வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

காயல் ஸ்பெஷல் நட்ஸ் & மட்டன் பிரியாணி

ரமலான் சமையல்-29 (நிறைவு பகுதி)

ரமலான் சமையல் பகுதி இன்றுடன் நிறைவடைகிறது. இன்ஷா அல்லாஹ் நாளை ஈத் பெருநாளாக இருக்கலாம். ஆகவே நாளைய பெருநாள் சமையலுக்காக முத்தான மூன்று சமையல் குறிப்புகளை இங்கு தருகிறேன். செய்து,உண்டு மகிழ்வோடு பெருநாளை கொண்டாடுங்கள்.

அனைவர்க்கும் என் இதயங் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!!




காயல் ஸ்பெஷல் நட்ஸ் & மட்டன் பிரியாணி 

 





தேவையான பொருட்கள்:
பாஸ்மதிஅரிசி ‍ - 1/2கிலோ
பல்லாரி ‍வெங்காயம்-  1/4கிலோ
சிறிய தக்காளி ‍-  2
பச்சை மிளகாய் - 9- 12
மிள‌காய்த்தூள் ‍ - 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா 3
ரம்ப இலை-  ‍ 2 துண்டு (நறுக்கியது கொஞ்சம்)
எலுமிச்சைப்ப‌ழ‌ம் ‍-  1
நெய் ‍ - 100 மில்லி
தேங்காயெண்ணெய் 50 மில்லி 
உப்பு ‍ - தேவைக்கு.

 தயிர் ‍ - 1/2 கப்
‍மட்டன் ‍-  1/2 கிலோ
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1/4கப்
கொத்தமல்லி, புதினா ‍ சிறிய கட்டு
அரைக்க:
தேங்காய்த் துருவல்  2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால் கால் முறி கூட சேர்க்கலாம்.)
க‌ச‌க‌சா ‍ 10கிராம்
முந்திரி 10கிராம்
பாத‌ம் 10கிராம்
பிஸ்தா 10கிராம்
 நட்ஸ் ஊறவைத்து தோல் நீக்கி எடுக்கவும்,அத்துடன் கசகசா, தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். நட்ஸ் நம்ம டேஸ்டிற்கு தக்கபடி குறைத்து கூட போடலாம்.

சுத்தம் செய்த மட்டனுடன்  கால் கப் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு,தேவைக்கு உப்பு  சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.ஊறிய  மட்டனை குக்கரில் 4 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன்.

பிரியாணி செய்யும் பாத்திரத்தில் 50 மில்லி நெய், 50 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.காய்ந்து வரும் பொழுது பட்டை,கிராம்பு,ஏலக்காய்,ரம்பை இலை தலா 2  சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்,நன்கு வதக்கவும்.
 நன்கு வதங்கியதும் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு,மீதி கால் கப் தயிர் சேர்க்கவும்.

 நன்கு வதக்கவும்.

 தக்காளி,பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு போட்டு மசியவிடவும்.
 வேகவைத்த மட்டன்  அதனில் இருக்கும் தண்ணீருடன் சேர்க்கவும்.அல்லது நேராகவே ஊறிய மட்டனும் சேர்க்கலாம். வேக நேரம் ஆகும் என்பதால் ஊறிய மட்டனை தனியாக வெந்து சேர்த்து விட்டேன்.
 அரைத்த விழுது,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.கறியை பிரட்டி ஒரு சேர வேகவிடவும்.

 கறி நன்கு வெந்து எண்ணெய் மேலே வரும், அடுப்பை குறைத்து மூடி போடவும்.எலுமிச்சை பழம் பிழியவும்.அடியில் அரைத்து விட்ட நட்ஸ் தேங்காய் அடியில் பிடிக்கும் ,பார்த்து கிளறிவிடவும்.தேவைக்குஅரை -1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.உப்பு சரி பார்த்து கொள்ளவும்.

சோறு தனியாக தாளிக்க:

 வேறு ஒரு பாத்திர‌த்தில் மீதி 50 மில்லி நெய் ஊற்றி காய்ந்த பின்பு கிராம்பு, பட்டை,
ஏலம் தலா 1 சேர்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வ‌த‌க்க‌வும். அரிசிக்கு ச‌ம‌மாக‌
த‌ண்ணீர், வைத்து கொதிக்க‌ வைக்க‌வும். இதில் ஊற‌ வைத்த‌ அரிசியினை
சேர்க்க‌வும். தேவையான‌ அள‌வு உப்பு சேர்த்து 3/4பாக‌ம் வேக‌ வைத்து
இற‌க்க‌வும்.மல்லி புதினாவும் சிறிது சேர்க்கலாம்.



 பிரியாணிக்கு வேண்டிய சோறு தாளித்து ரெடியாகிவிட்டது.
ரெடியான கறியில்  தாளித்த சோறை தட்டவும்.
 ஒரு போல் பரத்தி விடவும்.

 மூடி போட்டு அடுப்பை மிக சிம்மில் வைத்து 20 நிமிடம் தம் போடவும்.
 திறந்து,ஒரு போல் பக்குவமாக  பிரட்டி விட்டு பரிமாறவும்.


கமகமக்கும் காயல்பட்டிணம் ரிச் நட்ஸ் மட்டன் பிரியாணி ரெடி.
குறிப்பு: சகோ.ஃபாயிஜா,ஆஸியா உமர்


கீமா சப்பாத்தி

மட்டன் பிரியர்களுக்கு ஒரு சூப்பரான மற்றும் வித்தியாசமான ஒரு ரெசிபி உள்ளது. அது என்னவென்றால், மட்டன் கீமாவை வைத்து எளிமையான முறையில் ஒரு சூப்பரான சப்பாத்தி செய்யலாம். பொதுவாக இந்த சப்பாத்தியானது ஒரு மொகலாய ரெசிபி. இந்த ரெசிபியை ரம்ஜான் அன்று செய்வதற்கு ஏற்ற ஒரு ரெசிபியும் கூட. இப்போது அந்த கீமா சப்பாத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
கீமா   சப்பாத்தி
தேவையான பொருட்கள்: 
கீமா கலவைக்கு...
 மட்டன் கீமா - 500 கிராம் 
தயிர் - 1/2 கப்
 வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு
 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
 மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 தண்ணீர் - 1/2 கப் 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

சப்பாத்திக்கு...
 கோதுமை மாவு - 2 கப் 
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 1 கப் 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

முதலில் கீமாவை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்தது, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 10 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும். பிறகு கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை மட்டனை வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின், ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று சிறு வட்டமாக தேய்த்து, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் கீமாவை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக கீமா வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தயார் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கீமா சப்பாத்தி ரெடி!!! 


மட்டன் போன் புலாவ்(குக்கர் முறை)/ Mutton Bone Pulav

தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி - அரைக்கிலோ
ஆட்டு எழும்பு - அரை- முக்கால் கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
நறுக்கிய மல்லி புதினா - தலா ஒரு கையளவு
பச்சை மிளகாய் - 4
சிறிய எலுமிச்சை பழம் - 1
த்யிர் - 2டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
ஏலம் -3
பட்டை-2 துண்டு
கிராம்பு - 4
சோம்பு - அரைடீஸ்பூன்
மிளகு - அரைடீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவைக்கு.

ஆட்டு எழும்பை தேவையற்ற சவ்வு,கொழுப்பு நீக்கி சுத்தமாக கழுவி தண்ணீர் வடிய வைக்கவும்.அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும்.நறுக்க வேண்டியவற்றை தயார் செய்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காயவும்பட்டை,கிராம்பு,ஏலம்,சோம்பு,மிளகு,
பிரியாணி இலை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு சிறிது வதக்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதங்க விடவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து,சிறிது உப்பு சேர்க்கவும். பாதி மல்லி புதினா சேர்க்கவும்.வதங்கிவிடும்.மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விட்டு மட்டன் எழும்பை சேர்க்கவும்.
தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.
அரிசிக்கு ஒரு மடங்கு தண்ணீர் சேர்த்து கொதி வரட்டும்.

மட்டன் எலும்பு சேர்த்து கொதி வரவும் கரம் மசாலா சேர்க்கவும்.மூடி முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து விடவும். 20 நிமிடம் வேகட்டும்.

வெந்து இப்படி காணப்படும்.மீதி மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

இன்னொரு அளவு தண்ணீர் சேர்க்கவும்.ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும்.நன்கு கொதி வரவும் உப்பு சரி பார்த்து எலுமிச்சை சாறு கலந்து குக்கரை மூடி சிம்மில் 10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.அல்லது ஒரு விசில் வந்து அடுப்பை அணைக்கவும்.
ஆவியடங்கி குக்கரை திறந்தால் இப்படி இருக்கும்.

பிரட்டி விட்டு பரிமாறவும்.

சுவையான மட்டன் போன் புலாவ் ரெடி.
இதனை ஆனியன் ரைத்தா அவித்த முட்டையுடன் பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக