த மண்ணில் நன்றாக வளரக்கூடிய மரங்கள்தான்.

வேம்பு இருந்தால், சந்தனமும் வளரும்!
அப்போ பால மரத்தை இங்க வைக்கக் கூடாதா? என்று ஏமாற்றத்துடன் கேட்டார் பாலசுப்ரமணியன். இந்த மண்கண்டத்திற்கு அது சரியாக வராது. ஆசைப்பட்டால் ஒன்று, இரண்டு வைச்சு பாருங்க என்றார் தங்கசாமி. இங்க வேம்பு நல்லா விளைவதால் கண்டிப்பாக சந்தன மரமும் நல்லா வளரும். நான் சொன்ன பட்டியலில் சந்தன மரத்தையும் சேர்த்துக்கோங்க. ஓய்வெடுக்கும் கொட்டகையைச் சுற்றி, 15 அடி இடைவெளியில் பிலானிச், மந்தாரை, அசோகா, கொன்றை, புங்கம், சில்வர் ஓக், வேம்பு மரங்களை வளருங்கள். நாம ஓய்வெடுக்கும் இடத்தில் நிழல் முக்கியம். பிலானிச் மரத்தில் அழகான பூக்கள் பூக்கும். அது மனதிற்கு ரம்மியமாக இருக்கும் என்றார். வேலி ஓரத்தில் ... பூவரசு, வேம்பு, புளி, பனை, புங்கன், சவண்டல், கிளுவை மாதிரியான மரங்களை 10 அடி இடைவெளியில் வைங்க. இது முதல் அடுக்கு காற்றுத் தடுப்பு வேலியாக பயன்படும். அதிலிருந்து 6 அடி உள்ளார தள்ளி, பூவரசு, வேம்பு, புங்கம், புளி, பனை, சவண்டல் மரங்களை 10 அடி இடைவெளியில் நட்டு, இரண்டாமடுக்கு தடுப்பு வேலியை உருவாக்கணும். முதல் அடுக்கில் உள்ள மரங்களும், இரண்டாம் அடுக்கில் உள்ள மரங்களும் முக்கோண நடவு மாதிரி இருக்கணும்.

ஊடுபயிரிலும் வருமானம்!
மரக்கன்றுகளை நடுவதற்கு முன், முக்கியமான ஒரு வேலையைச் செய்தாகணும். முதலில் மூன்று சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு நான்கு டன் அளவிற்கு தொழுவுரம் போட்டு, திரும்பவும் ஒரு சால் உழவு ஓட்டணும். ஏக்கருக்கு 20 கிலோ அளவிற்கு நவதானிய விதைகளை தெளித்துவிட்டு, 45 – ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதுவிடணும். அதற்கு அப்புறம் தனர் மர கன்றுகளை நடணும். நாம நடப்போற கன்றுகளோட வயது, உயரத்திற்கு  ஏற்ற மாதிரி குழி எடுக்கணும். அதில் தொழுவுரம், வேப்பம்பிண்ணாக்கு, மணல், மேல் மண் போட்டு நடவு செய்யணும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் விட்டாப் போதும்.

மரங்களுக்கு இடையில் ஐந்து வருடம் வரைக்கும் எள், தட்டைப்பயறு, பச்சைப்பயறு, கொள்ளு.. மாதிரியான பயிர்களை ஊடுப் பயிராக சாகுபடி செய்து ஒரு வருமானம் பார்த்துவிடலாம். முள்ளில்லா மூங்கில் மட்டும்  மூன்று வருடம் வரைக்கும் தான் ஊடுபயிராக சாகுபடி பண்ணனும் என்று பக்குவமாக சொன்ன தங்கசாமி, இதற்கெல்லாம் பெரிதாக பராமரிப்பு பார்க்க வேண்டியதில்லை. வேலையாட்களும் அதிகமாக தேவைப்படாது. தென்னை, பழ மரங்களில் ஐந்தாவது வருடத்திலிருந்தே வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.  வேலைப்பாடுகளுக்கான மரங்களில் வருமானம் பார்க்க 20 வருடம் காத்திருக்கணும் என்று முடித்தார்.

தொடர்புக்கு
மரம் தங்கசாமி, செல்போன் : 97866  04177.
பாலசுப்ரமணியன், செல்போன் : 99420 77004.

காய்க்காத மரமும் உண்டோ

10.4.2012
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் இவருடைய தோட்டத்துக்கு நாம் அழைத்துச் சென்ற பசுமை டாக்டர் மாசாகுடியில் நெடிய அனுபவம் வாய்ந்த, திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியைச் சேர்ந்த செளந்திராஜனைத்தான். இது எங்க பூர்வீகத் தோப்பு இந்தப்பகுதியில் முதன் முதல்ல மாசாகுபடியை ஆரம்பிச்சவர் எங்கப்பதான். அவருக்குப் பின்னாடி சரியா பராமரிக்க முடியாம போயிடுச்சு. நான் வணிக வரித் துறையில இணை ஆணையரா வேலை பார்த்துட்டு இருந்ததால் அடிக்கடி வந்து தோட்டத்தைப் பார்க்க முடியல. வேலையாளை வைத்து தான் பார்துகிட்டு இருக்கேன். என்னோட பசங்களுக்கும் விவசாயத்துல ஆர்வம் கிடையாது இப்போ நான் ரிட்டயர்டு ஆயிட்டேன். அதனால முழுசா விவசாயத்துல இறங்கிவிட்டேன்.

ஆறு வருஷத்துக்கு முன்ன, நண்பர் ஒருத்தர், சேலம் பெங்களூரா ரகத்துல அதிகமான மகசூல் கிடைக்கும்’னு சொன்னதை வைத்து , இந்த ரகத்தை வாங்கிட்டு வந்து நடவு செய்தேன் . மரம் நல்லாத்தான் வளர்ந்துருக்கு பூவும் பிடிக்குது. ஆனா, காய் காய்க்க மாட்டேங்குது “ என பிரச்சனையை ‘பசுமை டாக்கடர்’ செளந்திராஜனிடம் தெளிவாக எடுத்து வைத்தார், தேவநாதன். அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட செளந்திராஜன், “காய்க்காத மரம்னு எதுவும் இருக்க முடியாது. உங்க மரம் காய்க்காததுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அதைக் கண்டுபிடிச்சுட்டா சுலபமா காய்க்க வைத்துவிடலாம். என நம்பிக்கை கொடுத்தபடி தோட்டத்துக்குள் ஒரு சுற்று வந்தார்.

அளவான தண்ணீர் அவசியம்
“நல்ல வளமான மண்ணுதான், ஆனா, பராமரிப்புதான் சரியில்ல. சரியானபடி பாசனம் செய்யவில்லை. எந்தப் பயிராக இருந்தாலும், தண்ணீர் முக்கியம். அதை அதிகமாகவும் கொடுக்கக் கூடாது, குறைச்சலாவும் கொடுக்கக் கூடாது. தேவையான நேரத்தில் தேவையான அளவு கொடுக்கணும், தேவையில்லாதப்ப கொடுக்கவே கூடாது. ஆனா, பல விவசாயிக கரன்ட் வந்தா உடனே தண்ணீர் பாய்ச்சிடணும்னு நினைக்கறாங்க.
இந்தத் தோப்பைப் பொருத்தவரைக்கும் மரங்களுக்கு தேவையான அளவுக்கு தண்ணிர் பாய்ல. எல்லாம் கொலை பட்டினியா இருக்கு. அப்பப்ப பாய்ச்சுற தண்ணீர் வைத்து உயிரைக் காப்பாற்றி கொண்டு இருக்குது. அதனால முதல்ல மரங்களுக்கு தண்ணீர் கொடுங்க. ஒவ்வொரு மரமும் ‘ தன் எஜமானனுக்கு ஏதாவது செய்தே ஆகணும்’னு நினைக்கும். இப்பக்கூட நீங்க உள்ள வந்ததை அது உணர்ந்திருக்கும். எஜமான் வந்துட்டாரு நமக்கு ஏதாவது நல்லது செய்வாரு’னு நினைக்கும். அதை ஆத்மார்த்தமா நேசிச்சாத்தான் அது புரியும். ‘வேலையாட்கள் பாத்துக்குவாங்க’னு நினைக்காம நீங்களும் அர்ப்பணிப்போட அக்கறை காட்டணும்.
ஆனா, காய் காய்க்க மாட்டேங்குது “ என பிரச்சனையை ‘பசுமை டாக்டர்’ செளந்திரராஜனிடம் தெளிவாக எடுத்து வைத்தார், தேவநாதன்.
அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட செளந்திரராஜன், “காய்க்காத மரம்னு எதுவும் இருக்க முடியாது. உங்க மரம் காய்க்காததுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அதைக் கண்டுபிடிச்சுட்டா சுலபமா காய்க் வைத்துவிடலாம். என நம்பிக்கை கொடுத்தபடி தோட்டத்துக்குள் ஒரு சுற்று வந்தார்.
அளவானதண்ணீர் அவசியம்
நல்ல வளமான மண்ணுதான். ஆனா, பராமரிப்புதான் சரியில்ல. சரியானபடி பாசனம் செய்யல. எந்தப் பயிரா இருந்தாலும், தண்ணீர் முக்கியம். அதை அதிகமாகவும் கொடுக்கக் கூடாது.
இதை இப்படி செய்தால், இவ்வளவு கிடைக்கும் இருந்த இடத்திலேயே போடுகிற கணக்கெல்லாம் விவசாயத்துக்கு உதவாது. நம்ம நேரடிப் பார்வையில, முறையானப் பராமரிப்பும் இயற்கையின் ஒத்துழைப்பும் இருந்தா மட்டும்தான் எதிர்பார்த் மகசூல் கிடைக்கும். பூவெடுத்த பிறகு பாசனம் செய்யலைன்னா பூ கொட்டத்தான் செய்யும். அதனால், உடனே நீங்க பாசனத்தைக் கொடுங்க இப்ப பிடிச்ச பூவெல்லாம் பிஞ்சா மாறும். அதே நேரத்தில வளர்ச்சி ஊக்கி தெளிச்சா பிஞ்சுக உதிராது.
மரத்தையும் உயிருள்ள ஒரு பொருளா நினைச்சு, அந்தந்த நேரத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்பை செஞ்சுட்டா மகசூலுக்குப் பஞ்சமே இருக்காது. அதேப்போல உங்க மரங்கள பறவைக் கண்நோய் தாக்கியிருக்கு. இதனாலதான் மரங்களில் இலை, கிளை, காய்னு தார் பூசினது கணக்கா கருப்பு நிறத்துல இருக்கு. நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் இந்த நோய் வருது சூடோமோனஸ் ஃப்ளோரோசன்’கிற உயிரி பூஞ்சணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி கலந்து தெளிச்சா இது சரியாகிடும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் 20-ம் நம்பர் ஆய்வுக்கூடத்தில் இது கிடைக்கும். மழைக் காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்த மருந்தைத் தெளிக்கணும். இதை மட்டும் சரியா செய்ங்க. உங்க மரம் தன்னால காய்க்க ஆரம்பிச்சுடும்.

தொடர்புக்கு
தேவநாதன்,கோபால்பட்டி கிராமம், திண்டுக்கல் மாவட்டம்
செல்போன்: 9442217079
செளந்திரராஜன்
பழனி, திண்டுக்கல் மாவட்டம்,
செல்போன் : 98421-28882

செழிப்பு தரும் ‘தெளிப்பு’

10.4.2012
ஆறு, ஏரி, ஏற்றம், கமலையேற்றம், ஆயில் இன்ஜின், பம்ப்-செட், போர்வெல்... என்று நீர் மேலாண்மை படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால், பாசன மேலாண்மை மட்டும் ‘மண்வெட்டி கொண்டு மடை திருப்பும்’ முறையிலிருந்து பலகாலமாகவே மாறவில்லை. காலத்தின் கட்டாயம், சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் என்று அதிலும் இப்போது மாற்றங்கள் பரவிக் கொண்டிருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பாசனத்தைப் பொறுத்தவரை நிலத்தின் தன்மை தண்ணீரின் அளவு போன்ற காரணிகளை வைத்து அவரவர்க்கு வசதியான பாசன முறைகளைப் பயன்படுத்துவதில் தான் வெற்றியே இருக்கிறது. இதில் சொட்டுநீர்ப்பாசனம் போலவே விவசாயிகளுக்கு வலுவாகக் கைகொடுக்கும் மற்றொரு பாசனம்தான் இந்த தெளிப்பு நீர். கோயம்புத்தூர் மாவட்டம், பச்சார்பாளையம் ஜெகநாதனின் தோட்டத்தில், கொடைக்கானல் மலைச்சாரல் போல, நாலாபக்கமும் தண்ணீர் சிதறிக் கொண்டிருக்க.. சிலிர்த்து தலையாட்டிக் கொண்டிருந்தன, நான்கு அடி உயரத்துக்கு மேல் செழித்து வளர்ந்திருந்த தீவனப்புற்கள். அதையெல்லாம் ரசித்தபடியே அவரிடம் பேச்சுக் கொடுத்த போது கடகடவென பேச ஆரம்பித்தார் தெளிப்புநீர் பெருமையை
வேலை மிச்சம்
“இந்த இடத்துல 6 ஏக்கர் பூமி இருக்கு. பம்ப் செட்டோட கிணறு இருக்கு - ஆள்பற்றாக்குறைப் பிரச்சனையால் பிஞ்சு வெள்ளாமையை விட்டுட்டு, தென்னை, வாழைனு நானும் மாறிட்டேன். தென்னைக்கும், வாழைக்கும் வட்டப்பாத்தி போட்டு சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கேன். இதுல வேலையே கிடையாது. சுவிட்சைப் போட்டு விட்டபோதும். தானா, சுத்தி சுத்தித் தண்ணீர் அடிச்சுடும்.
தீவனப்புல்லுக்கு ஏற்றது

கோ 3 புல் ஐந்து வருடம் வரைக்கும் மறுதழைவு வந்துகிட்டே இருக்கும். தண்ணீர்ரையும் அதிகம் குடிக்கும். இது நல்லா அடர்த்தியா வளர்ற பயிர்ங்கறதால், பாசனம் பண்றப்போ ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கிப் போயிடும். அதோட இந்தப் புல்லு நம்ம உடம்புல பட்டா அரிக்கும். ஆக, வாய்க்கால் மூலம் சுலபமா பாசனம் பண்ண முடியாது. அதனால்தான், தெளிப்புநீர்ப் பாசனத்தை அமைத்து விட்டேன். அரை ஏக்கர்ல ஏழடி உயரத்துல 50 தெளிப்பான் போட்டிருக்கேன். இதுக்கு மானியம் இல்லாம ஆறாயிரம் ரூபாய் செலவாச்சு 3 வருடம் வரைக்கும் பழுதில்லாமல் இயங்குனும் சொல்றாங்க. ஒரு தெளிப்பானில் இருந்து 15 அடி சுற்றளவுக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். மேல் இருந்து தண்ணீர் கொட்டுவதால் பயிர் முழுவதும் நனைந்து, மழை பெய்த மாதிரி சூழ்நிலை உருவாகிடுது.

மின்சாரம் மிச்சம்
பயிர் நல்ல செழிப்பா வளர்றதோட புல்லுல இருக்குற சுனையும் தண்ணீரில் அடிச்சுட்டுப் போயிடுது. அதனால அறுவடை பண்றப்ப அரிப்பு எற்படுவதில்லை. அரை ஏக்கருக்கு வாய்க்கால் மூலமா பாசனம் செய்ய இரண்டு மணி நேரம் பிடிக்கும். இந்த முறையில் முக்கால் மணி நேரம் மோட்டார் ஓடினா போதும். அதனால் கரன்ட்டையும் மிச்சப்படுத்த முடியும். இதுக்கு மானியமும் கிடைக்குது. ஒரு அறுப்பு முடிந்ததும் கோழி எரு 500 கிலோவை தோட்டத்துல விசிறி விடுவேன். இதைத்தவிர உரங்கள் எதுவும் கொடுக்கறதில்லை துளி இடம் கூட மிச்சமில்லாம தெளிப்பு நீர் விழறதால தீவனப்பயிரும் ஒரே சீரா வளர்ந்து மகசூல் கொடுக்குது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த நீர் மேலாண்மை நிபுணர், பொறியாளர்.சு.ராஜாமணி, தெளிப்பு நீர்ப் பாசன சங்கதிகளை, தொழில்நுட்பத் தகவல்களுடன் சேர்த்தே சொன்னார் இப்படி. “தீவனப்பயிர்களுக்கு மட்டும் தான் தெளிப்புநீர்ப்பாசனம் அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிலக்கடலை, பீட்ரூட், வெங்காயம், முள்ளங்கி, கொத்தமல்லி என பல பயிர்களுக்கும் இப்பாசன முறையை அமைத்து தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக செலவழிக்க முடியும்.

திறந்தவெளி வாய்க்கால் வழியே ஓடும் நீர் ஆவியாதல் நீண்டதூரம் செல்லும் நீர் கசிந்து மண்ணில் இறங்குதல் எலிவங்கு, எறும்புக்குழி, பூமி வெடிப்பு போன்றவைகளால் ஏற்படும் நீர் சேதாரம் ஆகியன முழுமையானப் பாசனத்துக்குத் தடையாக இருக்கின்றன. இதன் மூலம் 40% தண்ணீர் விரயம்தான் ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால், கருவிகள் மூலமான பாசனத்தில் துளிகூட சேதாரம் இன்றி பயிர்களுக்கு சீராக நீர் சென்றடைகிறது. திறந்தவெளிப்பாசனத்தில் மடைதிறந்து விட ஆள் தேவைப்படும். ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைந்தபட்சம் 5 குதிரைத்திறன் பம்ப் செட் மோட்டாருக்கு 3 மணி நேரம் பிடிக்கும். ஆனால், கருவி நீர்ப்பாசனத்தில் பத்து ஏக்கருக்குகூட ஒரே நேரத்தில் பாசனம் செய்யலாம். ஒரே ஆள் 100 ஏக்கர் நிலத்துக்குக்கூட மடை திருப்பலாம். 500 கிலோவை தோட்டத்துல விசிறி விடுவேன். இதைத்தவிர வேறு உரங்கள் எதுவும் கொடுப்பது இல்லை. துளி இடம் கூட மிச்சமில்லாம தெளிப்பு நீர் விழறதால். தீவனப்பயிரும் ஒரே சீரா வளர்ந்து மகசூல் கொடுக்கும். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்த நீர் மேலாண்மை நிபுணர், பொறியாளர் சு.ராஜாமணி, தெளிப்புநீர்ப்பாசன சங்கதிகளை, தொழில்நுட்பத் தகவல்களுடன் சேர்த்தே சொன்னார் இப்படி.

“தீவனப்பயிர்களுக்கு மட்டும்தான் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிலக்கடலை, பீட்ரூட், வெங்காயம், முள்ளங்கி, கொத்தமல்லி என பல பயிர்களுக்கும் இப்பாசன முறையை அமைத்து தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக செலவழிக்க முடியும். திறந்தவெளி வாய்க்கால் வழியே ஓடும் நீர் ஆவியாதல் நீண்டதூரம் செல்லும் நீர் கசிந்து மண்ணில் இறங்குதல் எலிவங்கு, எறும்புக்குழி, பூமி வெடிப்பு போன்றவைகளால் ஏற்படும் நீர் சேதாரம் ஆகியன முழுமையானப் பாசனத்துக்குத் தடையாக இருக்கின்றன. இதன் மூலம் 40 தண்ணீர் விரயம்தான் ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால், கருவிகள் மூலமான பாசனத்தில் துளிகூட சேதாரம் இன்றி பயிர்களுக்கு சீராக நீர் சென்றடைகிறது. திறந்தவெளிப் பாசனத்தில் மடைதிறந்துவிட ஆள் தேவைப்படும். ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைந்தபட்சம் 5 குதிரைத்திறன் பம்ப்-செட் மோட்டாருக்கு 3 மணி நேரம் பிடிக்கும். ஆனால், கருவிநீர்ப் பாசனத்தில் பத்து ஏக்கருக்கு கூட ஒரே நேரத்தில் பாசனம் செய்யலாம் ஒரே ஆள் 100 ஏக்கர் நிலத்துக்கு கூட மடை திருப்பலாம்.

தெளிப்புநீர்ப் பாசனம் அமைக்கும்போது, பிரதா தண்ணீர் குழாய்களை மட்டும் சாகுபடி வயலில் நிரந்தரமாகப் பதித்துக் கொள்ள வேண்டும். தெளிக்கும் கருவியை மட்டும் ஒவ்வொரு வரிசையிலும் பாசனம் முடிந்த பிறகு மாற்றி மாற்றிப் பொருத்திக்  கொள்வது, கருவிகளுக்கான செலவைக் குறைக்கும் யோசனையாக இருக்கும். இந்தக் கருவிகள் ‘பிளாஸ்டிக்’ தயாரிப்பு என்பதால், பழுதாவதற்கான வாய்ப்புகள் குறைவு தண்ணீர் ஆற்றல் மூலமே தெளிப்பான இயங்குவதால் மோட்டாருக்கும் அதிக வேலை இருக்காது 5 ஹெச்.பி. மோட்டார் உள்ள பாசனக் கிணற்றிலிருந்து இரண்டு சர்க்யூட்டாக பிரித்து, எந்த பயிராக இருந்தாலும், ஒரு மணி நேரத்தில் பாசனம் செய்யலாம்” “ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் செலவில் இதை அமைத்துக் கொள்ளலாம். இந்த பத்தாயிரம் ரூபாய்கூட புதிய செலவு என்று சொல்லத் தேவையில்லை. தெளிப்புநீர்ப் பாசனத்துக்கு வாய்க்கால், வரப்பு, பாத்தி எதுவும் தேவை இல்லை என்பதால், ஏற்கெனவே அதற்காக செலவிட்டுக்  கொண்டிருக்கும் பத்தாயிரம் ரூபாயை அப்படியே திருப்பிவிடுகிறோம். அவ்வளவே என்று எளிமையாகப் புரிய வைத்தார்.

தொடர்புக்கு
ஜெகநாதன்,
பச்சார்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்
செல்போன்: 99761-43084
ராஜாமணி செல்போன்: 9443357180

பலன் தரும் பாரம்பரியக் கருவிகள்

10.4.2012
கருவிகள் எத்தனை எத்தனை என அணிவகுத்து சந்தைக்கு வந்தாலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் எளிய கருவிகளுக்கு அவை ஈடு இல்லை, என்பது தான் உண்மை. அதிலும், நெல் சாகுபடிக்கென்றே பற்பல கருவிகளை முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இன்றளவும் கூட பல பாகங்களிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான விவசாயிகள் பயன்படுத்தியும் வருகிறார்கள். நாகர்கோவில்-பூதப்பாண்டி சாலையில் பன்னிரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது. இந்தப் பகுதி முழுவதும் நெல்தான் பிரதானப் பயிர் நவீன இயந்திர சாகுபடிக்கு மத்தியில் பூட்டி உழவு அடிப்பது, அறுவடை இயந்திரங்களுக்கு விடை கொடுப்பது, பாரம்பரியக் கருவி பயன்படுத்துவது என அதிசயிக்க வைக்கிறார்கள்.

விதை சேமிக்க குலுக்கை
கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினராக பதவி வகிக்கும், இப்பகுதியின் முன்னோடி விவசாயி செண்பக சேகரன் பிள்ளை, அந்தப் பாரம்பரிய பெருமையை நம்மிடம் பேசும்போது பலவிதமான கருவிகளையும், அவற்றின் செயல்பாட்டையும் எடுத்து வைத்தார் அழகாக. “அந்தக் காலத்தில் நெல் விதையை விவசாயிகள் வெளியில் காசு கொடுத்து வாங்க மாட்டாங்க அவங்கவங்களுக்குத் தேவையான விதையை, அவங்களே உற்பத்தி பண்ணி எடுத்து வைத்துக்கொள்வார்கள். ஒரு கோட்டை (87 கிலோ) அளவுக்கு விதைநெல்லை, சாணம் போட்டு மொழுகின மண் தரையில் பரப்பி மூணு நாள் வெயில்ல காய வைப்போம். பிறகு, நிழலில் உலர்துவோம். அதற்கு பிறகு, குலுக்கையில் நெல்லைப்போட்டு .. ஆட்டுக்கழிவு, புங்கன் இலை, வேப்பிலை, நொச்சி இலை எல்லாத்தையும் போட்டு மூடி வைத்துவிட்டால் . எந்தப் பிரச்சனையும் இல்லாம விதை பாதுகாப்பா இருக்கும்.

குலுக்கையோட கீழ்ப்பகுதியில் ஒரு கை நுழையுற அளவுக்கு சின்னதா துவாரம் இருக்கும். அதுல, கொட்டாங்குச்சியை வைத்து அடைத்து, சாணம் போட்டு பூசிவிடுவோம். கொட்டாங்குச்சியில் ஒரு கயிறு இருக்கும். தேவைப்படும்போது கயிற்றை இழுத்தா விதைநெல்கொட்டும். மின்சார கவலை தீர்க்கும் இறவட்டி குளங்களில் இருந்துதான் வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வரும் குளத்தில் உள்ள தண்ணீர், மடை மட்டத்தைவிட குறைந்தால் வாய்க்காலுக்குத் தண்ணிர் வராது. அந்த மாதிரி சமயங்களில் இறவட்டிங்கற கருவியைப் பயன்படுத்தி ஏற்றிவிடுவோம்.

அப்படி செய்கிறபொழுது நல்ல உடற்பயிற்சியாவும்உற்சாகம் தரும் ஊடு மண்வெட்டி கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்தவரை பங்குனி, சித்திரை மாதங்களில் கனமழை இருக்கும் அப்பொழுது ஐந்து முறை புழுதி உழவு ஒட்டி நேரடியாகவே நெல்லை விதைச்சுடுவோம். இப்படி கையால தூவி விடுகிறபொழுது சில இடங்களில் நெருக்கமாகவும், சில இடங்களில் பரவலாகவும் விழுந்துவிடும். அதனால் பயிரும் அப்படியே வளர ஆரம்பிச்சுடும். இப்படி நெருக்கமாக இருக்கிற பயிரைக் களைச்சு வேற இடத்துல நட வேண்டி இருக்கும். இதுக்கா ஊடு மண்வெட்டி என்கிற கருவியைப் பயன்படுத்துவோம். நீளமான கம்போட சிறியதாக இருக்கும். இதை வைத்து எடுக்கும்பொழுது வேர் அறுபடாமல் எடுத்துவிடலாம். ஏற்கெனவே பயிர் இருந்த மண்ணோட எடுத்தும் நட்டுவிடலாம்.

களைவிடுதல்
நாற்றங்கால் தயாரிப்புக்கு ஏழு அடி நீளம் உள்ள உருண்டை மூங்கில் கம்பை, களை விடும் கருவியாக பயன்படுத்துவோம். விதை தூவிய பிறகு, இந்தக் கம்பை வைத்து வயலில் உருட்டி விடுவோம். இதனால நாற்றங்கால் சமதளமா மாறிடும். நெல்லும் பழுது இல்லாம முளைத்து வரும். களையும் தலைதூக்காது, ஒரு ஏக்கர்ல விதைக்க எட்டு சென்ட் அளவுக்கு நாற்றங்கால் போடுவோம்.

பொழித்தட்டுப்பலகை
நிலத்தைச் சமப்படுத்த பொழித்தட்டு’னு ஒரு தட்டையான பலகையைப் பயன்படுத்துவோம். இதை நிலத்துல போட்டு தேய்த்து சமப்படுத்துவோம்.

இதெல்லாம் சின்னச் சின்ன வேளாண்மைக் கருவிகள்தான்னாலும், தமிழர்களோட வரலாற்றைச் சொல்கிற பாரம்பரியமான கருவிகள். இப்பொழுது இருக்கிற இளம் தலைமுறை விவசாயிகளுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குது.  அவர்கள் இதைப்பயன்படுத்தலனா கூட, இதோட அருமை, பெருமைகளை தெரிஞ்சுக்கவாவது செய்யணும். அது எதிர்காலத்தில் நிச்சயமா பலன் தரக்கூடியதா இருக்கும்.

தொடர்புக்கு
செண்பகசேகரன் பிள்ளை
அலைபேசி: 98947-62064

மா சாகுபடி ... கன்றில் கவனம் வைத்தால், கடைசி வரை லாபம்தான்!

25.4.12
மா சாகுபடிக்கு மணல் கலந்த செம்மண் ஏற்றது. புதிதாக மா கன்றுகளை நடவு செய்யும் போது ரகங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். நல்ல விலை கிடைக்கும் என்று ஏதாவது ஒரு வெளி மாநில ரகத்தை வாங்கி விடக் கூடாது. நமது பகுதியில் நல்ல விலை கிடைக்கும் ரகங்கள், அதே சமயத்தில் அதிக விளைச்சல் கொடுக்கும் ரகங்கள் என்று தேர்வு செய்து நடவேண்டும்.

அப்படியே நடக்கூடாது !
தரமான நர்கரிகளில் கன்றுகளை வாங்க வேண்டும். வாங்கி வந்த கன்றுகளை உடனே நடவு செய்து விடாமல்.. நடவு செய்ய உள்ள நிலத்தின் மேல் மண்ணை, கன்று இருக்கும் பையில் இட்டு, தோட்டத்தில் வழக்கமாக பாசனத்திற்குப் பயன்படுத்தும் அதே நீரைத் தெளித்து நிழலில் வைத்திருந்து, புதிய தளிர்கள் வரும் வரை காத்திருந்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கன்றுகளின் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.
கன்றுகளுக்கு இடையே 30 அடி இடைவெளி கொடுக்கலாம். அடர் நடவு முறையில் 15 அடி இடைவெளியிலும் தற்போது நடுகிறார்கள். மண்ணின் வளம், நீர் வசதி, நடவு செய்யும் ரகத்தின் வளர்ச்சி விகிதம் ஆகியவையின் அடிப்படையில்தான் இடைவெளியைத் தீர்மானிக்க வேண்டும். ரகம், இடைவெளி ஆகியவற்றைத் தீர்மானித்த பிறகு 2 கன அடியில் குழிகளை எடுத்து ஆறப்போட வேண்டும். தலா 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, 3 கிலோ தொழுவுரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றுடன் கொஞ்சம் மேல் மண்ணைக் கலந்து ஒவ்வொரு குழியிலும் இட்டு கன்றை நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் தேங்கக் கூடாது !
கன்றுகளை நடவு செய்யும் போது அடிப்குதிக்கு அருகே பக்கவாட்டில் கிளைகள் இருந்தால், அதை வெட்டி விட வேண்டும். வெட்டிய இடத்தில்  காப்பர் ஆக்சிக் – குளோரைடு பசையைத் தடவிவிட வேண்டும். நம் உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்து போடுவதைப் போலத்தான் இதுவும். பாசனத்தைப் பொருத்தவரை சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. குழிகளில் ஈரம் காயாதவாறு பாசனம் செய்தாலே போதும். அதே நேரத்தில் கன்றின் மையத் தண்டுப்பகுதியைச் சுற்றி தண்ணீரைத் தேங்க விடக்கூடாது. இதைச் சரியாகச் செய்தாலே, பாதி நோய்களைத் தடுத்து விடலாம். நடவு செய்த ஆறாவது மாதம், தளிர்களில் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருப்பதற்காக, ஏதேனும் ஒரு வளர்ச்சி ஊக்கியுடன் கூடிய பூச்சிக்கொல்லி அல்லது பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டில், ரசாயனம் அல்லது இயற்கை என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மழைக் காலத்திற்கு முன்பாக உரத்தைக் கொடுக்க வேண்டும்.

மரத்தின் வளர்ச்சி, மண்ணின் தன்மை, பாசன வசதி ஆகியவை நன்றாக இருந்தால்,.. மூன்றாம் ஆண்டிலேயே மரங்கள் பூக்கத் தொடங்கி விடும். அப்போது மரத்தின் வளர்ச்சியைப் பொருத்து.. அதன் தாங்கும் திறனின் அடிப்படையில் துவையான அளவிற்கு மட்டும் பூக்களை அனுமதிக்க வேண்டும். அதிகப்படியாக உள்ள பூக்களை உருவி விடுவது நல்லது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதே முறையைக் கடைபிடிக்க வேண்டும். அந்த நேரத்தில் மண்ணின்  வளத்திற்கு ஏற்ப  பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை சிபாரிசு செய்யப்பட்ட அளவிற்கு கொடுக்க வேண்டும். மண் பரிசோதனை மூலம், நமது மண்ணில் என்னென்ன சத்துக்கள் அதிகமாக உள்ளன, எது குறைவாக உள்ளது? எனத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப, சத்துக்களைக் கொடுக்க வெண்டும். இரண்டு இட்லி சாப்பிடும் நபருக்கு 10 இட்லியும், 10 இட்லி சாப்பிடும் நபருக்கு இரண்டு இட்லியும் கொடுப்பது போன்றதுதான் மண்ணிலுள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் உரமிடுவதும்.

காய்க்க ஆரம்பித்த பிறகு, காயோட வளர்ச்சிக்காக ஒரு முறை இயற்கை வளர்ச்சி ஊக்கி தெளிக்கணும். நன்றாக  விளைந்த காய்களை 80 சதவிகிதம் முத்தின நிலையில் அறுவடை செய்யணும். சிலர் 50% முத்தினதும் பறித்துவிடுவாங்க. இது தப்பான விஷயம். காய்களை அடிபடாமல் பறிக்கணும் என்பதும் முக்கியம். அப்போதுதான் அது நல்லபடியாக பழுத்து வரும். அதே போல் பேக்கிங் விஷயத்திலும் கவனமாக இருக்கணும். இப்ப எல்லாம் பேக்கிங் செய்வதற்கு நிறைய வசதிகள் வந்துவிட்டது. அதைப் பயன்படுத்தி காய்களை அடைத்து விற்பனைக்கு அனுப்பினால் கூடுதல் லாபம் கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது என்றார் செளந்திரராஜன்.

பெங்களூராவைக் காயாகவே விற்கலாம் !
பெங்களளூரா விவசாயிகள் கவனத்திற்காக செளந்திரராஜன் சொன்ன சந்தைத் தகவல் : பெங்களூரா ரகத்தின் விலை, பழக்கூழ் தொழிற்சாலைகளின் தேவையின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு பழக்கூழ் நிறுவனங்கள் உற்பத்தி செய்த கூழ், இன்னும் இருப்பில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பெங்களூரா ரகம் அதிகளவில் விளைந்துள்ளது. இதனால் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் நல்ல விளைச்சல் இருந்தாலும், விலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள், பெங்களூரா ரகத்தைப் பயிரிட்ட விவசாயிகள். இதைச் சமாளிக்க, கறிக்கான காயாக விற்பதுதான் நல்ல வழி. டிசம்பர் மாத இறுதியில், கிறஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக ஒட்டன்சந்திரம் சந்தையில் இருந்து, டன் கணக்கில் கறி மாங்காய்கள், கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. அப்போது கிலோ 25 ரூபாய் வரைகூட விலை கிடைக்கும். இந்தச் சந்தைத் தேவையை மனதில் வைத்து, காய்களாகவே அறுவடை செய்து லாபம் பார்க்கலாம். இதற்கு வசதியாக இந்த ரகக் காய்களை ( கார் காய்)  டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்து விற்கலாம். இந்த சீஸனில் காய்த்துக் குலுங்கச் செய்வதற்கும் தொழில்நுட்பங்கள் கைவசம் உள்ளன.

தொடர்புக்கு
செளந்திரராஜன், செல்போன் :98421 – 28882
தேவநாதன் , செல்போன் : 94422 -17079

மலைவேம்பு.. மானாவாரியிலும்.. மகசூல்...

25.4.12
குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்தாலும், நிறைவான வருமானம் தரக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது, மலைவேம்பு. பிளைவுட், தீக்குச்சி. காகிதம்.. என பல பொருட்களுக்கு மூலப்பொருளாக மலைவேம்பு இருப்பதால், நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை உணர்ந்த பலரும் தற்போது மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தரமற்ற நாற்றுக்கள், போதிய தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைவேம்பு சாகுபடியில் சில பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில், இத்தகைய பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கிலும்.. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வகையிலும், ‘ஒட்டு ரக மலைவேம்பு’க் கன்றுகளை உருவாக்கியருக்கிறார். தமிழக வனத்துறையின் முன்னாள் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் குமாரவேலு!

மாதம் ஒரு லட்சம் டன்!
சவுக்கு, மூங்கில் , தேக்கு.. என்று ஏகப்பட்ட மரங்கள் இருந்தாலும், மலைவேம்பு மரம் சீக்கிரமாகவே வளர்ந்துவிடுவது விவசாயிகளுக்கு விரைவான பலன் தருவதாக இருக்கிறது. தீக்குச்சித் தொழிற்சாலைகளுக்கு ஒரு மாதத்திற்க்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் டன் அளவிற்க்கு மலைவேம்பு மரம் தேவைப்படுகிறது. காகித ஆலைகளுக்கு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 5 லட்சம் டன் அளவு மரம் தேவைப்படுகிறது என்பதால், விற்பனையில் எந்தப்பிரச்சனையும் இல்லை.

விதைக்கன்றுகளில் தரமில்லை !
ஆனால், நல்ல வளர்ச்சியுள்ள தரமான கன்றுகள், குறைந்த விலையில் கிடைப்பதில்லை. நன்றாக வளர்ந்த பெரிய மரங்களில் இருந்துதான் விதைகளைத் தேர்வு செய்து கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பெரும்பாலான பண்ணைகளில் நல்ல விதைகளைத் தேர்வு செய்யாமல், தரமில்லாத கன்றுகள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், மரங்களின் வளர்ச்சி சீராக இருப்பதில்லை.

கைகொடுக்கும் குளோனிங் கன்றுகள் !
2008 ஆம் ஆண்டு நான் பணி ஓய்வு பெற்ற பிறகு, தமிழ்நாடு புகளூர் காகித ஆலை நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்தேன். அப்போது தரமான , நன்றாக  வளர்ச்சியடைந்த மரங்களைத் தேர்வு செய்து, தரமான வித்துகள் மூலம் ‘திசு வளர்ப்பு’ முறையிலும், குளோனிங் (விதை இல்லா இனப்பெருக்க முறை) முறையிலும் கன்றுகளை உற்பத்தி செய்து, ஆய்வுகளை மேற்கொண்டோம். அவை சிறப்பாக வளாந்து வந்தன. அதனால், அந்த ஆலையில் தற்போது ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் அளவில் ‘குளோனிங்’ கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மிகமிகக் குறைவாக 6 ரூபாய் விலையில் விநியோகிக்கப்படுகின்றன. மலைவேம்புக் கன்றுகள் குறித்தத் தகவல்கள் தேவைப்படுபோர், புகளூர் காகித ஆலை நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். சின்னராஜ் மற்றும் முனைவர்.செழின் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்’ என்ற வழிகாட்டுதல் தந்தார் குமாரவேலு.

வறட்சிப் பகுதிகளுக்கு ஒட்டுக்கன்றுகள் !
தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், மரங்கள் வளர்க்க போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. மலைவேம்புக்கும் இந்தப் பிரச்சனை உண்டு. அதனால் தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் மலைவேம்பை எப்படி வளர்ப்பது என்று யோசனை செய்த போதுதான், வேப்ப மரத்துடன் ஒட்டுக்கட்டும் யோசனை  தோன்றியது. வேப்ப மரத்தில் இருக்கும் ஆணிவேர் 10 மீட்டர் ஆழம் வரை செல்லும் தன்மையுடையது. அதனால், பூமிக்கடியில் உள்ள தண்ணீரை எளிதில் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். மேலும் களர் மற்றும் உவர் மண் பூமியிலும் சிறப்பாக வளரும். வேப்ப மரமும், மலைவேம்பு மரமும் ‘மீலியேசியே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்தத் தாவரங்கள், அதனால் தான், இரண்டையும் ஒட்டுக் கட்டினால் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கன்றுகள் கிடைக்கும்.

ஒரு நாற்று ஏழு ரூபாய் !
“நெய்வேலி அருகிலிருக்கும் இந்த வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், குளோனிங் முறையில் மலைவேம்பு கன்றுகளை உருவாக்கி, விற்பனை செய்துவருகிறார். தற்போது, தனியார் நாற்றுப் பண்ணைகளில் ஒரு மலைவேம்பு கன்றை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். ஆனால் இவர், குளோனிங் முறையில் உற்பத்தி செய்யும் கன்றுகள 7 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். ஒரே வயதுடைய வளமான நாட்டு வேம்பு மற்றும் மலைவேம்புக் கன்றுகளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு நாட்டு வேம்பின் மேல்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, அடிப்பகுதியையும், மலைவேம்புச் செடியின் அடிப்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, மேல் பகுதியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெட்டி வைத்திருக்கும் மலைவேம்பு கன்றின் தண்டு பாகத்தின் முனைப் பகுதியில், ஒரு பக்கத்தை மட்டும் சீவிக் கொள்ள வேண்டும். பிறகு, நாட்டு வேம்பின் தண்டை கொஞ்சம் போல் இரண்டாகப்  பிளந்து, அதன் மையத்தில் மலைவேம்பு தண்டின் சீவிய பாகத்தை வைத்து, பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு காற்று புகாத அளவிற்கு இறுக்கிக் கட்ட வேண்டும். பிறகு, நிழல் வலையில் 20 நாட்கள் வைத்திருந்தால் துளிர் வரும். பிறகு, கன்றுகளை வேறு இடத்தில்  மாற்றி நடவு செய்யலாம். இது மிகமிக எளிதான தொழில்நுட்பம்.

இடைவெளி கணக்கில்லை
மலைவேம்பக் கன்றுகளை 10அடி, 9 அடி, 5 அடி என நமது இடவசதியைப் பொறுத்து, தெவைக்கு ஏற்ற அளவில் இடைவெளி கொடுத்து, நடவு செய்து கொள்ளலாம். 10 அடி அடைவெளியில் நடவு செய்தால், ஏக்கருக்கு சராசரியாக 350 முதல் 400 கன்றுகள் தேவைப்படும். 9 அடி இடைவெளி என்றால், 540 கன்றுகளும், ஐந்தடி இடைவெளி என்றால், 1,000 முதல் 1,200 கன்றுகளும் தேவைப்படும். வரப்பு ஓரங்களில் 3 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்யலாம். இதற்கு ஏக்கருக்கு 80 முதல் 100 கன்றுகள் தேவைப்படும். மூன்று அடி சதுரம், மூன்றடி ஆழத்தில் குழி எடுத்து.

மண்புழு உரம் – 2 கிலோ, வேம் ( வேர் வளாச்சி உட்பூசணம்) – 50 கிராம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றில் தலா 20 கிராம் இவற்றை மண்ணோடு கலந்து இரண்டு அடி ஆழத்திற்க்கு குழியை நிரப்பி, மையத்தில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒட்டுப் பகுதி, குழியின் உள்ளே, இருப்பது போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், முழுவதுமாக  மண்ணைப் போட்டு மூடி விடக்கூடாது. அதாவது, ஒட்டுப்பகுதியானது மண்ணால் மூடப்படாமல் இருக்க வேண்டும். கன்று வளரத் தொடங்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக மூடி வரவேண்டும். ஒரு வருடத்தில் முழுவதும் மூடிவிடலாம். ஒட்டுக் கன்றுகளுக்கு சொட்டு நீர் மூலம் குறைந்த அளவு தண்ணீர் கொடுத்து வந்தால், போதுமானது. தண்ணீர் வசதி அதிகமாக இருந்தால், ‘குளோனிங்’ கன்றுகளை நடவு செய்யலாம். தேவையைப் பொறுத்து உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.
ஒன்பது ஆண்டுகளில் ரூ.20 லட்சம் !
9 அடிக்கு 9 அடி இடைவெளயில் நடவு செய்த மரங்கள். மூன்று வருடங்களில் 45 சென்டி மீட்டர் சுற்றளவிற்க்கு வரும். அப்போது, ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்று வெட்டி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு  ஏறத்தாழ, 35 டன் அளவிற்க்கு மகசூல் கிடைக்கும். ஒரு டன், 5 ஆயிரம் ரூபாய் என்று விற்பனை செய்ய முடியும்.
மீதி மரங்கள், அடுத்த மூன்றாண்டுகளில் ( நடவு செய்து ஆறு ஆண்டுகள்) 100 சென்டி மீட்டர் சுற்றளவிற்க்கு வந்து விடும். இவற்றிலும் ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்று வெட்டினால்.. 90 மரங்கள் வரை கிடைக்கும். ஒரு மரத்தை 6 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்ய முடியும்.
இப்போது வெட்டியது போக 90 மரங்கள் வரை நிலத்தில் மிச்சமிருக்கும். இவை அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் ( நடவு செய்து பத்து ஆண்டுகள்) 150 சென்டி மீட்டர் முதல் 200 சென்டி மீட்டர் வரை சுற்றளவிற்க்கு வந்து விடும். அந்த சமயத்தில் ஒரு மரத்தை 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். இந்தக் கணக்கில் பார்த்தால்.. 10 வருடங்களில் ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
தொடர்புக்கு
முனைவர் : குமாரவேலு, செல்போன் : 9600 – 73059
முனைவர் : செழியன் (புகளூர் காகித ஆலை) செல்போன் : 94425 – 91412